Thursday, March 29, 2012

மானுட உணர்வுகளை மீட்டெடுக்கும்

மெல்லிய பதிவுகள்

எஸ் வி வேணுகோபாலன்


ழக்கமாக நாம் நடந்து போகும் தெருவில் ஏதோ ஒரு வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது ஆரம்பித்தார்கள் என்று கூடத் தெரிவதில்லை. வீதியில் மிஞ்சியிருக்கும் ஐந்தாறு பழைய கால வீடுகளில் இன்னொன்றும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வாசல் பக்க மரம் ஒன்றில் பழைய பர்மா தேக்கு மரக் கதவு, சன்னல், தூண் இதரவை இங்கே கிடைக்கும் என்று ஒரு பலகை அடித்துத் தொங்கவிடப்பட்டிருக்கிறது ...ஆனால் அந்த வீட்டுக்குள் காலகாலமாக அந்தக் குடும்பத்தவர்கள் வம்சாவழியாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கேனும் கிடைக்குமா என்று யாருக்கும் தோன்றினால் பெருக்கெடுக்கும் உணர்ச்சி இருக்கிறதே, விம்மலும் தன்னெழுச்சியாகக் கன்னங்களைச் சூடாக்கியபடி வழியும் கண்ணீரும், நாம் மனிதர்களாக இருக்கிறோம் என்று பொருள்.

மனிதர்களையும் மனித உறவுகளையும் சரக்காக ஆக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தாராளமய காலத்தில், செடி கொடிகளையும், பயிர் பிரதேசங்களையும், இல்லங்களையும் அவற்றோடு கலந்திருக்கும் வாழ்க்கையோடு இணைத்து உயிரோட்டமாக தரிசிக்கும் உணர்வை படைப்பாளிகள் எழுத்திலேயே சாத்தியமாக்கினால் வாசகருக்கு அதைவிட கொடுப்பினை வேறென்ன இருக்க முடியும்? நாறும்பூநாதனின் ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன் என்ற சிறுகதை தொகுப்பு அப்படியான ஓர் அனுபவத்தைக் கொடுத்தபிறகு, அந்த அவஸ்தையிலிருந்து கொஞ்சம் எடுத்துப் பேசா விட்டால் எப்படி?

இருப்புப் பாதையின் இடையே கடக்கும் சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அந்த கதவுகளை சார்த்தித் திறப்பவர் (அவர் உள்ளபடியே அதைத் திறந்து கொடுத்து அப்புறம் தேவைக்கு சார்த்துபவர். அப்படி யாரும் அவரது பணியைப் புரிந்து கொள்ள முற்படுவது இல்லை!) அந்த வழி வாகனங்களில் போகும் யாருக்கும் உவப்பான மனிதர் இல்லை. ஆனால் சாமிக்கண்ணு நேர வாரியாக, வாகன விலாவரியாக அன்றாடம் கடந்து போகும் மனிதர்களைச் சொந்தம் பிடித்து வைத்திருக்கும் ஒரு பணியாளர். அதனால் அவர்கள் வரும் நேரம் தப்பி விட்டால் என்னவோ ஏதோ என்று அலைமோதும் மனசு. அதைத் தானய்யா மானுட உணர்வென்பது. "ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்" கதை, சாமிக்கண்ணுவின் பணி ஓய்வு நாளில் அவரது நினைவுக்குறிப்புகளை அசை போட வைக்கிறது. படிக்க வாய்ப்பற்ற குழந்தைகளை, அதுவும் பெண் குழந்தைகளை வெள்ளரிப் பிஞ்சு விற்கப் பார்த்துப் பதறும் அவரது நெஞ்சு, ஆங்கிலத்தில் ஃபெயிலானதால் அரளி விதை அரைத்துக் குடித்துச் செத்துப் போன தமது சொந்த மகளது நினைவால் மேலும் வாட்டம் கொள்கிறது. கேட் போட்ட பிறகு சைக்கிளோடு கடக்கப் போகும் சிறுமி ஒருத்தியை வீட்டுல சொல்லிட்டு வந்தியா என்று கண்டித்தபடி ஓடிச் சென்று காக்கும் அவரிடம், மாலை வீடு திரும்பும்போது வந்து நன்றி சொல்லும் சின்னப் பெண், காலையில் வீட்டில சொல்லிட்டுத் தான் வந்தேன், ஏன் கேட்டிங்க என்று கேட்பது, அவரை மட்டுமல்ல வாசகரையும் சேர்த்துப் புரட்டிப் போடும் இடம். அவர் கையில் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தாத்தா என்று வாஞ்சையுடன் அழைக்கும் எந்தக் குரலுக்காகவும் காத்திருக்க, குழந்தைகள் பாதையைக் கடந்து போய்க் கொண்டிருக்க, அவரது பணிக்காலமும் கடந்துவிடப் பார்க்கும் வலி மிகுந்த பொழுதில் வேதனையோடு முடிகிறது. தொகுப்பின் சிறப்பான கதையாகப் பட்டது எனக்கு.

"ஆற்றுப்படுத்துதல்" கதை, அன்பான நண்பரது குடும்பத்தில் திடுதிப்பென்று மறிக்கும் அவரது மனைவியின் மரணச் செய்தியினால் சூழும் நினைவுகளோடு வேக வேகமாக இன்னொரு நண்பரோடு அந்த ஊர் நோக்கிப் பயணப் படுவதைச் சொல்கிறது. சாவு எடுக்கப்பட்டபின் சற்றே காலம் தள்ளிப் போய்ச் சேருவது யாருக்குமே சங்கடத்தையும், உளைச்சலையும் கூட்டும். பரிச்சயமான முகத்தை இனி ஒரு போதும் பார்க்க முடியாத வலி அது. அப்படியான நேரத்தில் துணையை இழந்து நிற்பவரைப் பார்க்கவும் நெருடும். இத்தனை உணர்வுகளைத் தூண்டும் கதை.

வாழ்க்கைக் கணக்கில் தோற்கும் கணக்கு வாத்தியார் (சூத்திரங்கள்), சாதி விட்டு சாதி திருமண அழைப்பிதழைக் காலத்தின் விதியாய்ச் செரித்துக் கொள்ளும் குடும்பப் பெரியவர் ( "அவரவர் மனசு போல.."), எல்லாம் இருந்தும், குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடச் சொல்லும் அன்புக் கணவனால், வீட்டில் எதுவுமே இல்லாதபடி ஆக்கும் எந்திரகதியான ஐ டி வாழ்க்கையில் தவிக்கும் மனைவி (அவனும் அவளும்), கல்விக் கடனுக்குத் திண்டாடும் பொறுப்புள்ள தந்தையின் நிச்சயமற்ற அலைச்சல்கள் (இன்றும் நேற்றே), இனம் புரியாத முரட்டுத் தனத்தில் வாழ்க்கையைக் கடத்தும் இளைஞனிடமும் துளிர்க்கும் ஒரு நேயம் (முட்பூ)....என வெவ்வேறு தளங்களில் வாழ்க்கையின் வித விதமான காட்சிகளை நாறும்பூ தமது இளகிய மொழியின் கயிற்றில் அவற்றின் வண்ணம் போகாத வண்ணம் அலசி உலர்த்திப் போட்டிருக்கிறார்.

வீட்டுச் சாமான் களவு போனதைத் தாம் மன்னித்து மறந்தாலும், வேறொரு களவில் அகப்படும் கள்வன் காட்டிக் கொடுத்துவிட, அதற்கான சாட்சிக்கு காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்திற்கும் நடையாய் நடக்கும் நடுத்தர மனிதர்களின் கதை ("யாருக்குத் தண்டனை") நமது சட்டம், நீதி நடைமுறைகளின் முரண் தன்மை குறித்து நல்ல நகைச்சுவை குரலில் பேசுகிறது. முதியவர்களின் மரணம் வீட்டில் இருப்போரையும் விடுதலை செய்யும் விதமாய் நிகழ வேண்டும் என்று பேசும் (இலை உதிர்வதைப் போல்) கதை, ஒரு பெண் தனது பிரியத்திற்குரிய தாயை நினைவு கூறும் மதிப்பான சொற்களில் படைக்கப்படுகிறது.

தந்தையின் கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்படும் வாழ்க்கை சென்ற தலைமுறைகளின் இளசுகள், பெரிசுகள் யாவருக்கும் ஓரளவு பொதுவானது. பலாச்சுளை போல் முள்ளாலான கடினமான மேற்புறத்திற்குள் பொதிந்திருக்கும் அப்பாவின் வாஞ்சையை வெவ்வேறு விதமாய்க் கொணரும் "அப்பாவின் கடிதம்", "கையெழுத்து" கதைகள், ஒளிவு மறைவற்ற எதிரெதிர் கருத்தாக்கங்களுக்கிடையே பாறைக்கிடையே கசியும் சிலீரென்ற தூய்மையான நீரைத் தொடும் உணர்ச்சியைத் தருகின்றன. "ஹைக்கூ கவிதை" பெரிய மனுஷியாக வலம் வரும் சிறுமியிடம் குழந்தையாக மாறத் துடிக்கும் மனிதரின் மெல்லுணர்வின் தடம். இந்தக் கதைகளில் நாறும்பூவின் சொந்தத் தடயம் அதிகம் இருப்பதாகப் படுகிறது.

தலைப்புக் கதை, நன்கு இழைத்துச் செய்யப்பட்டிருக்கும் எழிலான மரச்சிற்பம். நண்பன் மறைவதோடு நட்பு மறைவதில்லை. நினைவுகள் கூட அகலுவதில்லை. ஆனால் அவன் இருந்தபோது போய்ப் பழகிய குடும்பத்தோடான உறவின் இழைகள் நைந்துவிடுகின்றன. நகர வாழ்க்கையின் தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணையில் இதற்கெல்லாம் நிகழ்ச்சி நிரலும் போடப்படுவதில்லை. தனக்கு அற்புத இலக்கியப் பக்கங்களை வாசிக்கப் பழக்கிக் கொடுத்தவனது நினைவை அங்கிருக்கும் ஒரு புத்தகத்தோடு எடுத்துக் கொண்டு நகர முயலும்போது, அதோடு போய்விடுவதில்லை, குடும்பத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள் என்று நண்பனின் மனைவி ஒரு கேவலால் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தும் "ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்" கதை வாசிப்பவரைத் தொடர் சிந்தனையிலும், நினைவுகளிலும் ஆழ்த்தும்.

நெல்லை வட்டார வழக்கின் சுவையான உரையாடல் மணக்க, பெரும்பாலும் சொற்சித்திரங்களாக நகரும் விவரிப்புகளில் மனித உணர்வுகளை மீட்டெடுக்கும் வேட்கை பரவிக் கிடக்கிறது. இடித்துவிட்டுப் போன பழைய வீடாய் நமது பண்பாக்கங்களை உலகமயம் உரு சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதன் கூறுகள் பழைய பர்மா தேக்கு மரக் கதவுகளாக, சன்னல்களாக இன்னும் மதிப்போடு கேட்பார்க்கு வாய்க்கும் வண்ணம் அறிவிக்கப்படுகிறது. அதன் ஒரு மெல்லிய பதிவாக விரிகின்றன இந்தத் தொகுப்பின் சிறுகதைகள்.

வம்சி புக்ஸ் நிறுவனத்திற்கும், சிறப்பான அட்டை ஓவிய வடிவமைப்பு செய்திருக்கும் ராஜ்குமார் ஸ்தபதிக்கும் பாராட்டுதல்கள். தோழமை நேயம் மலர முன்னுரை வழங்கியிருக்கும் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்து, வாசகருக்கு ஒரு வரவேற்புரை.

ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்
சிறுகதை தொகுப்பு
நாறும்பூநாதன்
வம்சி புக்ஸ்
19 டி எம் சாரோன், திருவண்ணாமலை
112 பக்கங்கள். விலை ரூ.70/-

Saturday, March 24, 2012

Book released


( Literary critic Thi. Ka. Si. releasing the book and film director Sugha receiving the first copy )


Writer Naarumpoonathan's ‘Jameelaavai yenakku arimugappaduththiyavan' book release function was held here on Saturday. Veteran literary critic Thi. Ka. Si. released the book and film director Sugha received the first copy. Writers Vannadasan, Udhayasankar, Zakhir Raja and Selvaraj spoke. Veteran writer Thoppil Mohamed Meeran, artist Pon. Vallinayagam and others participated. Performance by singers ‘Karisal Kuyil' and Thiruvudaiyaan, known for his song ‘Aaththaa un selai…', set an apt prelude to the book release function.


Thanks : The Hindu , February 7, 2012

Thursday, March 22, 2012

முகப்பு » ரசனை

நாறும்பூமாலை

‘என்னோட ரெண்டாவது புஸ்தக வெளியீட்டு விளாவுக்கு நீங்க அவசியம் வரணும்’.

இரண்டு மாதங்களுக்குமுன்பே சொல்லிவிட்டார், எழுத்தாளர் நாறும்பூநாதன். நாறும்பூநாதன் என்ற பெயரில் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் என்னும் செய்தியே எனக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் தெரிய வந்தது.சொன்னவர் நாஞ்சில் நாடன் சித்தப்பா. திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரான நாறும்பூநாதனின் பெயரை வைத்துக் கொண்டு ஒரு மனிதர் நடமாடுகிறார் என்ற செய்தியும், அதிலும் அவர் எழுதுகிறவர் என்கிற கூடுதல் தகவலும் என்னை ஆச்சரியப்படுத்தின. இத்தனைக்கும் அவர் திருநெல்வேலியிலேயே வேறு இருக்கிறார்.

நாறும்பூநாதனை நான் கேள்விப்பட்டிருந்த சில மாதங்களிலேயே என்னைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றுவிட்டு சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவர் வந்து சந்தித்த போது, ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் அவர் என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தையும் படித்து முடித்திருந்தார். முதன்முதலில் சந்தித்தபோது எங்கள் இருவரையுமே இணைத்தது ‘கூச்சம்’. தன் ‘பளபளக்கும்’ தலை குனிந்து அவரும், கண்ணை மறைக்கும் சிகை ஒதுக்கி நானும் அவ்வப்போது ஒருவர் முகம் மற்றவர் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டோம்.

சென்னைக்கு நான் திரும்பிய பிறகு இயல்பாக ஒருசில மின்னஞ்சல்களிலும், தொலைபேசி அழைப்புகளிலும் பேசிக் கொண்டோம்.அதன்பின் நான் திருநெல்வேலிக்குச் செல்லும் போதெல்லாம் நாறும்பூநாதனைச் சந்திக்காமல் வருவதில்லை.எங்கள் சந்திப்பில் தவறாது இடம்பெறக்கூடிய மற்றொருவர், ஜானகிராம் ஹோட்டலின் பங்குதாரரோ என்று ஆரம்பத்தில் நான் சந்தேகித்த ‘கவிஞர்’ க்ருஷி. க்ருஷி ஸார்வாளும், திருநெல்வேலியின் ஜானகிராம் ஹோட்டலும் சாகித்ய அகாடமி விருதும், சர்ச்சையும் போல பிரித்துவிடவே முடியாத மாதிரி அவ்வளவு நெருக்கம். இரண்டு மாதங்களுக்குமுன்ஒருமாலைவேளையில் ஜானகிராம் ஹோட்டலின் Roof gardenஇல் வைத்துத்தான் தோழர் நாறும்பூநாதன் தனது இரண்டாம் புத்தக வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார். ‘தம்பி, நீங்க வரலேன்னா இந்த விளா நடத்தியே ப்ரயோஜனமில்ல பாத்துக்குங்க’. சரித்திர நாடகங்களில் நடிக்கும் ஹெரான் ராமசாமியின் குரலை ஞாபகப்படுக்கிற ஒலியில் க்ருஷி ஸார்வாள் கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னார்.

narumbu-invi-final-2

திருநெல்வேலிக்கு வர இருப்பதை வழக்கம்போல குஞ்சுவுக்கும், பின் மீனாட்சிக்கும் சொல்லியிருந்தேன்.நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸில் போய் இறங்கியவுடனேயே மீனாட்சி ஃபோனில் அழைத்தான்.

‘வந்துட்டேளா சித்தப்பா?நான் எப்பொ எங்கெ வரணும்?’

‘சாயங்காலம் ஜானகிராம் ஓட்டலுக்குப் போகணும். வந்துரு.’

‘விஞ்சைக்குப் போயிருவோமெ!நாளாச்சுல்லா.அண்ணாச்சியும் ஒங்கள பாத்தா சந்தோசப்படுவா’.

‘ஏ மூதி!திங்கிறதுலயெ இரி.ஜானகிராம் ஓட்டல்ல நம்ம நாறும்பூ ஸாரோட பொஸ்தகம் வெளியிடுற விளால’.

‘பொஸ்தவமா?சரியாப் போச்சு. எனக்கும் எலக்கியத்துக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்?நீங்க போயிட்டு வாங்க’.

‘எல எனக்கு மட்டும் என்ன சம்பந்தம் இருக்கு? மதிச்சு கூப்பிடுதாங்க. வராம இருந்திராத’.

சாயங்காலம் மேலரதவீதி வழியாக குஞ்சு, மீனாட்சியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ’சோனா’ மாமா கடையை அடுத்த சுவரைக் காண்பித்து மீனாட்சி ‘சித்தப்பா, அங்கெ பாருங்க’ என்றான். ‘எழுத்தாளர் நாறும்பூநாதனின் புத்தக வெளியீட்டு விழா’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த்து . பெரிய எழுத்தில் ‘சுகா’ என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் சங்கடமாக இருந்த்து. ‘சே என்னல இது? பெரிய பெரிய ஆட்கள் பேரயெல்லாம் சிறுசா போட்டு நம்ம பேர அத்தா தண்டிக்கு போட்டிருக்கங்க?’ என்றேன். ’என்ன சித்தப்பா இப்பிடி சடச்சுக்கிடுதிய! மூங்கில் மூச்சு என்னா ரீச்சுங்கிய! அத படிச்சுட்டு நம்ம ஊர்ல எத்தன பேரு ஒங்கள பாக்கணுன்னு துடியா துடிக்காங்க, தெரியுமா?’ என்றான், ‘மூங்கில் மூச்சு’ தொடரின் ஒரு அத்தியாயத்தைக் கூட இன்றுவரை படித்திராத மீனாட்சி.

ஏற்கனவே கொஞ்சம் தாமதமாக போகலாம் என்று குஞ்சு சொல்லியிருந்தான். ‘எல நீதான் சீஃப் கெஸ்ட்டு. நீ மொதல்லயெ போயி பறக்க பாத்துட்டு உக்காந்திருக்கக் கூடாது.கொஞ்சம் லேட்டா போனாத்தான் ஒரு பரபரப்பு இருக்கும்’. அவன் எதிர்பார்க்கிற பரபரப்பில் நானே பயந்து விடுவேன் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தும், ஏனோ அதற்கு ஆசைப்பட்டான். ’சும்மா கெடல, கோட்டிக்காரப்பயலெ’ என்று சொல்லிவிட்டு, சரியான நேரத்துக்கே டவுணிலிருந்து கிளம்பிவிட்டேன். ஆனாலும் அன்றைக்குப் பார்த்து ‘மக்கள் தளபதி’ ஜி.கே.வாசன், ‘அரசியல் துருணோச்சாரியார்’ ப.சிதம்பரம், ‘இளம் பெரியார்’ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இளைய தலைவர்’ கார்த்தி சிதம்பரம் போன்றோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டதுக்காக நகர் முழுவதும் பேனர்களும், வரவேற்புத் தோரணங்களும், வாகனங்களுமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக டவுணிலிருந்து ஜங்ஷன் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. வழக்கமாக பதினைந்து நிமிடங்களில் சென்று விடலாம்.

ஜானகிராம் ஹோட்டலின் மாடிப்படிகளில் அவசர அவசரமாக ஏறினோம். விழா நடைபெறும் வாசலில் நாறும்பூநாதனும், க்ருஷி ஸார்வாளும் நின்று கொண்டிருந்தனர்.‘தம்பி, இன்னும் ஒங்க காலு சரியாகல போல தெரியுதெ!’ க்ருஷி ஸார்வாளின் தொண்டை வழியாக ஹெரான் ராமசாமி என்னிடம் அக்கறையாகக் கேட்டார்.‘எல்லாரும் வந்தாச்சு.உள்ள வாங்க’.கைபிடித்து அழைத்துச் சென்றார் நாறும்பூநாதன்.உள்ளே தி.க.சி தாத்தா, தோப்பில் முகம்மது மீரான் அண்ணாச்சி, நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி போன்றோர் அமர்ந்திருந்தனர்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த ’வானம்பாடி’ சங்கர் சித்தப்பாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மேடையில் ‘திருவுடையான்’ தபலா வாசித்துக் கொண்டே அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தகக் கண்காட்சியின்போது திருவுடையானின் கச்சேரியைக் கேட்டு ரசித்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது. தாளவாத்தியம் வாசித்துக் கொண்டே பாடுவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. முயன்று பார்த்தால்தான் தெரியும். பலமுறை முயன்று கேவலப்பட்டிருக்கிறேன்.(அதேபோலத்தான் ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் தீபாராதனையும் காட்டுவது. முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்).திருவுடையானுக்கு முன்பே ‘கரிசல் குயில்’ கிருஷ்ணசாமி பாடிவிட்டதாகச் சொன்னார்கள். அவர் குரலைக் கேட்க முடியாமல் போனதில் வருந்தினேன். திருவுடையானைப் பற்றி ஒருமுறை இளையராஜா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ’ஸார், திருவுடையான்னு ஒரு பாடகர். கம்யூனிஸ்ட் கட்சி மேடைகள்ல . . .’ நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘ஆங், தெரியும். ‘விருமாண்டி’ பட்த்துல ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ பாட்டு பாட வச்சிருந்தேனே’ என்றார்.

என்னை உள்ளே அனுப்பிவிட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்த குஞ்சு பதற்றமான முகத்துடன் உள்ளே வந்து என்னருகில் அமர்ந்து கொண்டான்.

‘ஏம்ல ஒருமாரி இருக்கெ?’

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் கிசுகிசுத்தான்.‘வாசல்ல படியேறி வார ஒவ்வொருத்தர்க்கிட்டெயும் க்ருஷி ஸார்வாள், இந்தா நிக்காரு பாத்தேளா!இவாள்தான் ‘மூங்கில் மூச்சு’ல வார குஞ்சு’ன்னு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டா.விட்டா என் நெத்தில திருநாறு பூசி கைல கவர் குடுத்துருவாங்களோன்னு பயமாயிட்டு. அதான் நைஸா உள்ள வந்துட்டென்.’

release

தி.க.சி தாத்தா, ‘தேநீர்’ நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி, எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, எழுத்தாளர் உதயசங்கர் போன்றோருடன் மேடையில் உட்கார்ந்திருக்கும் போது மனதுக்குள் தயக்கமாகவே இருந்தது. அசல் எழுத்தாளர்களான இவர்களுடன் சரிசமமாக என்னையும் உட்கார வைத்திருக்கிறார்களே என்கிற சங்கோஜம் விழா முடியும்வரை என் மனதைவிட்டு அகலவே இல்லை. இந்த விழாவில் தோழர் பவா செல்லத்துரையும், அவரது துணைவியார் கே.வி.சைலஜாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அவர்கள் இருவருமே எனக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழி உறவுக்காரர்கள். நேரில் சந்திக்கக் காத்திருந்தேன். விழாவன்று காலையில்தான் அவர்கள் வரவில்லை என்னும் செய்தியை நாறும்பூநாதன் சொன்னார். குறிப்பாக தோழர் பவா செல்லத்துரையைச் சந்திக்க அதிகம் விரும்பினேன். காரணம், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும் போது என்னைவிட அவர் நிறம் என்று தோன்றுகிறது. அருகருகில் அமர்ந்து டெஸ்ட் செய்து பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதில் வருத்தம்தான்.

speech

ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ எழுதிய நாறும்பூநாதனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்’ என்று நான் பேசிய முதல் வரி மட்டும்தான் என் காதில் விழுந்தது. என் பேச்சுக்கு நடுவே நான்கைந்து இடங்களில் கைதட்டலெல்லாம் கூட கேட்டது. என்ன பேசினேன் என்றுதான் தெரியவில்லை.தோழர் நாறும்பூ வீடியோ ஏற்பாடு செய்திருந்தாரா என்று கவனிக்கவில்லை. ஒருவேளை எடுத்திருந்தால் அதைப் பார்த்து நான் பேசியதைத் தெரிந்து கொள்ள ஆவல்.ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் விதமாக மிகச் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தி.க.சி தாத்தாவிலிருந்து அனைவருமே பேசினார்கள்.அநேகமாக எல்லோருமே எழுதி கையோடு கொண்டு வந்திருந்த குறிப்புகளுடன் பேசினார்கள். அதுவும் கீரனூர் ஜாகீர் ராஜா ஒரு முழுநீள கட்டுரை எழுதி வந்து குரல் நடுங்க வாசித்து முடித்து, என்னருகில் அமர்ந்து ஒட்டுமொத்த மேடையையும் லேசாகக் குலுக்கினார்.‘நாறும்பூரெண்டாம் புஸ்தகம் எளுதியிருக்கதெ எனக்கு இன்னைக்குதானெ தெரியும்’ என்கிற விதமாக தோப்பில் அண்ணாச்சி படு இயல்பாகப் பேசினார்.வண்ணதாசன் அண்ணாச்சி தன் பேச்சில் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்துகளை சிலாகித்துச் சொன்னார்.சமீபத்தில்தான் உதயசங்கர் எழுதிய ‘முன்னொரு காலத்திலே’ புத்தகத்தைப் படித்திருந்தேன் என்பதால் வண்ணதாசன் அண்ணாச்சியின் பாராட்டு சரியாகவே இருந்தது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துச் செய்தியை தோழர் பாஸ்கரன் மேடையில் வாசித்தார்.அதில் சற்றும் எதிர்பாராவிதமாக என்னை பாராட்டி கூச்சத்தில் நெளிய வைத்தன சில வரிகள்.அதை மிஞ்சும் விதமாக ஐயா டி.செல்வராஜ் அவர் பங்குக்கு என்னை கலவரப்படுத்தினார்.‘ஒங்க எளுத்து எனக்கு ரொம்பப் புடிக்கும்.நான் எளுதுன ‘தோல்’ நாவல படிச்சு பாத்து ஒங்க அபிப்ராயத்த எளுதுங்க’.

விழா முடியும்வரை குஞ்சு ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததை கவனித்தேன்.‘ஏம்ல வெளக்கெண்ணெ குடிச்சா மாரியே இருக்கெ?’ என்று கேட்டதற்கு, ‘போலெ போ. எந்த நேரம் க்ருஷி ஸார்வாள் மேடையேறி ‘அடுத்து ‘மூங்கில் மூச்சு’ புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்’னு சொல்ல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்.

தோழர் நாறும்பூநாதனை நான் போய் பாராட்டாவிட்டாலும் அவர் பாரட்டுக்குரியவர்தான். தொழிற்சங்க வேலைகளுக்கு இடையே அவ்வப்போது எழுதிவருகிற அவர், இனிவரும் காலங்களில் நிதானமாக எழுதுகிற பட்சத்தில் இன்னும் வலுவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பது என் அபிப்ராயம். இந்த விழாவில் நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஓர் உதவியை நாறும்பூநாதன் செய்தார். சொல்வனம் பிரசுரம் வெளியிட்ட எனது ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிற ‘திருநவேலி’யின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மற்றும் கோட்டோவியங்கள் தந்த படைப்பாளிகளை சொல்வனம் சார்பாக கௌரவப்படுத்தும் வாய்ப்பை தனது விழாமேடையிலேயே அமைத்துத் தந்தார்.

valli

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வள்ளிநாயகத்தின் ஓவியம் ஒன்று]

1081

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இசக்கி எடுத்த ஒளிப்படம் ஒன்று]

காலம் சென்ற புகைப்படக் கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டியையும், ஓவியர் பொன் வள்ளிநாயகத்தையும் எழுத்தாளர் நாறும்பூநாதனின் ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ மேடை கௌரவப்படுத்தியது.


[சுகாவுடன் ஓவியர் பொன் வள்ளிநாயகம்]

[சுகாவுடன் அருண்குட்டி]

ஓவியர் வள்ளிநாயகம் எப்போதும் என்னுடன் தொடர்பிலேயே இருக்கிற என் தம்பி.ஆனால் இசக்கி அண்ணாச்சியையோ, அவரது குடும்பத்தினரையோ நான் அறிந்தவன் அல்லன். ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அதிகம் சிலாகித்த இசக்கி அண்ணாச்சியின் புகைப்படங்கள் ‘தாயார் சன்னதி’ புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.இசக்கி அண்ணாச்சியைச் சந்தித்ததில்லை. ஆனால் சென்னைக்கு நான் ரயில் ஏறும்போதுரயில்வே ஸ்டேஷனில் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நின்றார். இசக்கி அண்ணாச்சியின் கைகள்தான் அவை.

Saturday, March 17, 2012

தகுந்த மதிப்பெண்கள் போடுவது எப்படி?

First Published : 17 Mar 2012 01:26:29 AM IST


ஜனவரி, பிப்ரவரி பிறந்துவிட்டால் போதும். பிளஸ் டூ பயிலும் மாணவ, மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? சுலபமாய் மதிப்பெண்கள் பெற நூறு டிப்ஸ், மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என்று ஊடகங்கள் விதவிதமாய் செய்திளை வெளியிடுகின்றன. பல்வேறு கல்வியாளர்களின் பேட்டிகள், உளவியல் நிபுணர்களின் பரிந்துரைகள்... மாணவர்கள் திக்கு முக்காடித்தான் போகிறார்கள். நல்லது.
இவற்றின் நீட்சியாக விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களின் பணி குறித்தும், விடைத்தாள் திருத்தும் மையங்களின் வசதிகள் குறைத்தும் பேச வேண்டிய அவசியம் உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் பிளஸ் டூ தேர்வுகள் இறுதி வாரத்தில் முடிவடைகின்றன. இந்த விடைத்தாள்களுக்கு டம்மி எண்கள் கொடுக்கப்பட்டு வெவ்வேறு மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட எல்லா மாவட்ட தலைநகரிலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உள்ளன. மாவட்டத் தலைநகரில் எல்லா அடிப்படை வசதிகளும் அமைந்த பள்ளியை விடைத்தாள் திருத்தும் மையமாக அரசு தேர்வு செய்ய வேண்டும். இது மிக மிக முக்கியமானது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும். நல்ல காற்றோட்டமான வசதி கொண்ட வகுப்பறைகள் இருக்க வேண்டும். பேப்பர் திருத்தும் காலம் சரியான கோடை காலம் என்பதால் மின் விசிறி பொருத்தப்பட்ட அறைகளாக இருக்க வேண்டும். தடையற்ற மின்சாரம் இப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். (தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்பு, ஏப்ரல் இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்).
ஆசிரியர்கள் அமர்வதற்குச் சரியான இருக்கைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பல பள்ளிகளில் வகுப்பறை போதாமல், வேதியியல் ஆய்வுக்கூடங்களில் அமர்ந்து விடைத்தாள் திருத்திய அனுபவங்கள் ஆசிரியர்களுக்கு உண்டு. மின் விசிறி இல்லாமல், உஸ்... உஸ்... என்று பேப்பரால் விசிறிக் கொண்டு தூண்களில் சாய்ந்தபடி பேப்பர் திருத்தும் வயதான ஆசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது.
ஆசிரியர்களுக்கு நல்ல குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது பாட்டிலில் தண்ணீர் கொண்டு வரும் சூழலே நீடிக்கிறது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சிவப்பு பால் பேனாக்களை அரசே வழங்கலாம். இதுநாள்வரை ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவிலேயே வாங்கி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை 12 விடைத்தாள்களும், மாலை 12 விடைத்தாள்களும் ஒவ்வோர் ஆசிரியருக்கும் வழங்கப்படுகிறது. நிதானமாய் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குறைந்த எண்ணிக்கை. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அந்தந்தப் பள்ளியிலேயே இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, அவர்கள் குளிப்பதற்கும், கழிப்பறை செல்வதற்கும் அடிப்படை வசதிகளை பள்ளிகள் செய்து தர வேண்டும். பராமரிப்பில்லாத கழிப்பறைகள், குளியலறைகள் இருக்கும்பட்சத்தில் பெண் ஆசிரியர்களோ, ஆண் ஆசிரியர்களோ தங்குவதற்குப் பயந்து, தினமும் தங்களது ஊர் சென்று திரும்புவார்கள். இரவு 7 மணிக்கு தங்களது ஊர் பேருந்தைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் கடைசி நேரத்தில் பதற்றத்துடன் விடைத்தாள்களைத் திருத்துவார்கள். "அவனுக்கு நேரம் சரியில்லை' என்பார்களே... அது இதுதான்' இந்த நேரத்தில் ஆசிரியரின் கையில் எவன் பேப்பர் கிடைக்கிறதோ... அவனுக்கு "நேரம் சரியில்லை'தான். அந்தி சாயும் வேளையில், கண்ணாடி போட்டபடி அவசர அவசரமாய்த் திருத்த முற்படும்போது, தவறு ஏற்பட வாய்ப்பு அதிகம்!

ஆசிரியர்கள் மனநிலை சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் விடைத்தாள் திருத்தும் மையத்திலேயே தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வீட்டுக்குச் சென்றால் மனைவி, குழந்தைகளுடன் ஏதேனும் சண்டை சச்சரவு ஏற்படும் சூழலில், அதன் வெளிப்பாடு விடைத்தாளில் பிரதிபலித்துவிடக் கூடாது என்பதுகூட பிரதான காரணங்களில் ஒன்று. ஆசிரியர்கள் இதை உணர வேண்டிய அதே நேரத்தில், பள்ளி நிர்வாகங்களும் இந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வைக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையம், பேருந்து வசதி அடிக்கடி கொண்டதாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய இடமாக அமைய வேண்டும்.

திருத்தும் ஒவ்வோர் ஆசிரியரும், திருத்தும் வேளையில் தமது குழந்தைகளை நினைத்தபடி திருத்தினால் கவனம் சிதறாது. நிச்சயமாக மாணவச் செல்வங்கள் யாவருமே அவர்களது குழந்தைகள்தானே? இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் அழைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் பிளஸ் டூ ஆசிரியர்களில் 75 சதவிகிதம் பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். பேப்பர் திருத்தும் பணியில் ஈடுபடாமலேயே பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர்களும் உள்ளனர். "மேலிட' செல்வாக்கு காரணமாக, அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடாமல் தப்பித்து விடுகின்றனர். இதில் பாதிக்கப்படுவது இவர்களிடம் பயிலும் மாணவர்கள்தாம்
. ஒரு வினாவுக்கு எப்படி விடை எழுத வேண்டும்? அதற்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்படுகிறது என்பதை விடைத்தாள் திருத்தி அனுபவப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே தமது மாணவர்களுக்கு விளக்க முடியும். ஒப்பீட்டளவில் பார்த்தால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் திருப்திகரமானது என்றே கூற வேண்டும். எனவே, ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியும் ஆசிரியப் பணியின் ஒரு பகுதியே என்பதை உணர வேண்டும்.

போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட மாணவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. அரை மதிப்பெண்ணில் நல்ல பொறியியல் கல்லூரியை கோட்டை விடும் மாணவியும் உண்டு. எனவே, விடைத்தாளின் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மதிப்புமிக்கது.
மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே ஆசிரிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள்கொண்ட பள்ளியைத் தேர்வு செய்து முறைப்படி அறிவிக்கலாம். ஒவ்வோராண்டும் விடைத்தாள் திருத்தும் பணி என்பது நிரந்தரம் ஆனதால், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் விடைத்தாள் திருத்தும் மையம் என்ற கட்டடத்தை அரசே கட்டலாம். அதிலே அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர முடியும். ஏனைய நாள்களில், ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் கூடங்களாகக்கூட அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மொத்தத்தில், விடைத்தாள் திருத்தம் மையங்கள், எல்லா அடிப்படை வசதிகளுடனும் இருந்தால் ஆசிரியர்கள் நல்ல மன நிலையில் பணி புரிய முடியும். நல்ல மனநிலையில் பணி புரிந்தால், மாணவர்களின் விடைத்தாள் நல்ல முறையில் திருத்தப்படும். அதைவிட வேறு "அதிர்ஷ்டம்' என்ன வேண்டும்?
நன்றி : தினமணி மார்ச் 17