Tuesday, December 6, 2011

டிசம்பர் மாதச் சித்திரங்கள்

First Published : 05 Dec 2011 02:59:17 AM IST


வெளியூர் சென்று திரும்பிய பாரதியார் இருண்ட அறையில் கிழிந்த பாயில் சோர்வாய் படுத்திருந்த நீலகண்ட பிரம்மச்சாரியாரைக் கலக்கத்துடன் பார்க்கிறார். அவர் மெதுவாய் எழுந்து சென்று மண்பானையில் இருந்த தண்ணீரைக் குவளையில் அள்ளிப்பருகிவிட்டு மீண்டும் வந்து பாயில் படுக்கிறார்.அதைக்கண்ட பாரதி, ""என்ன பிரம்மச்சாரியாரே, உடல் நலம் சரியில்லையா?'' என்று கவலையுடன் கேட்கிறார். அமைதியாய் இருந்தவரை, பாரதி மீண்டும் மீண்டும் வினவவே, அவர் கூறுகிறார் ""என்ன செய்ய? சாப்பிட்டு நான்கு நாளாகின்றன. தண்ணீரை மட்டும்தான் குடித்துக் கொண்டிருக்கிறேன்...'' என்று சொன்னாராம்.நெல்லை மாவட்டத்தில் சுதந்திரக் கனலைப் பற்ற வைத்த வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் சேர்ந்து போராடிய ஆவேசத்துடன் முழங்கிய நீலகண்ட பிரம்மச்சாரியார் பட்டினியில் வாடி வதங்கிக் கொண்டிருப்பதைக் காணச் சகிக்காத அந்த முண்டாசுக்கவிஞன் அந்த நேரத்தில்தான் எழுதுகிறான்:"தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில்ஜகத்தினை அழித்திடுவோம்'என்று. அப்பேர்ப்பட்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் பிறந்த நாள் டிசம்பர் 2.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த ஒரு படக்கண்காட்சி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். எங்களோடு இருந்த எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸின் பேரனுமான ச. தமிழ்ச்செல்வன், மீசை முளைக்காத ஓர் இளைஞரின் படத்தைக் காண்பித்து, ""இந்த இளைஞரைத் தெரியுமா?'' என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். எங்களுக்குத் தெரியவில்லை. அவர் கூறினார்.""இவர் பெயர் குதிராம் போஸ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புரட்சிகரமான இளைஞர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கிய வெள்ளைக்கார மாஜிஸ்டிரேட்டைக் கொலை செய்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 15. பிரிட்டிஷ் அரசு அவரைத் தூக்கில் போட முடிவு செய்தது. மேற்கு வங்க மக்கள் கொந்தளித்தனர்.குதிராம் போஸின் தாய் கதறினார். ""என் பச்சிளம்பாலகனை விட்டு விடுங்கள்'' என்று அரற்றினார்.குதிராம் போஸ் மனம் கலங்கவில்லை. தூக்கிலிடுவதற்கு முதல்நாள் இரவு, சிறைச்சாலையின் சுவற்றில் கரித்துண்டால் அவரது அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதினான்:""அழாதே அம்மா!நான் மீண்டும் பிறப்பேன்சித்தியின் வயிற்றில் மகனாக..பிறந்ததுநான்தான் என்ப தறியகுழந்தையின்கழுத்தைப்பார்அதில் -தூக்குக்கயிற்றின்தழும்பு இருக்கும்!அழாதே அம்மா!'' அந்த நேரத்தில் அவரது சித்திக்கு பிரசவ நேரம். அதனால் அவர் அப்படி எழுதிவிட்டு தூக்குமேடை ஏறினார். அதன்பிறகு மேற்கு வங்க மக்கள் குதிராம் போஸ் எழுதிய கவிதை வரிகளை சிறைச்சாலைச் சுவற்றில் தங்கள் கைகளால் தடவிப்பார்த்து ஆவேசமடைந்தார்கள். கிராமப்புறப் பாடல்களில் குதிராம் போஸின் வீரம் இன்றளவும் போற்றப்படுகிறது.''""அப்படியானால் நமது பாடப்புத்தகத்தில் இவர் பெயர் ஏன் இடம்பெறவில்லை?'' என்று கேட்டோம்.அவர் சிரித்தபடியே ""இந்த தேசத்தின் தலையெழுத்து அப்படி... பாடப்புத்தகங்களில் குதிராம்போஸýம் இல்லை. பகத்சிங்கும் இல்லை. செங்கோட்டையில் வெகுண்டெழுந்த வாஞ்சி ஐயரும் இல்லை. ஆனால், மத்திய அரசு தயாரித்த சுதந்திரப் போராட்ட வரலாற்று ஆவணத்தில் இவர்களது வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் ஆவணக் காப்பகங்களில் பெரிய நூலகங்களில் இவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள்'' என்று வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வரலாற்று நாயகர் குதிராம்போஸ் பிறந்த தினம் டிசம்பர் 3.""வல்லமை தாராயோ? - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே''என்று சிவசக்தியிடம் வரம் கேட்ட எங்கள் நெல்லை மண்ணின் மகாகவி பாரதி பிறந்த தினம் டிசம்பர் 11.பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் இது. எங்கள் கணித ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் (ஆரிய வைசிய உயர்நிலைப்பள்ளி, கோவில்பட்டி) அடிக்கடி கேட்பார்: ""ஸ்ரீரங்கத்தில் பிறந்த பிரபலமானவர் பெயரைக்கூறு'' நாங்கள் வேகமாகப் பதில் அளிப்போம். ""ஹேமமாலினி''.அவர் கோபத்தில் சாபமிடுவார் ""நீங்கள் யாரும் உருப்படவே போறதில்லை. அவரைவிட்டால் வேறு யாரையும் தெரியாதா?'' பின்பு சிறிதுநேரம் கழித்து ஆசுவாசமடைந்து அவரே கூறுவார்.""நடிகையின் பெயரைத்தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உலகத்து கணக்குப்புலிகளை எல்லாம் தனது புதிர்க் கணக்குகளால் மடக்கிய ராமானுஜத்தின் வரலாற்றையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கடா... அவர் ஒரு கணித மேதை. அவரது மனைவிக்கு மேற்கு வங்காள அரசு பென்சன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமது தமிழ்நாட்டு மக்கள் அந்தக் கணிதப்புலியைக் கொண்டாடும் நாள் என்றோ, அந்த நாள்தான் புனித நாள்'' என்று சொன்னது இன்னமும் காதில் எதிரொலிக்கிறது. அந்தக் கணிதமேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் டிசம்பர் 22.தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்த படிப்பாளி - போராளி பாபாசாகேப் பீமராவ் அம்பேத்கர். தன்னைப்படிக்க வைத்த ஆசிரியரின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டவர். லண்டன் நூலகத்தின் அநேகமாக பெரும்பாலான நூல்களைப் படித்தவர்களின் வரிசையில் முன்னணியில் நிற்பவர் சட்டமேதை அம்பேத்கர். அவரது நினைவு நாள் டிசம்பர் 6.புரட்சிகரமான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பின் அமைதி வழிக்குத் திரும்பி, ஆன்மிகத் தேடலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரவிந்தரின் நினைவு நாள் டிசம்பர் 5.1936-ல் "சதிலீலாவதி' என்ற திரைப்படத்தை எடுத்து சாதனை புரிந்த திரைப்பட இயக்குநர் அமெரிக்கர் எல்லீஸ்.ஆர்.டங்கன். இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே. ராதா என்றபோதிலும், தமிழ்த் திரையுலகில் ஒரு சகாப்தமாகவும், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவருமான எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். அவர் நடித்தது என்னவோ ஒரு இன்ஸ்பெக்டர் வேஷத்தில்தான். இவருடன் நடித்த வில்லன் நடிகர் திருநெல்வேலியிலிருந்து, நாடகக் கம்பெனியில் நடிக்க ஓடிவந்த டி.எஸ். பாலையா.இந்தப் படத்தில் இடம்பெற்ற ""கைராட்டினமே கதர் பூஷணமே'' என்ற பாடல் தமிழகம் முழுவதும் பிரபலமானது.காந்திஜியின் மதுவிலக்குக் கொள்கை இப்படத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள். குடித்துச் சீரழியும் எம்.கே. ராதாவின் நடிப்பைப் பார்த்துவிட்டு ""இன்று முதல் நான் குடிப்பதில்லை'' என்று ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்குக் கடிதங்களாய் எழுதினார்களாம்.இப்போது சொல்லுங்கள்... எல்லீஸ்.ஆர்.டங்கனை மறக்க முடியுமா? அவரது நினைவு நாள் டிசம்பர் 1.கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது இனிமையான குரலால் பலரை மயக்கிய இளம் பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த முதல் திரைப்படம் 1938-ல் வெளிவந்த "சேவாசதனம்'. படத்தை இயக்கியவர் இயக்குநர் கே. சுப்பிரமணியம்.கல்கியின் பாடலான ""காற்றினிலே வரும் கீதம்'' பாடலுக்கு மயங்காதவர்கள் யாருமுண்டோ? அந்த இசைமேதையின் நினைவு தினம் டிசம்பர் 11.முன்னரே குறிப்பிட்டதுபோல, தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சகாப்தமாய் விளங்கியவர் எம்.ஜி.ஆர். நல்லவனாகவே நடித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தைப்பெற்று, அரசியல் இயக்கத்தின் மூலமாக அரியணை ஏறியவர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலானாலும் சரி, கவியரசு கண்ணதாசன் பாடலானாலும் சரி, கவிஞர் வாலியின் பாடலானாலும் சரி, அதை எம்.ஜி.ஆர். பாடுவதாகவே மக்கள் நம்பினார்கள். இன்னமும் அவரது ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது மறைவு தினம் டிசம்பர் 24.எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நிகழ்ந்ததுதான் நாடகக்கலைஞர் விஸ்வநாத தாஸýக்கும் நடந்தது. போலீஸôரின் கெடுபிடிகளால் நாடகங்கள் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டார். கடன்பட்டார். திருமங்கலம் அவரது சொந்த ஊர்.1940 டிசம்பர் 31-ல் சென்னையில் "வள்ளி திருமணம்' நாடகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அவர் காந்திஜியின் கொள்கைகளை விடுதலை வேட்கைப் பாடல்களை - நாடகத்தில் புகுத்தி விடுவார் என்பதை அறிந்து போலீஸ்காரர்கள் நாடக அரங்கை முற்றுகையிட்டனர்.மயிலாசனம் மீது அமர்ந்து ""மாயமான வாழ்வு இம்மண் மீதே'' என்ற பாடலின் வரிகளைப் பாடும்போதே திணறுகிறார். மீண்டும் தொண்டையைச் சரிசெய்துகொண்டு அதே பல்லவியைப் பாடுகிறார். மேடையின் மீதே சரிந்து விழுகிறார்.முருகன் வேடமணிந்த விஸ்வநாத தாஸின் இறுதி ஊர்வலம் அங்கிருந்தே தொடங்கியபோது ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். மதுரகவி பாஸ்கரதாஸின் இணைபிரியா நண்பரான - அந்த நாடகக் கலைஞர் விஸ்வநாத தாஸ் இறந்த தினம் டிசம்பர் 31.

Saturday, December 3, 2011

சுகாவின் ’தாயார் சன்னதி’ - ஒரு பண்பாட்டுச் சூழலை முன் வைத்து…

“தாயார் சன்னதி” நூலை இப்பொழுது மீண்டும் நிதானமாகப் படித்த போது, புதுப்புது விஷயங்கள் மனதில் அலை மோதின. திருநெல்வேலி என்ற நிலப்பரப்பில் சுகா கண்ட கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு உண்மையை உரக்கச் சொல்வது போலத் தோன்றுகிறது.

“எய்யா, ஒன்னைய இப்பொல்லாம் ஆளையே காணுமே! அசலூர் போயிருந்தியோ!” என்று குசலம் விசாரிக்கும் கையில் காசு இல்லாத கல்யாணி ஆச்சி…

சாமியாடும்போது ஊரே தன்னை வணங்கும் அந்த சொற்ப தருணத்தில் மனம் நிறைந்த வாழ்க்கை வாழும் சிவசக்தி ரெடிமேட்ஸில் துணி கிழித்துப் போடும் அருணாசலம் பிள்ளை…

தனது சொந்த வாழ்க்கை சோகமானதாக இருந்தாலும், ஊருக்கெல்லாம் ‘துப்பு’ சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் வீரையன் தாத்தா…

தைப்பொங்கல் என்றாலே கரும்பு, மஞ்சள்குலை, வாழ்த்து அட்டைகள் என்ற பிம்பங்களைத் தாண்டி, சொக்கப்பனையடி முக்கில் குவிந்து கிடக்கும் ஓலைகளுக்கு மத்தியில் கைக்குழந்தைக்கு பால் கொடுத்தபடி வியாபாரம் செய்யும் நைந்து போன வாழ்க்கை வாழும் முப்பிடாதி…

அவ்வப்போது மாட்டு வண்டியில் வந்து ஓலைகளையும் பானைகளையும் கொண்டு வந்து போட்டுச் செல்லும் முப்பிடாதியின் கணவன்…

இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இவர்கள் வாழ்க்கை கிழிந்து போன துணியாய்க் கிடந்தாலும், வாழ்வின் மீது தீராத நம்பிக்கை கொண்டவர்கள். எதையும் பாஸிடிவாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள். இவர்களைப் படிக்கும்போது மனதில் நம்பிக்கை தோன்றுகிறது. வாழ்வின் மீது ஆழமான பிடிப்பு ஏற்படுகிறது.

மரணம் என்றுமே புதிரானது. அதை வேடிக்கையாக எதிர்கொள்ளும் திருநெல்வேலிப் பெரியவர்களின் சம்பாஷணை சுவாரஸ்யமானது. கருப்பந்துறை சுடுகாட்டில் எரிந்து கொண்டிருக்கும் சுப்பிரமணிய தாத்தாவுக்குப் பிறகு யார் என்ற அவர் வயதொத்த நண்பர்கள் கிண்டலாய்ப் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் இயல்பான நகைச்சுவை உணர்வு கொண்டவை.

“சாப்பிட்டா எங்க வீட்டுப் பிள்ளைல எம்.ஜி.ஆர். சாப்பிடுவாருல்லா! அப்பிடி சாப்பிடணும்ல…” என்று வாழ்க்கையையே எம்.ஜி.ஆர். வழியாகப் பார்க்கும் கல்லூரிப் பேராசிரியர் அன்னபூரணன், எம்.ஜி.ஆர். படத் தொகுப்பான “காலத்தை வென்றவன்” படத்தைப் பார்த்து உடைந்து போய், மூக்கைச் சிந்தி அழுதபடி நடந்து செல்லும் அய்யாப்பிள்ளை சித்தப்பா, “அவாள மாதிரியெல்லாம் ஒரு ஆள பாக்க முடியாதுய்யா…” என்று ரொம்ப நாள் நெருங்கிப் பழகியவர் போல எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லும் வாட்ச்மேன் நெல்லையப்பன்…

தமிழ்த்திரையுலகில் கால் நூற்றாண்டுகளுக்குச் சற்றே கூடுதலாக ஆக்கிரமித்திருந்த எம்.ஜி.ஆர். என்ற சகாப்தம், தமிழ்ச் சமூகத்தில் மேலிருந்து கீழ்வரை பாதித்திருந்ததன் அடையாளங்களாய் இவர்களை உணர முடியும்.

துஷ்டி வீட்டில், சாம்பல் கரைத்த அன்று, பந்தி பரிமாறும்போது, “சுப்பிரமணிப்பய சரியா சாப்புடுதானா?மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டிருந்தான்…” என்று பரிமாறுபவர் கேட்க, சுப்பிரமணி ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பார். எவ்வளவு ரசமான விஷயம். இரண்டுமே நிஜங்கள் அல்லவா?

‘கிரேக்க’ இனத்தவர் தமிழகத்தில் ஊடுருவியிருந்ததைக் கண்டுபிடித்துக் கூறிய மீனாட்சி சுந்தரத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஜெயமோகனின் நண்பர் சண்முகசுந்தரமும் ‘கிரேக்கர்’ என்று அறியும்போது படிக்கும் வாசகனிடம் வெடிச்சிரிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது.

சிவதீட்சை பெற்றிருந்த சுந்தரம் பிள்ளை பெரியப்பாவுடன் சேர்ந்து பொருட்காட்சிக்குச் சென்று ‘ராட்டு’ சுற்றிய அனுபவம் இருக்கிறதே…அந்த ஹாஸ்யத்தை எழுத்தில் சொல்லி மாளாது.

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ பாடலை ரசித்துக் கேட்கும் ராஜேஸ்வரி அக்கா இப்போது சென்னை என்ற கடலில் கரைந்து போய் விட்டாள். ‘தாயார் சன்னதி’ நூலை அவர் இப்போது படித்தாலும், பாடலைக் கேட்ட அதே சந்தோஷத்தை உணர்வார்கள் என்று தோன்றுகிறது.

அதேபோல, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைப் பாடும் பெண் சாயல் கொண்ட குகன், ‘நாடகமெல்லாம் கண்டேன்’ என்ற பாடலைப் பாட முயற்சித்த (அதுதானே சரி?) முகம் தெரியாத அந்த சொக்கலிங்க மாமா ஆகியோரும்கூட கனவில் வந்து போவார்கள்.

உச்சினிமாகாளி கொடையின்போது அருள் வந்து சாமியாடிய பிரமு ஆச்சி, மறுநாள் காலை தொலைந்து போன ஒற்றைத் தோட்டை அழுது கொண்டே தரையில் தேடியது எவ்வளவு யதார்த்தமானது!

தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. தனது மகனை அம்மைக்காரி “ஏல, இங்க வா.” என்று கூப்பிட்டதுக்கு, இந்த ஆச்சிகள் ஊர்ப்பிரச்னையாக்கி விடுகிறார்கள்.

ஆழ்வார் குறிச்சியில் இருக்கும் ஆச்சிகள்தாம் எத்தனை பேர்! சைலு தாத்தா வீட்டாச்சியின் கிண்டலான பேச்சை யார்தாம் ரசிக்காமல் இருக்க முடியும்? (”கூட ரெண்டு நாளைக்கு ஆளாருச்சிலேருந்தா திருனோலிக்காரங்க கொறஞ்சா போயிருவியெ?”…) எனக்கும் சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சிதாம். தங்கத்தாச்சியை நினைத்துக் கொள்கிறேன்.

சுகாவின் சங்கீத ஞானம், அது குறித்து எனக்கு எதுவும் தெரியாவிட்டாலும்கூட, பிரமிக்க வைக்கிரது. பொறாமைப்படவும் வைக்கிறது.

மொத்தத்தில் “தாயார் சன்னதி” படிக்கும்போது, பல இடங்களில் ஹாஸ்யம் வெடிக்கிறது. கண்கள் பனிக்கின்றன. மூட நம்பிக்கைகளைப் போகிற போக்கில் கிண்டல் செய்கிறார். சினிமா என்ற கலவை சராசரி மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளதைக் காட்டுகிறார். திருநெல்வேலிப் பண்பாட்டினை நயம்பட கூறுகிறார். பால்ய கால காதல்களை ரசனையோடு சொல்கிறார்.

suka

சுகா

சுகா… உங்களிடம் ஒரு கேள்வி.

திருநெல்வேலியில் உள்ள இந்த பண்பாட்டுச் சூழல், அது உருவாக்கியுள்ள இந்த சாகாவரம் பெற்ற மனிதர்கள், அவர்தம் நகைச்சுவை உரையாடல்கள்… வேறு ஒரு மாறுபட்ட கலாச்சாரத்தில் அல்லது மண்ணில் இவையெல்லாம் சாத்தியமா?

இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

புத்தகத்தை மூடிவிட்டு, கண்கள் மூடிய நிலையில், கடைசியில் யார் நினைவில் தங்கியிருக்கிறார் என்று யோசிக்கும்போது…

திருநெல்வேலி சைவாள் ஹோட்டல் உரிமையாளர் கருப்பையா பிள்ளையின் மனைவி…

வாழ்நாள் முழுவதும் புகை படிந்த அடுக்களை இருட்டுக்குள் காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல் முன்பாக இடுங்கிய கண்களுடன் நின்று கொண்டிருக்கும் அந்தப் பெயர் குறிப்பிடாத பெண்மணியின் ஒற்றைக்குரல் (”கல்லு காயுது… செத்த நேரம் ஆகும்…”) மனதைப் பிசைகிறது.

உங்கள் கைகளைத் தேடுகிறேன் சுகா…!

சுகாவின் ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழகமெங்கும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.