Saturday, June 16, 2012

எனது ஆசிரியர் ..1


பாளையம்கோட்டைஅன்புநகர் பக்கம் செல்லும்போது எல்லாம் அந்த வீட்டின் முன் பலவிதமான இரு சக்கர வாகனங்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்தபடி செல்வேன். அவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டுசன் எடுக்கிறார் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.நூற்றுகணக்கான மாணவர்களும் மாணவிகளும் காலை மாலை ரெண்டு வேலையும் அங்கே சங்கமிக்கிறார்கள்.அவரிடம் படித்தால் இருநூறு மதிப்பெண்கள் உறுதியாய் எடுக்கலாம் என்ற நம்பிக்கை ...இத்தனைக்கும் அவர் வயதில் மூத்தவரும் அல்லர்.சுமார் முப்பத்து ஐய்ந்துக்குள் தான் இருக்கும். ஒரு வருடத்திற்கு சுமார் ஐயாயிரம் முதல் ஆறாயிரம் வரை ஒரு மாணவருக்கு வாங்குகிறார் என்று கேள்வி.

நான் பள்ளியில் படித்த காலத்தில் மகாதேவன் என்று ஒரு அறிவியல் ஆசிரியர் எனக்கு பாடம் எடுத்தார்.அந்த காலத்தில் வகுப்பில் குறைந்தமதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மட்டுமே டுசன் படிக்கும் பழக்கம் இருந்தது. அந்த வகையில் அவரும் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு டுசன் சொல்லி கொடுத்தார்.அவர் வீட்டு மாடியில் இருக்கும் அறையில் வைத்து சொல்லி தருவது வழக்கம்.அவர் அறிவியல் ஆசிரியர் என்ற போதிலும் ஆங்கில பாடமும் நடத்துவார். வகுப்பில் தெளிவாய் ஒவ்வொன்றையும் இருமுறை சொல்லி விளக்குவார். ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களையும் கரும்பலகையில் எழுதிபோடுவார். டுசன் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக இன்னொரு முறை விளக்குவார்.அவர் விளக்கம் கொடுக்கும் முறையில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் யார் யார் எல்லாம் அவரிடம் டுசன் படிக்கிறார்கள் என்பதை.

அப்போது எல்லாம் பதினொன்றாம் வகுப்பு தான் பொது தேர்வு. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர் பாடம் எடுக்கும் சிரத்தை அலாதியானது.முந்தய மூன்று ஆண்டுகளின் வினாத்தாள்களை எடுத்து வைத்து கொண்டு இந்த ஆண்டு எது வர வாய்ப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்து அது போன்ற வினாக்களை தேர்வு செய்வார்.அதை எல்லா மாணவர்களும் திரும்ப திரும்ப போட்டு போட்டு பார்க்க வைப்பார்.இந்த விசயத்தில் பாரபட்சம் இன்றி எல்லா மாணவர்களையும் அவர் படிக்க வைப்பார். பைடு பைபர் என்ற ஒரு கதை உண்டு. அது இந்த ஆண்டு பத்து மார்க் வினாவில் வரும் என்பதை உறுதியாய் அறிந்து கொண்டு அந்த கதை சுருக்கத்தை அருமையான எளிமையான ஆங்கிலத்தில் எழுதி போட்டு அதை திரும்ப திரும்ப படிக்க வைப்பார்.

நான் ஒரு முறை எனது ஓதுவார் முடுக்கு சந்து வழியாக வந்து கொண்டு இருந்த போது எனக்கு எதிரே மகாதேவன் சார் வந்து விட்டார். "நாதன், நம்ம முருகேசன் இருந்தா அவன கொஞ்சம் வர சொல்லேன்.."என்று என்னிடம் சொல்லியவுடன் நான் எனது வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்த முருகேசனை அழைத்து சார் கூப்பிடுவதை சொன்னேன்.நான் வெளியே கடைக்கு சென்று திரும்பும் போதும் சாக்கடை நாற்றம் அடிக்கும் அந்த குறுகிய சந்தில் அந்த காலை வேளையில் முருகேசனிடம் ஏதோ கேட்பது தெரிந்தது..கிட்ட வந்ததும் தான் தெரிந்தது அவன் அவரிடம் ஆங்கில பாடம் ஒன்றை ஒப்பித்து கொண்டு இருக்கிறான் என்பது.

"நீ ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில தான் தப்பு விடுகிறாய் ..ஸ்பெல்லிங் கரெக்டா சொல்லு பார்க்கலாம் " என்று அவர் அவனை திட்டுவது தெரிந்தது.என்னை பார்த்தவுடன் அவர் லேசாக சிரித்தபடி "இன்னைக்கு காலாண்டு பரீட்சை ...இங்கிலீஷ் எக்ஸாம் ...இவன் கொஞ்சம் வீக் ..அதான் வந்தேன் " என்று சமாளித்தார்..
"சார் அவன் வீட்டில் சென்று கேளுங்களேன்..வாசலுக்கு வெளியே ஏன் கேட்கிறீர்கள் " என்றேன்.
"வேண்டாம்..வேண்டாம்..அது அவங்க வீட்ல இருப்பவங்களுக்கு தொந்தரவாக இருக்கும்..இங்க பரவா இல்லே ..சமாளிசுகறேன்." என்பார்.உண்மையான காரணம் அது அல்ல என்பது எனக்கும் தெரியும். முருகேசன் தப்பாய் ஒப்பித்தால் சட் டென்று தலையில் ஒரு போடு போடுவார். வீட்டுக்குள் என்றால் அது முடியாது.
மனுஷன் இந்த நாற்றம் எடுக்கும் சந்துக்குள் நின்று கொண்டு டுசன் படிக்கும் ஒரே காரணத்துக்காக அவன் பாஸ் ஆகிவிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இந்த அதிகாலை வேளையில் வந்து நிற்கிறாரே என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அது மட்டும் அல்ல..மதியம் தேர்வு என்றால் காலை நேரத்தில் சிறுநீர் இடைவேளை நேரத்தில் கூட வகுப்பறைக்கு வெளியே நின்று முருகேசனையோ அல்லது மாரியப்பனையோ ஒப்பிக்க சொல்வது வழக்கம்.இத்தனைக்கும் அவர் அதற்காக வாங்கும் ரூபாய் ஐந்து தான்..
அவன் பாசாகி விட்டால் அவர் முகம் பிரகாசமாகி விடும்..அவரின் நேர்மை எனக்கு இப்போது நினைத்தால் கூட வியப்பை அளிக்கிறது..யாருக்கும் தனது இருத்தல் தொந்தரவு அளிக்க கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருப்பார்..

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை பார்த்துகொண்டு இருந்தபோது வங்கிக்கு வெளியே சிகரட் குடித்தபடி நான் நின்று கொண்டு இருந்தேன்.அப்போது திடீரென்று என் முன் மகாதேவன் சார் தோன்றினார். இதை நான் சற்றும் எதிர்பார்கவில்லை..அவசரமாக சிகரெட்டை கீழே போட போனவனை அவர் சட்டென்று இடை மறித்து , " பரவா இல்ல ...நீ குடிப்பா ..நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்..நான் சொல்லாம கொள்ளாம வந்து உன் முன்னால வந்து நின்னா நீ என்ன பண்ணுவ..இங்க ஒரு கல்யாண வீட்டுக்கு வந்தேன்..நீ பாங்க்ல ஆபீசர் ஆயிட்டியா..?" என்றாரே பார்க்கலாம்..

எனக்கு ரொம்ப அவமானமாக போய் விட்டது.வாத்தியார் முன்னால சிகரட் குடித்து விட்டோமே என்று.அன்றே விட்டு தொலைத்து இருக்கலாம்..பை பாஸ் அறுவை சிகிச்சையையும் தவிர்த்து இருக்கலாம்..

மகாதேவன் என்ற அந்த ஆசிரியர் , முருகேசன் என்ற மாணவனுக்கு டுசன் ஆசிரியர் என்று எந்த வகையில் பார்த்தாலும் அவரின் பண்பு எனக்கு இன்னும் பிரமிப்பு ஊட்டுகிறது..

Thursday, June 14, 2012

சங்கரப்ப நைனா



நான் நைனா வை முதன்முதலில் பார்த்தது ஜோதிபாசு சலூனில் தான்.என் அண்ணன் ஆர்.எஸ்.மணியுடன் பஜாருக்கு சென்றிருந்த போது தேவப்ரகாஷ் அண்ணன், பால்வண்ணம்,ஜவஹர் வாத்தியார் இன்னும் பெயர் தெரியாத சில "தோழர்களோடு" சங்கரப்ப நைனா பேசிகொண்டிருந்த காட்சி இன்னமும் மனதில் பதிந்து கிடக்கிறது. நான் எஸ்.எஸ்.எல். சி. படித்துகொண்டிருந்த நேரம்.அவசரநிலை அமுலில் இருந்தது. புதிதாய் தைத்த எனது பேன்ட்,சட்டையை அருகில் இருந்த வீனஸ் தையல் கடையில் வாங்குவதற்காக நான் காத்திருந்தேன்.இருபது நிமிடம் ஆகும் என்றதால் எனது அண்ணன் சைக்கிளை பிடித்தபடி நின்றிருந்தேன்.

தேவப்ரகாஷ் அண்ணன் சத்தமாய் சிரித்து பேசினாலும் சங்கரப்ப நைனா மென்மையாய் சிரிப்பை உதிர்த்தவாறு தலையை பெரிதாய் ஆட்டிகொண்டிருந்தார். அதுதான் அவரது சுபாவம்.வெள்ளை கதர் சட்டையும் வேட்டியும் ஒரு சிலருக்கு மட்டுமே வசீகரத்தை கொடுக்கும். நைனாவிற்கு அந்த வசீகரம் உண்டு.கையில் எப்போதும் வைத்திருக்கும் தீக்கதிர் பேப்பரையோ செம்மலரையோ மடங்கிய நிலையில் பிடித்து கொண்டு கையை நீட்டி பேசும் நைனா தீக்கதிர் நாளிதழின் ஏஜென்ட் என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.நைனா கோவில்பட்டி நகரில் இருந்த லக்ஷ்மி மில்லில் பஞ்சாலை தொழிலாளியாக வேலை பார்த்தவர் என்பதையும் காலபோக்கில் தெரிந்து கொண்டேன்.

தேவப்ரகாஷ் அண்ணனுக்கு ஈடுகொடுத்து சிரிப்பதில் வல்லவர் சக்தி பயில்வான். அவர் அடிப்படையில் ஒரு தையல் தொழிலாளி.ஜோதிபாசு சலூனில் இருந்து ஐந்தாறு கடை தள்ளி அவரது கடை இருந்தது.அவரது கடையில் உள்ள தையல் மிசினில் யாரோ ஒருவர் தைத்து கொண்டிருப்பார்.இன்னொருவர் காசா போட்டுகொண்டு இருப்பார்.ஒரு நாள் கூட சக்தி பயில்வான் மிசினில் உட்கார்ந்து பார்த்தது இல்லை.நோடிசும் கையுமாக தான் இருப்பார்.ஆர்ப்பாட்டம், மறியல் என்றால் அவர் முன்னால் நிற்பார்.மே தினம் என்றாலே அவர் நினைவு வந்து விடும். அவரது உடல்பயிற்சி கழக நண்பர்களின் சிலம்பாட்டம் ,தீப்பந்த விளையாட்டு என சாகச நிகழ்ச்சிகள் பார்த்து மெய்சிலிர்த்தது உண்டு. சக்தி பயில்வானிடம் பேசிகொண்டிருக்கும் போது தோழர் லக்ஷ்மனபெருமாள் ஒருமுறை சொன்னார்." உம்ம கிட்ட பேசிட்டு இருந்ததுல முக்யமானத மறந்துட்டேன்..பையன் சட்டைய வீனஸ் டேய்லர் ல வாங்க நினைச்சேன்..கடையை பூட்டிட்டு போய்ட்டானே..."
"ஏன் எங்க கிட்டே சட்டையெல்லாம் தைக்க மாட்டிகளோ " சக்தி தான் கேட்டார்.
"வேய்..உம்மகிட்டே அண்ட்ராயர் வேண்ணா தைக்கலாம்..சட்டையெல்லாம் கொடுத்து ரிஸ்க் எடுக்க முடியுமா "
லக்ஷ்மனபெருமாள் சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்தார்.
தோழர் சக்தி சிரித்து கொண்டார்.அது உண்மைதான்.அவரிடம் சட்டை தைக்க கொடுத்து தீபாவளிக்கு சட்டை வாங்கி போட்டவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன ..மறியலில் கைதாகி சிறை சென்றால் எப்போது வருவாரோ?

ஒரு ஞாயிறு அதிகாலையில் நான் வீட்டில் இருந்து தேங்காய் சில்லு வாங்க வெளியே வரும் போது சங்கரப்ப நைனா அவரது பழைய சைக்கிளுடன் வாசலில் நின்று கொண்டு இருந்தார்." அண்ணன் இருக்குதா " என்று என்னைபார்த்து கேட்டார். "தூங்கறாங்க " என்றேன்.
"தோழரை கொஞ்சம் வர சொல்ல முடியுமா ?" தயக்கத்துடன் கேட்டார்.
நான் அண்ணனை எழுப்பினேன்.சட்டயைபோட்ட்படி வெளியே வந்தான் அவன்.இருவரும் ஏதோ பேசினார்கள்.அண்ணன் சட்டைப்பையில் இருந்து ஐந்தும் பத்துமாக ரூபாய் நோட்டுகளை எடுத்துகொடுத்தான். தீக்கதிர் பேப்பர் ரூபாயாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.அப்பா வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேப்பர் திருத்தி கொண்டு இருந்தார். அண்ணன் வாங்கும் தீக்கதிர் பேப்பரை அப்பா வாசித்து ஒருநாளும் பார்த்தது இல்லை. தினமணி பேப்பர் வராவிட்டால் மட்டும் இந்த பேப்பரை லேசாக பட்டும் படாமலும் புரட்டி பார்ப்பார்." எங்க பொரட்டுனாலும் போராட்ட செய்தியா தான் இருக்கும் "என்பார். நானும் அக்காவும் அன்னக்கிளி சினிமா விமர்சனம் என்ன போட்ருக்கான் என்று தீக்கதிர் பேப்பரை புரட்டுவோம்.

நைனா இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேலையில் அண்ணனை சந்தித்து ரூபாய் வாங்கி செல்வது வாடிக்கையாய் இருந்தது.மனுஷன் கடன் வாங்குதாரோ என்று எண்ணினேன்.ஒரு முறை சைக்கிளில் அவர் பின்னாலேயே சென்று பார்த்தேன்.பால்வண்ணம் வீட்டிற்கு சென்றார்.அவரிடமும் பேசி கொஞ்சம் ரூபாய் வாங்குவது பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.அங்கிருந்து கோவில் மேட்டு பக்கம் இருந்த விஸ்வகர்மா பள்ளி அருகே சென்றார்.தனது நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த ஜவகர் வாத்தியாரிடம் போவது தெரிந்தது.அவரும் தனது சட்டை பாக்கெட்டில் இருந்து சொல்லி வைத்தாற்போன்று ரூபாய் நோட்டுகளை கொடுப்பது பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றேன். என்ன இதெல்லாம் ? மண்டை குடைந்தது.

ஒருமுறை பள்ளி நண்பன் உதயசங்கர் வீட்டிற்கு ஏதோ நோட்டு வாங்க சென்றவன் எனக்கு முன்னால் சங்கரப்ப நைனா தனது ஓட்டை சைக்கிளில் தகர சத்தம் முழங்க மெதுவாய் அழுத்தி சென்று கொண்டிருந்ததை பார்த்தேன்.அவர் சைக்கிள் சக்தி பயில்வான் வீட்டுமுன் நின்றது.அவரது சைக்கிள் ஹான்ட் பாரில் இருந்து ஒரு பெரிய துணி பையை எடுத்தபடி உள்ளே சென்றார்.அவரது மனைவி வரண்டா பக்கம் வந்த போது "இதுல அரிசி, காய்கறி இருக்கு..ரெண்டு நாளைக்கு சமாளிச்சுக்க ."என்று சொல்லியபடி ஒரு சிறிய பையை எடுத்து கொடுத்தார்.அப்போது சக்தி பயில்வான் சிறையில் இருந்தார்.ஒரு மௌனத்துடன் அந்த பையை பெற்றுக்கொண்ட அந்த அம்மா அதே வேகத்துடன் மெதுவாய் சைக்கிளில் அழுத்தும் நைனா வை ஒரு பெருமூச்சுடன் பார்த்துகொண்டிருந்தார்.தனது முந்தானையால் கண்களை துடைத்து கொள்வது தெரிந்தது.
நைனா இப்போது மெயின் பஜார் தாண்டி கடலையூர் ரோட்டிற்கு பக்கவாட்டில் இருந்த சந்தில் நுழைந்து பச்சை பெயிண்ட் அடித்த வீட்டின் முன் நின்றார்.தோழர் ராமசுப்பு அவர்களின் வீடு அது.
"தங்கச்சி .."என்று குரல் கொடுத்தார்.
"யாரு அண்ணாச்சியா .."என்று குரல் கொடுத்தபடி வந்த அந்த அம்மாவின் கையில் அரிசி, காய்கறி அடங்கிய மஞ்சள் பையை கொடுத்தார் நைனா.
"ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போங்களேன் .."பையை வாங்கி கொண்ட அந்த அம்மாவின் வேண்டுகோளுக்காக வீட்டு திண்ணையில் அமர்ந்தார் நைனா.

அவரது பயணம் தொடர்ந்தது.புது கிராமம் பகுதியில் இருந்த இன்னொரு தோழர் வீட்டை பார்த்து அவரது ஓட்டை சைக்கிள் திரும்பியது.எனக்கு இப்போது விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட்டது.எல்லா தோழர்களும் சிறையில் இருக்கிறார்கள்..எமெர்ஜென்சியில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் கம்யூனிஸ்ட் தோழர்களும் கணிசமானவர்கள் சிறையில்.கோழி திருடினேன் ஆடு திருடினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கோரினால் விடுதலை செய்யபட்டார்கள்.அப்படி வெளியே வந்த திராவிட இயக்கத்தினர் ஏராளம்.."இன்குலாப் ஜிந்தாபாத் " முழக்கமிட்டபடி ஆவேசமாய் கர்ஜித்து சென்ற சக்தி, ராமசுப்பு போன்ற செங்கொடி தோழர்கள் எவருக்கும் மண்டியிடாது சிறையில் நாட்களை கழித்தார்கள்.சிறைக்கு வெளியே அவர்கள் குடும்பத்தினர் சாப்பாட்டுக்கு வழிஇன்றி வாடி விடக்கூடாதே என்று சங்கரப்ப நைனா மத்திய தர வர்க்க தோழர்கள் பால்வண்ணம்,ஆர்.எஸ்.மணி, ஜவகர்,கோபால்சாமி போன்ற தோழர்களிடம் ரூபாய் வசூலித்து அவர்களது குடும்பத்தை கண்ணின் மணி போல காத்து வந்தார்.ஒவ்வொரு நாள் காலையிலும் தனது ஓட்டை சைக்கிளை எடுத்துக்கொண்டு தனது சகாக்களின் குடும்பத்திற்கு அரிசியும் காய்கறியும் வாங்கி கொடுத்து சென்று கொண்டிருந்த நைனா வின் கால்கள் சற்றும் ஓய்வு எடுக்கவில்லை.எமெர்ஜென்சி நீடித்த ஒரு வருட காலத்திலும் அவரது சைக்கிளின் தகர சத்தம் கோவில்பட்டி நகரின் புழுதி படிந்த வீதிகளில் கேட்டுக்கொண்டு தான் இருந்தது.

சங்கரப்ப நைனா என்ற மனிதர் வெறும் தீக்கதிர் ஏஜென்டா ? சிறைபட்டிருக்கும் தோழர்கள் குடும்பத்தினர் , இயக்கத்தை ஒரு பொழுதும் பழித்து பேசிவிடக்கூடாதுஎன்று இவர் ஏன் துடித்தார் ? சிறைக்கு வெளியே இருந்தாலும் தினமும் இருபது கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் ஏன் கடந்தார் ..ஏன் உழன்றார் ?கோழி திருடியதாக ஒப்புக்கொண்டால் விடுதலை செய்யபடுவோம் என்று தெரிந்தும் ஏன் லட்சிய வேட்கையோடு சக்தியும், ராமசுப்புவும், வள்ளிநாயகமும் சிறைக்குள்ளே இருந்தார்கள்.?தங்களது குடும்பம் வாடுமே என்ற கவலை ஏன் அவர்களுக்கு ஏற்படவில்லை ?

ஒரு வருஷம் நீடித்த எமெர்ஜென்சி இன்னும் பல வருஷம் நீடித்து இருக்க வாய்ப்புண்டு.அதைப்பற்றி சிறிதும் கவலைபடாமல் கொள்கைக்காக இவர்கள் ஏன் சிறைபட்டிருந்தர்கள்.?
இவர்கள் ஜெர்மனிய நாட்டின் தத்துவ மேதைகள் மார்க்ஸ் எங்கல்சின் மூலதன நூலை கரைத்து குடித்த அறிவுஜீவிகளா?அல்லது மார்க்சிய சித்தாந்தத்தின் மூலக்கூறுகளை முழுவதுமாக உள்வாங்கி கொண்ட மேதைகளா ?
எதுவும் இல்லை..எது இவர்களுக்கு சக மனிதனின் துயரத்தை பரிவுடன் பார்க்க வைத்தது?எது இவர்களுக்கு ஏழ்மையிலும் சமரசமற்ற போராட்டத்தை நிகழ்த்த கற்று கொடுத்தது?
சித்தாந்தத்தை அறிவார்ந்த முறையில் கற்றுணர்ந்து தெளிவு பெற்று ஏற்றுகொள்வது ஒருவகை..
சங்கரப்ப நைனாவின் வாழ்க்கை நெறிகளையும் சக்தி பயில்வானின் லட்சிய நோக்கினையும் பார்த்து உணர்வு பூர்வமாக சித்தாந்தத்தை ஏற்றுகொள்வது இன்னொருவகை..
ஒரு மாபெரும் தத்துவத்தின் அடையாளமாய் வாழ்ந்து காட்டிய சங்கரப்ப நைனாவை நினைக்கும்போது நெஞ்சு பெருமிதத்தில் விம்முகிறது ...

Saturday, June 9, 2012

நான் ஏன் எழுதுகிறேன்

 
நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு என்னால் சட்டென்று பதில் சொல்ல
முடியவில்லை..என்னவாய் இருக்கும் என்றும் யூகிக்க முடியவில்லை.சின்ன
வயசில் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் விளையாட்டு பீரிடில் நொண்டி சாக்கு
சொல்லிக்கொண்டு மரத்தடி நிழலில் உட்கார்ந்து நோட்டு புத்தகத்தில்
எதையாவது படம் வரைந்து கொண்டு இருப்பேன்..என்னோடு உட்காரும் முருகேசன்
என்ற மாணவன் அவனுடைய நோட்டில் என்னை மாதிரியே பட கதை வரைந்து கதை போல
கொண்டு செல்வான்..இத்தனைக்கும் அவன் என்னை விட சுமாராகத்தான் படம்
வரைவது உண்டு..முத்து காமிக்ஸ் போன்ற புத்தகங்களின் பாதிப்பு தான்
அது..என் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் சாரதி "ஏல..நீயும் முருகேசன
மாதிரி படக்கதை வரை " என்பான்.நானும் உற்சாகமாக படம் வரைந்து ஹீரோ
எங்கெங்கோ பறந்து போய் எதை எதையோ கொண்டு வந்து சாகசம் செய்வது போல கதையை
நகர்த்தி செல்வேன்..என் அருகிலும் பல நண்பர்கள் அமர்ந்து என்னுடைய
படக்கதையை படிப்பதில் ஆர்வம் கொண்டார்கள். என்னுடைய முதல் படைப்பு என்பது
அது தான்..இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் முருகேசனுக்கு என் மேல்
எந்த பொறாமையும் இல்லாமல் அவனும் என் கதையை வாசிப்பதில் ஆர்வம்
கொண்டிருந்தான் என்பது தான்..சில இடங்களில் சில திருத்தங்கள்
சொல்வான்..அவனை போல நாமும் வரைய வேண்டும் அல்லது எழுத வேண்டும் என்பது
தான் எனது லட்சியமாக இருந்தது..

விளையாட்டு நேரத்தில் கட் அடித்து விட்டு என் அருகில் உட்கார்ந்து கதை
படிக்கும் நண்பர்களின் எண்ணிக்கை வுயர்ந்து கொண்டே போனது..அது ஒரு வகையான
போதை மாதிரி தொத்தி கொண்டது..இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கே
புரிகிறது..உண்மையில் சொல்லபோனால் ஓவியம் தான் எனக்கான தளம் என்று
நினைத்தேன்..

கல்லூரியில் படிக்கும்போது உதயசங்கர், சாரதி, முத்துசாமி போன்ற
நண்பர்களோடு சேர்ந்து மொட்டுக்கள் என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தும்
போது கூட என்னுடைய ஓவியமும் கையெழுத்தும் கைகொடுத்தன..உதயசங்கர்
கவிதையும் கட்டுரையும் எழுதினான்.படித்து பார்த்த கவிஞர் தேவதச்சன் "இந்த
மூவரில் ஒருவன் தேறுவான் " என்று குறிப்பிட்டது இன்னமும் நினைவில்
உள்ளது. அது உதயசங்கரின் கவிதைகளை படித்து பார்த்து சொன்னதாக நினைவு..
இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.எங்கள் எவருக்கும் உதயசங்கரை
பார்த்து எவ்வித பொறாமையும் ஏற்பட்டது இல்லை..ஒரு படைப்பாளியாக எங்களில்
ஒருவரை அவர் ஏற்று கொண்டாரே என்ற சந்தோஷம் தான் தோன்றியது..

துரதிர்ஷ்டம் என்னவெனில் , அதன் பிறகு நான் ஓவியத்தை விட்டு
விட்டேன்..உதயசங்கரும் கவிதையை விடவும் கதை எழுதுவதில் ஆர்வத்தை
காட்டினான்..(நாலைந்து கவிதை தொகுப்பு போட்டிருக்கிறான் என்பது வேறு
விஷயம் ).
தொடர்ச்சியாய் நூலகத்தில் வாசித்ததின் தாக்கம்..செம்மலர், தாமரை,
கண்ணதாசன் போன்ற இதழ்களை படித்து வந்ததின் விளைவாய் நாமும் ஏன் கதை எழுதி
பார்க்க கூடாது என்ற தீராத ஆசை பெருங்கனவாய் மனசில் உருவாகி தொழில் என்ற
சிறுகதையை முதலில் எழுதினேன். ஒரு சிலர் அதை வெகுவாய் பாராட்ட விட்டாலும்
"தொடர்ந்து எழுத்து..உனக்கு கதை வரும் " என்று சொன்னது கூட காரணமாக
இருக்கும்..

ஆனால் தொடர்ந்து எழுதாமல் போனது தான் என்னுடைய துரதிர்ஷ்டம்..!