Friday, December 7, 2012

பெண்கள் "பேப்பர்' படிக்கிறார்களா... By ஆ. சிவகாமசுந்தரி First Published : 24 November 2012 01:33 AM IST

First Published : 24 November 2012 01:33 AM IST
நமது நாட்டுப் பெண்கள் அன்றாடம் செய்தித்தாள்களைப் படிக்கிறார்களா என்று ஒரு ஆய்வு செய்தால் மனதிற்கு மிகவும் சங்கடமான பதில்தான் கிடைக்கும். அப்படியே படித்தாலும் என்ன மாதிரி செய்திகளை, எப்படிப் படிக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால் அது பல ருசிகரமான தகவல்களைத் தரக்கூடும்.
என்னோடு பணிபுரிபவர்கள், பக்கத்து வீட்டுப் பெண்கள், நெருங்கிய தோழிகள், உறவுக்காரப் பெண்கள் என்று பழகிய பெண்கள் கூறிய வகையில் பார்த்தால், செய்தித்தாள் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. சிலர், "தலைப்பு'ச் செய்திகளை மட்டுமே வாசிக்கின்றனர். இன்னும் சிலர் சினிமாச் செய்திகள் படிப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் விடுமுறை நாள்களில் மட்டும் படிப்பதுண்டு. இன்னும் சிலர் மத்திய, மாநில அரசுகளின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை மட்டும் தவறாது படிக்கின்றனர்!
அலுவலகப் பெண்கள், தாம் சார்ந்த துறை சம்பந்தப்பட்ட செய்திகள் ஏதும் இருந்து கணவர் ஞாபகப்படுத்தினால் அந்த நேரம் படிக்கின்றனர். மழைக்காலங்களில் தொடர்மழை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் தமது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளாரா என்று ஆசிரியைகள் படபடப்புடன் பிரித்துப் பார்கின்றனர்.
சிலர் ஜோதிடப் பலன்களைப் பார்க்க ஆர்வம் செலுத்துவது உண்டு. பொதுவாய் ஜோதிடப் பலன்களில் பெண்களுக்கு என்று ஒரு வரி மட்டுமே பலன் போட்டிருப்பார்கள்; மீதியெல்லாம் ஆண்களுக்கானவை போலும்!
பெரும்பாலும் பெண்கள் அவர்களுடைய குடும்பச் சூழல், வீட்டு வேலை, வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால் அதற்கும் சேர்த்து தயாராக வேண்டிய கடமை காரணங்களால் சாவகாசமாக செய்தித்தாள் படிக்க முடியாமல் போகிறது.
நமது நாட்டில் அரசியலே ""ஆண்களுக்கு மட்டும்'' என்பது போன்ற போக்குதான் பொதுவாக நிலவுகிறது. ஒரு சில பெண் முதல்வர்கள், சில பெண் எம்.பிக்கள், சில எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.
நேரடியான அரசியலுக்கு வருவது ஒரு புறம் இருக்கட்டும். நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கும் பார்வையாவது பெண்களுக்கு வரவேண்டுமே!
அண்ணா ஹசாரே, அரவிந்த கேஜரிவால், 2ஜி ஸ்பெக்ட்ரம், வதேரா, கூடங்குளம்  அணுஉலை உதயகுமார் என்று அன்றாடம் அடிபடும் பெயர்களை முழுமையாகப் படிக்க முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு இளம்பெண் அவளது திருமணம் நடந்ததையொட்டி அரசு அளித்த உதவித்தொகை அடங்கிய கடித உறையை வைத்திருந்தாள். அதில் "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம்' என்று அச்சிட்டிருந்தது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரை தமிழ்நாட்டில் எத்தனை பெண்களுக்குத் தெரியும்? ஏதோ ஒரு திராவிடக் கட்சியின் பெண் தலைவராக இருக்கும் என்றே பலர் நினைக்கக்கூடும்.
இதுபோல, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, கேப்டன் லட்சுமி ஷெகல், தில்லையாடி வள்ளியம்மை என எத்தனையோ வீரப் பெண்களின் வரலாறு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தினமும் செய்தித்தாள்களை வாசிக்கும்பட்சத்தில் இவர்களைப் பற்றி அவ்வப்போது வரும் செய்திகளைத் தொடர்ச்சியாக அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
 பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கும் அதே நேரத்தில், நாட்டின் அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் போக்கு பெண்கள் மத்தியில் உருவாக வேண்டும். அது இல்லாமல் இருப்பதால்தான் ஆண்கள் தொகுதியை பெண்களுக்கான தொகுதியாக மாற்றும்போது, கணவன்மார்கள் லாலு பிரசாத் பாணியில், தங்களது மனைவிமார்களைப் போட்டியிட வைத்து, வெற்றிக்குப்பின் தங்களது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்கின்றனர்.
 கூடங்குளத்தில் அணுஉலை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் தினமும் ஊடகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் ஏராளமான பெண்கள் தங்களது வாழ்வாதாரம் குறித்த அச்சத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். பிற பகுதிகளில் உள்ள பெண்கள் இது குறித்து யோசிக்கிறார்களா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் இது பற்றிய செய்திகளையாவது படிக்கிறார்களா என்றும் தெரியவில்லை.
அணுப்பிளவு குறித்து ஆராய்ச்சி செய்து, அணுப்பிளவின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்திய முதல் விஞ்ஞானி மேடம் கியூரி என்ற பெண்மணி. பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த ஆண் விஞ்ஞானிகளுக்குப் பக்கபலமாக இருந்து குறிப்புகள் எடுத்துக் கொடுத்ததும் அவர்தம் மனைவிமார்களாக இருந்த பெண் விஞ்ஞானிகளே என்பதும் வரலாற்று உண்மைகளே.
அரசியல், விஞ்ஞானம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருவது வரவேற்கத்தக்க விஷயமே எனினும் அவர்கள் பெண்கள் என்பதாலேயே எல்லாவற்றையும் வரவேற்றுவிட முடியாது. சமூகம் சார்ந்த மதிப்பீடுகளுக்கான அளவுகோல் அவர்களுக்கும் பொருந்தும். அந்த அளவுகோலில் வெற்றிபெற்ற பெண்களே சரித்திரத்தில் இடம்பிடிப்பர். இந்த உண்மையை அறிந்து கொள்ள தொடர்ச்சியான வாசிப்பு வேண்டும். ஆம், பெண்கள் தொடர்ச்சியாக செய்தித்தாளை வாசித்தால் மட்டுமே இது சாத்தியம்.

கருத்துகள்(3)

பெண்களுக்கு நமது நாட்டு அரசியல் போக்கு பற்றிய விழிப்புனர்வவது கண்டிப்பாக வேண்டும்..,அதற்க்கு வுடகங்கள் மட்டுமே துணை புரியும் என்பதே உண்மை..,
பெண்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லாமல் இர்ருப்பதால்தான் அவர்களின் கணவர்கள் அவர்களுக்கு பதிலாக பெரும்பான்மையான பெண்கள் பிரச்சினைகளுக்கு நம் நாட்டில் சரியான தீர்வு காணபடாமல் இருக்கின்றது
பெண்கள் பேப்பர் படிக்கிறார்களா....... சிந்திக்க வைக்கும் தலைப்பு. எல்லா வீடுகளிலும் பேப்பர் வாங்கபடுவதில்லை, என்பதே அதிர்ச்சியான விஷயம். டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவர். அவரை கல்லூரியில் சேர்த்தால் ஆண்கள் கவனம் சிதறும் என்று சொன்னதும். பிரிட்டிஷ் அதிகாரி கவனம் சிதறுபவர்கள் படிப்பை நிறுத்தி கொள்ளட்டும், அந்த ஒரு பெண் டாக்டர் ஆனால் போதும் என உறுதியாக நின்றதால் அவர் மருத்துவர் ஆனார். சமிபத்தில் இறந்த கேப்டன் லட்சுமி ஷெகல் வீரமிக்க வரலாறு பெண்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். இன்று மாறிவிட்ட சூழ்நிலையில் பெண்களுக்கு சமூக அக்கறை வேண்டுமானால் பத்திரிக்கைகளை படிக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டுரை எழுதிய சகோதரியை பாராட்டுகிறேன். பெண்களும் ஆன்மிகம் மற்றும் ஜோதிட செய்திகளை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் படிக்க வேண்டும்.
(Press Ctrl+g or click this 
 to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க

*
1000 ஏதாவதொன்று
reCAPTCHA சேலஞ்ச் படம்

புதிய சேலஞ்சைப் பெறுக
ஆடியோ சேலஞ்சைப் பெறுகபார்வை சேலஞ்சைப் பெறுக
உதவி
வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Sunday, July 8, 2012

இது வாழ்க்கையோடு இணைந்த கல்வி...ஆ. சிவகாமசுந்தரி First Published : 07 Jul 2012 12:57:15 AM IST


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானபோது 500-க்கு 497 மதிப்பெண்கள் எடுத்த மாணவரைப் பார்த்துத் தமிழகமே வியந்தது. தமிழில் கூடவா 100 மதிப்பெண்கள் என்றெல்லாம் ஆங்காங்கே குரல்கள் எழும்பின. ஓர் ஆசிரியை என்ற வகையில் நான் உள்ளபடியே சந்தோஷமும், பெருமிதமும் அடைகிறேன். சமச்சீர் கல்வி என்ன பாடுபடுத்தப்போகிறதோ என்று பயந்த மாணவர்கள், பெற்றோர்கள், இப்போது அதன் மகத்தான வெற்றியைக் கண்டு அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள். வாழ்க்கையோடு ஒன்றிய கல்வித்திட்டமாய் அமைந்து போனதுதான் அதன் ரகசியம் என்பேன்.

உதாரணத்திற்கு, கடந்த காலங்களில் சிறுநீரகத்தின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் என்று அறிவியலில் கேள்வி கேட்பார்கள். தற்போதைய புதிய கல்வித் திட்டத்தில் கேட்கப்படும் வினாத்தாளிலேயே சிறுநீரகத்தின் படத்தை வரைந்திருப்பார்கள். படம் பார்த்து, விடைத்தாளில் சிறுநீரகத்தின் படத்தை வரைந்து ஏதேனும் 2 பாகங்களைக் குறிப்பிடவும் என்று கூறப்படுகிறது. இது மாணவர்களுக்கு எளிதாக உள்ளது. ஒரு சிறுநீரக உறுப்பின் பாகங்கள் இன்னென்ன என்று அவன் அறிந்துகொள்ள இதுவே சிறந்த உத்தி எனலாம். சிறுநீரகம் எவ்வாறு இருக்கும் என்பதை அவன் மனப்பாடமாக அறிந்திருக்கவோ அல்லது நன்றாக ஓவியம் வரையத் தெரிந்த வல்லுநராகவோ இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை மருத்துவப் படிப்பில் விருப்பம் உள்ளவராக இருந்தால், அவன் கல்லூரியில் அது குறித்து விரிவாய்ப் படித்துக்கொள்ளலாம்.


அதேபோல, "உனது தோழி சுகன்யாவிற்கு சளி பிடித்துள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவாய்?' என்று ஒரு கேள்வி வருகிறது. இது மாணவ மாணவியர் இயல்பாய் பதில் சொல்ல வழி சொல்கிறது. அவள் தும்முவதைப் பார்த்து, அவள் குரலில் ஏற்படும் மாற்றம், கண்களில் சிவப்பு நிறம், சமயங்களில் காய்ச்சல் என காரணங்களை அவர்களால் இயல்பாய் எழுத முடிகிறது. இதுபோலவே கொசு கடித்தால் என்ன நோய்கள் வரலாம்? உடல் பருமனைக் குறைக்க என்ன செய்யலாம்? போன்ற கேள்விகள் உயிரியல் பாட சம்பந்தமான கேள்விகளாகக் கேட்கப்படும்போது, மாணவர்கள் சாதாரணமாய் டெங்கு, மலேரியா என்றும், நடைப்பயிற்சி என்றும் இயல்பாய்ப் பதில் சொல்கிறார்கள். ஆர்வமாய் விடை எழுதுகிறார்கள். 15 வயது அனுபவங்களின் வெளிப்பாடாக, ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் சட் சட்டென்று எளிதாக வெளிப்படுத்த முடிகிறது.

தமிழ்ப் பாடத்தைப் பொருத்தவரையில் வகுப்பறைத் திறன் வளர்த்தல், வாழ்க்கைத் திறன் அறிதல், தயக்கமின்றித் தமிழ் பேசுவோம் எனப் பல சுவையான பகுதிகள் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் பின்னூட்டமாக அமைந்துள்ளன. உதாரணத்துக்கு... ""டாடி வர்ர சண்டே எனக்கு பர்த்டே. பட், நீங்க இன்னும் எனக்கு பர்த்டே டிரஸ் எடுக்கவில்லையே, வொய் டாடி? என்னோட பிரெண்ட்ûஸயெல்லாம் வீட்டுக்கு வரச்சொல்லி கால் பண்ணியிருக்கிறேன்'' ""சண்டே வர்றதுக்கு இன்னும் ஸிக்ஸ் டேஸ் இருக்குதே, டோண்ட் வொர்ரி. டுமாரோ ஈவினிங் ஷாப்பிங் போகலாம். இப்ப உனக்கு ஹேப்பி தானே?'' தந்தைக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைப் படித்தீர்களா? இப்படிப் பேசினால் தமிழுக்கும் பெருமையில்லை. ஆங்கிலத்திற்கும் சிறப்பில்லை. தயக்கமின்றித் தமிழிலேயே பேசுவோம். மேற்காணும் உரையாடலில் பயன்படுத்தியுள்ள ஆங்கிலச் சொற்களை நீக்கி, அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பேசிப் பழகுக.

இதுபோன்ற பகுதிகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் பேசும் சொற்றொடர்களில் எவ்வளவு ஆங்கிலம் கலந்து பேசுகிறோம் என்பதும் புரிபடும். ஒன்று முழுவதுமாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் அல்லது தமிழில் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, தமிழ்நாட்டிலேதானே இருக்கிறோம். ஏன் தமிழிலேயே பேசக்கூடாது என்ற தெளிவு பிறக்கவும் வழி செய்யும்.

துணைப்பாட நூலில் ஒரு சிறுகதை. "மெல்ல மெல்ல மற' என்ற இக்கதையில் தினமும் சிகரெட் புகைக்கும் ஒருவன், சிகரெட்டால் இறந்து போகும் தனது நண்பனின் மரணத்தைக் கண்கூடாகக் கண்ட பின்பு, அந்தப் போதையிலிருந்து விடுபட நினைத்து மனைவியிடம் கூறுகிறான். ""இனிமேல் இந்தப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா விட முயற்சி செய்கிறேன். எனது கவனத்தைப் புத்தகம் படிப்பதில், குழந்தைகளுடன் விளையாடுவதில், தோட்ட வேலை பார்ப்பதில் திருப்புகிறேன்''. கதை இயல்பாய் முடிகிறது. தன் வீட்டிலும் அப்பா புகைபிடித்துக் கொண்டிருப்பதால் இப்படி மனம் மாற வாய்ப்பு உள்ளதே என்று ஒரு பத்தாம் வகுப்பு மாணவி யோசிக்க இடம் கொடுக்கும் சிறுகதை. சாதாரண மக்கள் பேசும் பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

என்னதான் கல்லூரியில் உயர்படிப்பு படித்தாலும், ரயில்வே முன்பதிவு இருக்கை படிவத்தை நிரப்பவோ, வங்கியில் சென்று பணம் செலுத்தும் பாரத்தை நிரப்பவோ பலருக்கும் முடியாத காரியமாய் அல்லது திணற வைக்கும் விஷயமாகவே உள்ளது. இங்கே பத்தாம் வகுப்பு மாணவன் அதிலே தேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதற்காக, அஞ்சலக மணியார்டர் படிவம், வங்கிப் பணம் செலுத்தும் படிவம், ரயில்வே முன்பதிவுப் படிவம் எனப் பலவகை படிவங்களை நிரப்பக் கற்றுத் தரப்படுகிறது. வினாத்தாள்களோடு இப் படிவங்களும் அளிக்கப்பட்டு, அவை விடைத்தாள்களுடன் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எதிர்பார்ப்பிற்கு மாறாக, மாணவ, மாணவியர் இதைக் கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்கள் என்பதே உண்மை.

காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் வரலாறுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. முதன் முறையாக அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய அருமையான வரலாறு பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. படித்த பலரும் அறிந்திராத இந்த சமூக சீர்திருத்தவாதி "ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழைத் தொடர்ந்து நடத்தி வந்தவர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர். மாணவ, மாணவியர் பள்ளிப்படிப்பு முடிந்ததும், என்ன உயர்கல்வி கற்கலாம், எத்தகைய வேலைவாய்ப்புகள் பெறலாம் என்பது குறித்த ஒரு பாடமும் உள்ளது. மதிப்பெண் சார்ந்த கல்வி முறைகளைத் தாண்டி தனது தகுதிக்கேற்ற படிப்பு எது? தனக்கு விருப்பமான கல்வி எது என்பதை அவர்களாகவே உணர்ந்து அவர்களே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வகையில் முடிவு எடுக்க வழிவகை செய்கிறது. நூலகம் குறித்த பாடத்தின் முடிவில், செயல்திட்டம் ஒன்றைத் திட்டமிடுக என்று கூறி மாணவர்களோடு இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை உருவாக்க முயற்சி செய்க என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் இத்தகைய கையெழுத்து இதழ்கள் நடத்திய மாணவர்களில் பலர், தற்போது எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உருவாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாத செய்தி.

அந்த வகையில் சமூகத்தில் ஓர் இனிய பண்பாட்டு மாற்றத்தை இந்த சமச்சீர் கல்வி உருவாக்கும் என்பதே எனது கருத்து. ஓர் ஆசிரியை என்ற முறையில் மீண்டும் நான் சந்தோஷமும், பெருமிதமும் அடைகின்றேன்.
(என்னுடைய துணைவியார் தினமணியில் எழுதிய கட்டுரை இது ...)

Saturday, June 16, 2012

எனது ஆசிரியர் ..1


பாளையம்கோட்டைஅன்புநகர் பக்கம் செல்லும்போது எல்லாம் அந்த வீட்டின் முன் பலவிதமான இரு சக்கர வாகனங்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்தபடி செல்வேன். அவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டுசன் எடுக்கிறார் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.நூற்றுகணக்கான மாணவர்களும் மாணவிகளும் காலை மாலை ரெண்டு வேலையும் அங்கே சங்கமிக்கிறார்கள்.அவரிடம் படித்தால் இருநூறு மதிப்பெண்கள் உறுதியாய் எடுக்கலாம் என்ற நம்பிக்கை ...இத்தனைக்கும் அவர் வயதில் மூத்தவரும் அல்லர்.சுமார் முப்பத்து ஐய்ந்துக்குள் தான் இருக்கும். ஒரு வருடத்திற்கு சுமார் ஐயாயிரம் முதல் ஆறாயிரம் வரை ஒரு மாணவருக்கு வாங்குகிறார் என்று கேள்வி.

நான் பள்ளியில் படித்த காலத்தில் மகாதேவன் என்று ஒரு அறிவியல் ஆசிரியர் எனக்கு பாடம் எடுத்தார்.அந்த காலத்தில் வகுப்பில் குறைந்தமதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மட்டுமே டுசன் படிக்கும் பழக்கம் இருந்தது. அந்த வகையில் அவரும் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு டுசன் சொல்லி கொடுத்தார்.அவர் வீட்டு மாடியில் இருக்கும் அறையில் வைத்து சொல்லி தருவது வழக்கம்.அவர் அறிவியல் ஆசிரியர் என்ற போதிலும் ஆங்கில பாடமும் நடத்துவார். வகுப்பில் தெளிவாய் ஒவ்வொன்றையும் இருமுறை சொல்லி விளக்குவார். ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களையும் கரும்பலகையில் எழுதிபோடுவார். டுசன் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக இன்னொரு முறை விளக்குவார்.அவர் விளக்கம் கொடுக்கும் முறையில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் யார் யார் எல்லாம் அவரிடம் டுசன் படிக்கிறார்கள் என்பதை.

அப்போது எல்லாம் பதினொன்றாம் வகுப்பு தான் பொது தேர்வு. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர் பாடம் எடுக்கும் சிரத்தை அலாதியானது.முந்தய மூன்று ஆண்டுகளின் வினாத்தாள்களை எடுத்து வைத்து கொண்டு இந்த ஆண்டு எது வர வாய்ப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்து அது போன்ற வினாக்களை தேர்வு செய்வார்.அதை எல்லா மாணவர்களும் திரும்ப திரும்ப போட்டு போட்டு பார்க்க வைப்பார்.இந்த விசயத்தில் பாரபட்சம் இன்றி எல்லா மாணவர்களையும் அவர் படிக்க வைப்பார். பைடு பைபர் என்ற ஒரு கதை உண்டு. அது இந்த ஆண்டு பத்து மார்க் வினாவில் வரும் என்பதை உறுதியாய் அறிந்து கொண்டு அந்த கதை சுருக்கத்தை அருமையான எளிமையான ஆங்கிலத்தில் எழுதி போட்டு அதை திரும்ப திரும்ப படிக்க வைப்பார்.

நான் ஒரு முறை எனது ஓதுவார் முடுக்கு சந்து வழியாக வந்து கொண்டு இருந்த போது எனக்கு எதிரே மகாதேவன் சார் வந்து விட்டார். "நாதன், நம்ம முருகேசன் இருந்தா அவன கொஞ்சம் வர சொல்லேன்.."என்று என்னிடம் சொல்லியவுடன் நான் எனது வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்த முருகேசனை அழைத்து சார் கூப்பிடுவதை சொன்னேன்.நான் வெளியே கடைக்கு சென்று திரும்பும் போதும் சாக்கடை நாற்றம் அடிக்கும் அந்த குறுகிய சந்தில் அந்த காலை வேளையில் முருகேசனிடம் ஏதோ கேட்பது தெரிந்தது..கிட்ட வந்ததும் தான் தெரிந்தது அவன் அவரிடம் ஆங்கில பாடம் ஒன்றை ஒப்பித்து கொண்டு இருக்கிறான் என்பது.

"நீ ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில தான் தப்பு விடுகிறாய் ..ஸ்பெல்லிங் கரெக்டா சொல்லு பார்க்கலாம் " என்று அவர் அவனை திட்டுவது தெரிந்தது.என்னை பார்த்தவுடன் அவர் லேசாக சிரித்தபடி "இன்னைக்கு காலாண்டு பரீட்சை ...இங்கிலீஷ் எக்ஸாம் ...இவன் கொஞ்சம் வீக் ..அதான் வந்தேன் " என்று சமாளித்தார்..
"சார் அவன் வீட்டில் சென்று கேளுங்களேன்..வாசலுக்கு வெளியே ஏன் கேட்கிறீர்கள் " என்றேன்.
"வேண்டாம்..வேண்டாம்..அது அவங்க வீட்ல இருப்பவங்களுக்கு தொந்தரவாக இருக்கும்..இங்க பரவா இல்லே ..சமாளிசுகறேன்." என்பார்.உண்மையான காரணம் அது அல்ல என்பது எனக்கும் தெரியும். முருகேசன் தப்பாய் ஒப்பித்தால் சட் டென்று தலையில் ஒரு போடு போடுவார். வீட்டுக்குள் என்றால் அது முடியாது.
மனுஷன் இந்த நாற்றம் எடுக்கும் சந்துக்குள் நின்று கொண்டு டுசன் படிக்கும் ஒரே காரணத்துக்காக அவன் பாஸ் ஆகிவிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இந்த அதிகாலை வேளையில் வந்து நிற்கிறாரே என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அது மட்டும் அல்ல..மதியம் தேர்வு என்றால் காலை நேரத்தில் சிறுநீர் இடைவேளை நேரத்தில் கூட வகுப்பறைக்கு வெளியே நின்று முருகேசனையோ அல்லது மாரியப்பனையோ ஒப்பிக்க சொல்வது வழக்கம்.இத்தனைக்கும் அவர் அதற்காக வாங்கும் ரூபாய் ஐந்து தான்..
அவன் பாசாகி விட்டால் அவர் முகம் பிரகாசமாகி விடும்..அவரின் நேர்மை எனக்கு இப்போது நினைத்தால் கூட வியப்பை அளிக்கிறது..யாருக்கும் தனது இருத்தல் தொந்தரவு அளிக்க கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருப்பார்..

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை பார்த்துகொண்டு இருந்தபோது வங்கிக்கு வெளியே சிகரட் குடித்தபடி நான் நின்று கொண்டு இருந்தேன்.அப்போது திடீரென்று என் முன் மகாதேவன் சார் தோன்றினார். இதை நான் சற்றும் எதிர்பார்கவில்லை..அவசரமாக சிகரெட்டை கீழே போட போனவனை அவர் சட்டென்று இடை மறித்து , " பரவா இல்ல ...நீ குடிப்பா ..நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்..நான் சொல்லாம கொள்ளாம வந்து உன் முன்னால வந்து நின்னா நீ என்ன பண்ணுவ..இங்க ஒரு கல்யாண வீட்டுக்கு வந்தேன்..நீ பாங்க்ல ஆபீசர் ஆயிட்டியா..?" என்றாரே பார்க்கலாம்..

எனக்கு ரொம்ப அவமானமாக போய் விட்டது.வாத்தியார் முன்னால சிகரட் குடித்து விட்டோமே என்று.அன்றே விட்டு தொலைத்து இருக்கலாம்..பை பாஸ் அறுவை சிகிச்சையையும் தவிர்த்து இருக்கலாம்..

மகாதேவன் என்ற அந்த ஆசிரியர் , முருகேசன் என்ற மாணவனுக்கு டுசன் ஆசிரியர் என்று எந்த வகையில் பார்த்தாலும் அவரின் பண்பு எனக்கு இன்னும் பிரமிப்பு ஊட்டுகிறது..

Thursday, June 14, 2012

சங்கரப்ப நைனா



நான் நைனா வை முதன்முதலில் பார்த்தது ஜோதிபாசு சலூனில் தான்.என் அண்ணன் ஆர்.எஸ்.மணியுடன் பஜாருக்கு சென்றிருந்த போது தேவப்ரகாஷ் அண்ணன், பால்வண்ணம்,ஜவஹர் வாத்தியார் இன்னும் பெயர் தெரியாத சில "தோழர்களோடு" சங்கரப்ப நைனா பேசிகொண்டிருந்த காட்சி இன்னமும் மனதில் பதிந்து கிடக்கிறது. நான் எஸ்.எஸ்.எல். சி. படித்துகொண்டிருந்த நேரம்.அவசரநிலை அமுலில் இருந்தது. புதிதாய் தைத்த எனது பேன்ட்,சட்டையை அருகில் இருந்த வீனஸ் தையல் கடையில் வாங்குவதற்காக நான் காத்திருந்தேன்.இருபது நிமிடம் ஆகும் என்றதால் எனது அண்ணன் சைக்கிளை பிடித்தபடி நின்றிருந்தேன்.

தேவப்ரகாஷ் அண்ணன் சத்தமாய் சிரித்து பேசினாலும் சங்கரப்ப நைனா மென்மையாய் சிரிப்பை உதிர்த்தவாறு தலையை பெரிதாய் ஆட்டிகொண்டிருந்தார். அதுதான் அவரது சுபாவம்.வெள்ளை கதர் சட்டையும் வேட்டியும் ஒரு சிலருக்கு மட்டுமே வசீகரத்தை கொடுக்கும். நைனாவிற்கு அந்த வசீகரம் உண்டு.கையில் எப்போதும் வைத்திருக்கும் தீக்கதிர் பேப்பரையோ செம்மலரையோ மடங்கிய நிலையில் பிடித்து கொண்டு கையை நீட்டி பேசும் நைனா தீக்கதிர் நாளிதழின் ஏஜென்ட் என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.நைனா கோவில்பட்டி நகரில் இருந்த லக்ஷ்மி மில்லில் பஞ்சாலை தொழிலாளியாக வேலை பார்த்தவர் என்பதையும் காலபோக்கில் தெரிந்து கொண்டேன்.

தேவப்ரகாஷ் அண்ணனுக்கு ஈடுகொடுத்து சிரிப்பதில் வல்லவர் சக்தி பயில்வான். அவர் அடிப்படையில் ஒரு தையல் தொழிலாளி.ஜோதிபாசு சலூனில் இருந்து ஐந்தாறு கடை தள்ளி அவரது கடை இருந்தது.அவரது கடையில் உள்ள தையல் மிசினில் யாரோ ஒருவர் தைத்து கொண்டிருப்பார்.இன்னொருவர் காசா போட்டுகொண்டு இருப்பார்.ஒரு நாள் கூட சக்தி பயில்வான் மிசினில் உட்கார்ந்து பார்த்தது இல்லை.நோடிசும் கையுமாக தான் இருப்பார்.ஆர்ப்பாட்டம், மறியல் என்றால் அவர் முன்னால் நிற்பார்.மே தினம் என்றாலே அவர் நினைவு வந்து விடும். அவரது உடல்பயிற்சி கழக நண்பர்களின் சிலம்பாட்டம் ,தீப்பந்த விளையாட்டு என சாகச நிகழ்ச்சிகள் பார்த்து மெய்சிலிர்த்தது உண்டு. சக்தி பயில்வானிடம் பேசிகொண்டிருக்கும் போது தோழர் லக்ஷ்மனபெருமாள் ஒருமுறை சொன்னார்." உம்ம கிட்ட பேசிட்டு இருந்ததுல முக்யமானத மறந்துட்டேன்..பையன் சட்டைய வீனஸ் டேய்லர் ல வாங்க நினைச்சேன்..கடையை பூட்டிட்டு போய்ட்டானே..."
"ஏன் எங்க கிட்டே சட்டையெல்லாம் தைக்க மாட்டிகளோ " சக்தி தான் கேட்டார்.
"வேய்..உம்மகிட்டே அண்ட்ராயர் வேண்ணா தைக்கலாம்..சட்டையெல்லாம் கொடுத்து ரிஸ்க் எடுக்க முடியுமா "
லக்ஷ்மனபெருமாள் சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்தார்.
தோழர் சக்தி சிரித்து கொண்டார்.அது உண்மைதான்.அவரிடம் சட்டை தைக்க கொடுத்து தீபாவளிக்கு சட்டை வாங்கி போட்டவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன ..மறியலில் கைதாகி சிறை சென்றால் எப்போது வருவாரோ?

ஒரு ஞாயிறு அதிகாலையில் நான் வீட்டில் இருந்து தேங்காய் சில்லு வாங்க வெளியே வரும் போது சங்கரப்ப நைனா அவரது பழைய சைக்கிளுடன் வாசலில் நின்று கொண்டு இருந்தார்." அண்ணன் இருக்குதா " என்று என்னைபார்த்து கேட்டார். "தூங்கறாங்க " என்றேன்.
"தோழரை கொஞ்சம் வர சொல்ல முடியுமா ?" தயக்கத்துடன் கேட்டார்.
நான் அண்ணனை எழுப்பினேன்.சட்டயைபோட்ட்படி வெளியே வந்தான் அவன்.இருவரும் ஏதோ பேசினார்கள்.அண்ணன் சட்டைப்பையில் இருந்து ஐந்தும் பத்துமாக ரூபாய் நோட்டுகளை எடுத்துகொடுத்தான். தீக்கதிர் பேப்பர் ரூபாயாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.அப்பா வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேப்பர் திருத்தி கொண்டு இருந்தார். அண்ணன் வாங்கும் தீக்கதிர் பேப்பரை அப்பா வாசித்து ஒருநாளும் பார்த்தது இல்லை. தினமணி பேப்பர் வராவிட்டால் மட்டும் இந்த பேப்பரை லேசாக பட்டும் படாமலும் புரட்டி பார்ப்பார்." எங்க பொரட்டுனாலும் போராட்ட செய்தியா தான் இருக்கும் "என்பார். நானும் அக்காவும் அன்னக்கிளி சினிமா விமர்சனம் என்ன போட்ருக்கான் என்று தீக்கதிர் பேப்பரை புரட்டுவோம்.

நைனா இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேலையில் அண்ணனை சந்தித்து ரூபாய் வாங்கி செல்வது வாடிக்கையாய் இருந்தது.மனுஷன் கடன் வாங்குதாரோ என்று எண்ணினேன்.ஒரு முறை சைக்கிளில் அவர் பின்னாலேயே சென்று பார்த்தேன்.பால்வண்ணம் வீட்டிற்கு சென்றார்.அவரிடமும் பேசி கொஞ்சம் ரூபாய் வாங்குவது பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.அங்கிருந்து கோவில் மேட்டு பக்கம் இருந்த விஸ்வகர்மா பள்ளி அருகே சென்றார்.தனது நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த ஜவகர் வாத்தியாரிடம் போவது தெரிந்தது.அவரும் தனது சட்டை பாக்கெட்டில் இருந்து சொல்லி வைத்தாற்போன்று ரூபாய் நோட்டுகளை கொடுப்பது பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றேன். என்ன இதெல்லாம் ? மண்டை குடைந்தது.

ஒருமுறை பள்ளி நண்பன் உதயசங்கர் வீட்டிற்கு ஏதோ நோட்டு வாங்க சென்றவன் எனக்கு முன்னால் சங்கரப்ப நைனா தனது ஓட்டை சைக்கிளில் தகர சத்தம் முழங்க மெதுவாய் அழுத்தி சென்று கொண்டிருந்ததை பார்த்தேன்.அவர் சைக்கிள் சக்தி பயில்வான் வீட்டுமுன் நின்றது.அவரது சைக்கிள் ஹான்ட் பாரில் இருந்து ஒரு பெரிய துணி பையை எடுத்தபடி உள்ளே சென்றார்.அவரது மனைவி வரண்டா பக்கம் வந்த போது "இதுல அரிசி, காய்கறி இருக்கு..ரெண்டு நாளைக்கு சமாளிச்சுக்க ."என்று சொல்லியபடி ஒரு சிறிய பையை எடுத்து கொடுத்தார்.அப்போது சக்தி பயில்வான் சிறையில் இருந்தார்.ஒரு மௌனத்துடன் அந்த பையை பெற்றுக்கொண்ட அந்த அம்மா அதே வேகத்துடன் மெதுவாய் சைக்கிளில் அழுத்தும் நைனா வை ஒரு பெருமூச்சுடன் பார்த்துகொண்டிருந்தார்.தனது முந்தானையால் கண்களை துடைத்து கொள்வது தெரிந்தது.
நைனா இப்போது மெயின் பஜார் தாண்டி கடலையூர் ரோட்டிற்கு பக்கவாட்டில் இருந்த சந்தில் நுழைந்து பச்சை பெயிண்ட் அடித்த வீட்டின் முன் நின்றார்.தோழர் ராமசுப்பு அவர்களின் வீடு அது.
"தங்கச்சி .."என்று குரல் கொடுத்தார்.
"யாரு அண்ணாச்சியா .."என்று குரல் கொடுத்தபடி வந்த அந்த அம்மாவின் கையில் அரிசி, காய்கறி அடங்கிய மஞ்சள் பையை கொடுத்தார் நைனா.
"ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போங்களேன் .."பையை வாங்கி கொண்ட அந்த அம்மாவின் வேண்டுகோளுக்காக வீட்டு திண்ணையில் அமர்ந்தார் நைனா.

அவரது பயணம் தொடர்ந்தது.புது கிராமம் பகுதியில் இருந்த இன்னொரு தோழர் வீட்டை பார்த்து அவரது ஓட்டை சைக்கிள் திரும்பியது.எனக்கு இப்போது விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட்டது.எல்லா தோழர்களும் சிறையில் இருக்கிறார்கள்..எமெர்ஜென்சியில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் கம்யூனிஸ்ட் தோழர்களும் கணிசமானவர்கள் சிறையில்.கோழி திருடினேன் ஆடு திருடினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கோரினால் விடுதலை செய்யபட்டார்கள்.அப்படி வெளியே வந்த திராவிட இயக்கத்தினர் ஏராளம்.."இன்குலாப் ஜிந்தாபாத் " முழக்கமிட்டபடி ஆவேசமாய் கர்ஜித்து சென்ற சக்தி, ராமசுப்பு போன்ற செங்கொடி தோழர்கள் எவருக்கும் மண்டியிடாது சிறையில் நாட்களை கழித்தார்கள்.சிறைக்கு வெளியே அவர்கள் குடும்பத்தினர் சாப்பாட்டுக்கு வழிஇன்றி வாடி விடக்கூடாதே என்று சங்கரப்ப நைனா மத்திய தர வர்க்க தோழர்கள் பால்வண்ணம்,ஆர்.எஸ்.மணி, ஜவகர்,கோபால்சாமி போன்ற தோழர்களிடம் ரூபாய் வசூலித்து அவர்களது குடும்பத்தை கண்ணின் மணி போல காத்து வந்தார்.ஒவ்வொரு நாள் காலையிலும் தனது ஓட்டை சைக்கிளை எடுத்துக்கொண்டு தனது சகாக்களின் குடும்பத்திற்கு அரிசியும் காய்கறியும் வாங்கி கொடுத்து சென்று கொண்டிருந்த நைனா வின் கால்கள் சற்றும் ஓய்வு எடுக்கவில்லை.எமெர்ஜென்சி நீடித்த ஒரு வருட காலத்திலும் அவரது சைக்கிளின் தகர சத்தம் கோவில்பட்டி நகரின் புழுதி படிந்த வீதிகளில் கேட்டுக்கொண்டு தான் இருந்தது.

சங்கரப்ப நைனா என்ற மனிதர் வெறும் தீக்கதிர் ஏஜென்டா ? சிறைபட்டிருக்கும் தோழர்கள் குடும்பத்தினர் , இயக்கத்தை ஒரு பொழுதும் பழித்து பேசிவிடக்கூடாதுஎன்று இவர் ஏன் துடித்தார் ? சிறைக்கு வெளியே இருந்தாலும் தினமும் இருபது கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் ஏன் கடந்தார் ..ஏன் உழன்றார் ?கோழி திருடியதாக ஒப்புக்கொண்டால் விடுதலை செய்யபடுவோம் என்று தெரிந்தும் ஏன் லட்சிய வேட்கையோடு சக்தியும், ராமசுப்புவும், வள்ளிநாயகமும் சிறைக்குள்ளே இருந்தார்கள்.?தங்களது குடும்பம் வாடுமே என்ற கவலை ஏன் அவர்களுக்கு ஏற்படவில்லை ?

ஒரு வருஷம் நீடித்த எமெர்ஜென்சி இன்னும் பல வருஷம் நீடித்து இருக்க வாய்ப்புண்டு.அதைப்பற்றி சிறிதும் கவலைபடாமல் கொள்கைக்காக இவர்கள் ஏன் சிறைபட்டிருந்தர்கள்.?
இவர்கள் ஜெர்மனிய நாட்டின் தத்துவ மேதைகள் மார்க்ஸ் எங்கல்சின் மூலதன நூலை கரைத்து குடித்த அறிவுஜீவிகளா?அல்லது மார்க்சிய சித்தாந்தத்தின் மூலக்கூறுகளை முழுவதுமாக உள்வாங்கி கொண்ட மேதைகளா ?
எதுவும் இல்லை..எது இவர்களுக்கு சக மனிதனின் துயரத்தை பரிவுடன் பார்க்க வைத்தது?எது இவர்களுக்கு ஏழ்மையிலும் சமரசமற்ற போராட்டத்தை நிகழ்த்த கற்று கொடுத்தது?
சித்தாந்தத்தை அறிவார்ந்த முறையில் கற்றுணர்ந்து தெளிவு பெற்று ஏற்றுகொள்வது ஒருவகை..
சங்கரப்ப நைனாவின் வாழ்க்கை நெறிகளையும் சக்தி பயில்வானின் லட்சிய நோக்கினையும் பார்த்து உணர்வு பூர்வமாக சித்தாந்தத்தை ஏற்றுகொள்வது இன்னொருவகை..
ஒரு மாபெரும் தத்துவத்தின் அடையாளமாய் வாழ்ந்து காட்டிய சங்கரப்ப நைனாவை நினைக்கும்போது நெஞ்சு பெருமிதத்தில் விம்முகிறது ...

Saturday, June 9, 2012

நான் ஏன் எழுதுகிறேன்

 
நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு என்னால் சட்டென்று பதில் சொல்ல
முடியவில்லை..என்னவாய் இருக்கும் என்றும் யூகிக்க முடியவில்லை.சின்ன
வயசில் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் விளையாட்டு பீரிடில் நொண்டி சாக்கு
சொல்லிக்கொண்டு மரத்தடி நிழலில் உட்கார்ந்து நோட்டு புத்தகத்தில்
எதையாவது படம் வரைந்து கொண்டு இருப்பேன்..என்னோடு உட்காரும் முருகேசன்
என்ற மாணவன் அவனுடைய நோட்டில் என்னை மாதிரியே பட கதை வரைந்து கதை போல
கொண்டு செல்வான்..இத்தனைக்கும் அவன் என்னை விட சுமாராகத்தான் படம்
வரைவது உண்டு..முத்து காமிக்ஸ் போன்ற புத்தகங்களின் பாதிப்பு தான்
அது..என் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் சாரதி "ஏல..நீயும் முருகேசன
மாதிரி படக்கதை வரை " என்பான்.நானும் உற்சாகமாக படம் வரைந்து ஹீரோ
எங்கெங்கோ பறந்து போய் எதை எதையோ கொண்டு வந்து சாகசம் செய்வது போல கதையை
நகர்த்தி செல்வேன்..என் அருகிலும் பல நண்பர்கள் அமர்ந்து என்னுடைய
படக்கதையை படிப்பதில் ஆர்வம் கொண்டார்கள். என்னுடைய முதல் படைப்பு என்பது
அது தான்..இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் முருகேசனுக்கு என் மேல்
எந்த பொறாமையும் இல்லாமல் அவனும் என் கதையை வாசிப்பதில் ஆர்வம்
கொண்டிருந்தான் என்பது தான்..சில இடங்களில் சில திருத்தங்கள்
சொல்வான்..அவனை போல நாமும் வரைய வேண்டும் அல்லது எழுத வேண்டும் என்பது
தான் எனது லட்சியமாக இருந்தது..

விளையாட்டு நேரத்தில் கட் அடித்து விட்டு என் அருகில் உட்கார்ந்து கதை
படிக்கும் நண்பர்களின் எண்ணிக்கை வுயர்ந்து கொண்டே போனது..அது ஒரு வகையான
போதை மாதிரி தொத்தி கொண்டது..இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கே
புரிகிறது..உண்மையில் சொல்லபோனால் ஓவியம் தான் எனக்கான தளம் என்று
நினைத்தேன்..

கல்லூரியில் படிக்கும்போது உதயசங்கர், சாரதி, முத்துசாமி போன்ற
நண்பர்களோடு சேர்ந்து மொட்டுக்கள் என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தும்
போது கூட என்னுடைய ஓவியமும் கையெழுத்தும் கைகொடுத்தன..உதயசங்கர்
கவிதையும் கட்டுரையும் எழுதினான்.படித்து பார்த்த கவிஞர் தேவதச்சன் "இந்த
மூவரில் ஒருவன் தேறுவான் " என்று குறிப்பிட்டது இன்னமும் நினைவில்
உள்ளது. அது உதயசங்கரின் கவிதைகளை படித்து பார்த்து சொன்னதாக நினைவு..
இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.எங்கள் எவருக்கும் உதயசங்கரை
பார்த்து எவ்வித பொறாமையும் ஏற்பட்டது இல்லை..ஒரு படைப்பாளியாக எங்களில்
ஒருவரை அவர் ஏற்று கொண்டாரே என்ற சந்தோஷம் தான் தோன்றியது..

துரதிர்ஷ்டம் என்னவெனில் , அதன் பிறகு நான் ஓவியத்தை விட்டு
விட்டேன்..உதயசங்கரும் கவிதையை விடவும் கதை எழுதுவதில் ஆர்வத்தை
காட்டினான்..(நாலைந்து கவிதை தொகுப்பு போட்டிருக்கிறான் என்பது வேறு
விஷயம் ).
தொடர்ச்சியாய் நூலகத்தில் வாசித்ததின் தாக்கம்..செம்மலர், தாமரை,
கண்ணதாசன் போன்ற இதழ்களை படித்து வந்ததின் விளைவாய் நாமும் ஏன் கதை எழுதி
பார்க்க கூடாது என்ற தீராத ஆசை பெருங்கனவாய் மனசில் உருவாகி தொழில் என்ற
சிறுகதையை முதலில் எழுதினேன். ஒரு சிலர் அதை வெகுவாய் பாராட்ட விட்டாலும்
"தொடர்ந்து எழுத்து..உனக்கு கதை வரும் " என்று சொன்னது கூட காரணமாக
இருக்கும்..

ஆனால் தொடர்ந்து எழுதாமல் போனது தான் என்னுடைய துரதிர்ஷ்டம்..!

Wednesday, May 23, 2012

கோவில்பட்டி சங்கமம்

பால்யம் என்றும் இனிமையானது தான்.மனம் எப்போதுமே பால்ய நினைவுகளில் நீந்தும் போது துள்ளிகுளிக்கதான் செய்கிறது.இயந்திரதனமான வாழ்க்கையில் மனம் சோர்வுறும்போது பழைய நண்பர்களை தேடுகிறது. வங்கி வூழியர் சங்க மாநாட்டில் பழைய நண்பர்களை பார்க்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சி மனசில் கொப்பளிக்கிறது.இப்படிதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநாட்டில் எங்களோடு பணிபுரிந்த ஜெயந்தி மற்றும் ஆன்சிலா ஆகியோரை சந்திக்கும்போது கோவில்பட்டியில் பணிபுரிந்த பழைய நண்பர்கள் எல்லோரும் சந்திக்க ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்களேன் நாதன் என்று சொன்னபோது மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்பட்டது.ஆஹா ..இப்படி ஒரு ஏற்பாட்டை ஏன் நாம் பண்ணகூடாது என்று நண்பர் ஆறுமுகத்திடமும் ஆண்டியப்பனிடமும் கேட்டேன். அவர்களும் சந்தோசமாக பண்ணலாமே என்று சொன்னதும் மனம் அசைபோட துவங்கியது. கோவில்பட்டி சங்கமம் விதையாக மனசில் வூன்றியது அன்றுதான்.

உடனடியாக எங்கள் வழிகாட்டியும் இனிய தோழருமான பால்வண்ணம் அவர்களிடம் இது குறித்து பேசினோம்.அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.பழய கோவில்பட்டி நண்பர்கள் அனந்தசங்கர், எஸ்.பெருமாள், லோகநாதன்,சரவணகுமார்,ஜோ பெர்னாண்டோ ,சுவாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நண்பர்கள் கூடி பழய நண்பர்களின் முகவரி மற்றும் மொபைல் எண்களை சேகரிக்க ஆரம்பித்தோம். சில நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி ஏப்ரல் இருபத்து ஒன்பது நாம் கோவில்பட்டி நகரில் சந்திக்க இருக்கிறோம் என்று சொன்னபோது அவர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள்.சென்னையில் இருந்தும் திருவனந்தபுரத்தில் இருந்தும் ரயிலுக்கு ரிசெர்வ் செய்து விட்டதாக ஜெயந்தி , ஆன்சிலா மற்றும் லதா தெரிவித்தார்கள். கோவில்பட்டியில் எங்கள் முன்னோடி தளபதி கோபாலகிருஷ்ணன் , வெற்றிலை ரசனை கொண்ட எங்கள் அன்பு நைனா முத்துவரதராஜன் ஆகியோர் தங்கள் வருகையை உறுதிபடுத்தி கொண்டார்கள்.
நண்பர்கள் லிஸ்ட் பெருகிக்கொண்டே போனது. கட் ஆப் வருஷம் எழுபத்தெட்டு என்பது போய் வர விருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் வரட்டும் என்று தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம்.
பழைய புகை படங்களை சேகரிக்க ஆரம்பித்தோம்.திருவனந்தபுரத்தில் இருந்து நண்பர் பாலசுப்ரமணியன் தனது புகைப்பட பொக்கிசங்களை தபாலில் அனுப்பிவைத்தார்.சென்னையில் இருந்து சுவாமிநாதன், முரளி, கோவில்பட்டியில் இருந்து ரெங்கநாயகி, திருவனந்தபுரத்தில் இருந்து லதா என போட்டோக்கள் குவிந்தன.பழய புகைப்படங்களை பார்க்கும்போதே என் மனம் பழைய உலகிற்கு சென்று விட்டது. அட எனக்கு கூட தலையில் இவ்வளவு முடி இருக்கிறதா என்று சிரித்து கொண்டேன்.(எந்த படம் என்று கேக்காதீர்கள்..)

சாப்பாடு ஏற்பாடுகளை ஆண்டியப்பனும் வள்ளியும் கவனித்துகொண்டர்கள்.எங்கள் அன்பு தோழர் மில்க் ராமசுப்பு இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை..ராஜ்மஹால் மண்டப உரிமையாளர் ராஜேந்திரனை சந்திக்க ஏற்பாடு செய்தார். வழக்கமான வாடகையில் நான்கில் ஒரு பங்கு மட்டும் கொடுங்கள் போதும் என்று அவர் சொல்லி விட்டார். பழய , மிக பழய நண்பர்களும் கூட வருவதற்கு ஆர்வம் காட்டியது தான் எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
முதல் நாள் இரவு நண்பர் ஆறுமுகம், ஜெயசிங் , மற்றும் கோவில்பட்டி தோழர்கள் உதயசங்கர், சாரதி, ரெங்கராஜன் ஆகியோர் கண்காட்சி ஏற்பாடுகளை விடிய விடிய செய்தோம்.இரவு வள்ளிநாயகம் வீட்டில் அருமையான விருந்து சாப்பாடு...

இருபத்து ஒன்பது காலை ...
நண்பர்கள் ஒவ்வொருவராய் அவரவர் குடும்பத்தோடு வர ஆரம்பித்தார்கள்.எங்கும் ஒரே உற்சாகம்..பழைய நண்பர்களை பார்த்த உடனே தழுவி கொண்டார்கள்.வேறு எந்த கிளையிலும் இது சாத்தியமா என்று தெரியவில்லை..(இன்னும் வரும் ...)

Saturday, April 14, 2012

பொக்கிஷம்

பொக்கிஷம்

சிறிது நாட்களுக்குமுன் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகளுள் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு திருவள்ளுவர் மன்ற கூட்டத்துக்கு பேச வர இயலுமா என்று கேட்டார். நான் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போனேன். கேட்டவருக்கு நான் கோவில்பட்டியை சேர்ந்தவன் என்ற விபரம் மட்டுமே தெரிந்திருக்ககூடும்.எனக்கும் திருவள்ளுவர் மன்றத்துக்கும் உள்ள தொடர்பு அவர் தெரிந்திருக்க நியாயமில்லை.

கழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த புதிதில் என் வீட்டுக்கு அருகில் இருந்த ஆயிர வைஸ்ய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற திருவள்ளுவர் மன்ற இலக்கிய கூட்டங்களுக்கு என் அப்பா அழைத்து செல்வது வழக்கம்.(இந்த பள்ளியில் தான் கரிசல் எழுத்தாளர் கு.அழகிரிசாமி பயின்றார்) அந்த கூட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தவர்கள் , நான் படித்த ஆயிர வைஸ்ய வுயர்நிலை பள்ளி தமிழாசிரியர் புலவர் மு.படிக்கராமு அவர்களும் கோவில்பட்டி கோ.வே.நா.கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பேரா.அ. சங்கரவள்ளிநாயகம் அவர்களும். இவர்கள் இருவரையும் இணைபிரியாத இலக்கிய இரட்டையர்கள் என்று தான் சொல்லவேண்டும். கூட்டத்துக்கு சுமார் முப்பது அல்லது நாற்பது பேர் வருவார்கள். தமிழ் இலக்கியத்தின் வளமை குறித்து பல அறிஞர்கள் பேசுவார்கள். பேரா.வளனரசு , திரு.சி.சு.மணி, பேரா.இளம்பிறை மணிமாறன் , தசாவதானி ராமையா , தமிழ்கனல் என பல அறிஞர்களின் பேச்சினை கேட்டு வளர்ந்தேன்.எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீது ஆழமான ஈடுபாடு ஏற்பட்டது இப்படிதான்.

ஒவ்வொரு மாதமும் தவறாது கூட்டம் முதல் ஞாயிறு அன்று நடைபெறும். வருட கடைசியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறும்.அதில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள்...அதில் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள். அந்த பொது மேடையில் ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் , அந்த ஆண்டின் பனிரெண்டு கூட்டங்களும் தவறாது கலந்து கொண்ட அன்பர்களுக்கு மு.வ.தெளிவுரை எழுதிய திருக்குறள் அன்பளிப்பாக வழங்குவார்கள். அதை எப்படியும் வாங்கிவிடனும் என்ற தீராத வேட்கையுடன் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொள்வேன். நான் எட்டாவது படிக்கும் போது இப்படி சென்று கொண்டு இருக்கும்போது கடைசி மாத கூட்டத்துக்கு போக முடியாதபடி எனக்கு காய்ச்சல்..பதினோரு கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனில் நமக்கு திருக்குறள் புத்தகம் கிடைக்காதே என்ற எனது ஆதங்கத்தை யாரிடம் சொல்லி அழ ? என் அப்பா இதை புரிந்து கொண்டார். அந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டுவிழாவில் நான் வருத்ததுடன் கலந்து கொண்டேன். பனிரெண்டு கூட்டங்களும் கலந்து கொண்ட பதிமூன்று பெயர்களை புலவர் மு.படிக்கராமு அவர்கள் வரிசையாய் வாசித்து வந்தவர் இறுதியில் பதினாலாவது பெயராக எனது பெயரை சொல்லி என்னை மேடைக்கு அழைத்தார். அதை நினைக்கும் போது இப்போது நினைத்தாலும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
உடல்நலம் சரி இல்லாததால் கடைசி கூட்டத்தில் இவர் கலந்து கொள்ளவில்லை என்று அறிந்து இவருக்கு இந்த பரிசு அளிக்கபடுகிறது என்று அவர் சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது ? பலரும் எனது பெயரை இன்று வரை தப்பும் தவறுமாய் உச்சரிக்கும்போது , எனது ஆசான் புலவர் மு.படிக்கராமு அவர்கள் என்னை " பூவே ...மேடைக்கு வா.." என்று அன்போடு அழைத்தார்..என்னை எப்போதும் பூ என்று தான் அழைப்பார். அவரிடம் நான் பயின்றது நான் பெற்ற பேறு தான். அன்று முதல் நான் தொடர்ச்சியாக எல்லா திருவள்ளுவர் மன்ற கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன்..பின்னாட்களில் நான் த.மு.எ.ச.கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதற்கு இதுவே உத்வேகம் அளித்தது என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட திருவள்ளுவர் மன்றத்தினர் என்னை பேச அழைத்தார்கள் என்றால் எனக்கு கசக்குமா என்ன ...
உற்சாகமாக கலந்து கொண்டு பேசினேன்..சுமார் அறுபது பேர் கலந்து கொண்டார்கள்..என்ன எனது பேராசிரியர் அய்யா சங்கரவள்ளிநாயகம் அவர்கள் இல்லை..காலமாகிவிட்டார்..அவரது மகன் முத்து இருந்தார்..படிக்கராமு அய்யா நெல்லையில் வந்து செட்டில் ஆகியிருந்தார்கள்..எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன..பேருந்து ஏறும் போது நிர்வாகிகளுள் ஒருவர் எனது பையில் ஒரு கவரை திணித்தார்..என்ன என்று கேட்டேன்..பயணப்படி என்றார்..நான் மறுத்தேன். .அவர் புன்சிரிப்புடன் மறுத்து சென்று விட்டார்..அந்த கவரை எனது பொக்கிசமாய் வைத்து இருக்கணும் போல இருந்தது..

Thursday, March 29, 2012

மானுட உணர்வுகளை மீட்டெடுக்கும்

மெல்லிய பதிவுகள்

எஸ் வி வேணுகோபாலன்


ழக்கமாக நாம் நடந்து போகும் தெருவில் ஏதோ ஒரு வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது ஆரம்பித்தார்கள் என்று கூடத் தெரிவதில்லை. வீதியில் மிஞ்சியிருக்கும் ஐந்தாறு பழைய கால வீடுகளில் இன்னொன்றும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வாசல் பக்க மரம் ஒன்றில் பழைய பர்மா தேக்கு மரக் கதவு, சன்னல், தூண் இதரவை இங்கே கிடைக்கும் என்று ஒரு பலகை அடித்துத் தொங்கவிடப்பட்டிருக்கிறது ...ஆனால் அந்த வீட்டுக்குள் காலகாலமாக அந்தக் குடும்பத்தவர்கள் வம்சாவழியாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கேனும் கிடைக்குமா என்று யாருக்கும் தோன்றினால் பெருக்கெடுக்கும் உணர்ச்சி இருக்கிறதே, விம்மலும் தன்னெழுச்சியாகக் கன்னங்களைச் சூடாக்கியபடி வழியும் கண்ணீரும், நாம் மனிதர்களாக இருக்கிறோம் என்று பொருள்.

மனிதர்களையும் மனித உறவுகளையும் சரக்காக ஆக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தாராளமய காலத்தில், செடி கொடிகளையும், பயிர் பிரதேசங்களையும், இல்லங்களையும் அவற்றோடு கலந்திருக்கும் வாழ்க்கையோடு இணைத்து உயிரோட்டமாக தரிசிக்கும் உணர்வை படைப்பாளிகள் எழுத்திலேயே சாத்தியமாக்கினால் வாசகருக்கு அதைவிட கொடுப்பினை வேறென்ன இருக்க முடியும்? நாறும்பூநாதனின் ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன் என்ற சிறுகதை தொகுப்பு அப்படியான ஓர் அனுபவத்தைக் கொடுத்தபிறகு, அந்த அவஸ்தையிலிருந்து கொஞ்சம் எடுத்துப் பேசா விட்டால் எப்படி?

இருப்புப் பாதையின் இடையே கடக்கும் சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அந்த கதவுகளை சார்த்தித் திறப்பவர் (அவர் உள்ளபடியே அதைத் திறந்து கொடுத்து அப்புறம் தேவைக்கு சார்த்துபவர். அப்படி யாரும் அவரது பணியைப் புரிந்து கொள்ள முற்படுவது இல்லை!) அந்த வழி வாகனங்களில் போகும் யாருக்கும் உவப்பான மனிதர் இல்லை. ஆனால் சாமிக்கண்ணு நேர வாரியாக, வாகன விலாவரியாக அன்றாடம் கடந்து போகும் மனிதர்களைச் சொந்தம் பிடித்து வைத்திருக்கும் ஒரு பணியாளர். அதனால் அவர்கள் வரும் நேரம் தப்பி விட்டால் என்னவோ ஏதோ என்று அலைமோதும் மனசு. அதைத் தானய்யா மானுட உணர்வென்பது. "ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்" கதை, சாமிக்கண்ணுவின் பணி ஓய்வு நாளில் அவரது நினைவுக்குறிப்புகளை அசை போட வைக்கிறது. படிக்க வாய்ப்பற்ற குழந்தைகளை, அதுவும் பெண் குழந்தைகளை வெள்ளரிப் பிஞ்சு விற்கப் பார்த்துப் பதறும் அவரது நெஞ்சு, ஆங்கிலத்தில் ஃபெயிலானதால் அரளி விதை அரைத்துக் குடித்துச் செத்துப் போன தமது சொந்த மகளது நினைவால் மேலும் வாட்டம் கொள்கிறது. கேட் போட்ட பிறகு சைக்கிளோடு கடக்கப் போகும் சிறுமி ஒருத்தியை வீட்டுல சொல்லிட்டு வந்தியா என்று கண்டித்தபடி ஓடிச் சென்று காக்கும் அவரிடம், மாலை வீடு திரும்பும்போது வந்து நன்றி சொல்லும் சின்னப் பெண், காலையில் வீட்டில சொல்லிட்டுத் தான் வந்தேன், ஏன் கேட்டிங்க என்று கேட்பது, அவரை மட்டுமல்ல வாசகரையும் சேர்த்துப் புரட்டிப் போடும் இடம். அவர் கையில் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தாத்தா என்று வாஞ்சையுடன் அழைக்கும் எந்தக் குரலுக்காகவும் காத்திருக்க, குழந்தைகள் பாதையைக் கடந்து போய்க் கொண்டிருக்க, அவரது பணிக்காலமும் கடந்துவிடப் பார்க்கும் வலி மிகுந்த பொழுதில் வேதனையோடு முடிகிறது. தொகுப்பின் சிறப்பான கதையாகப் பட்டது எனக்கு.

"ஆற்றுப்படுத்துதல்" கதை, அன்பான நண்பரது குடும்பத்தில் திடுதிப்பென்று மறிக்கும் அவரது மனைவியின் மரணச் செய்தியினால் சூழும் நினைவுகளோடு வேக வேகமாக இன்னொரு நண்பரோடு அந்த ஊர் நோக்கிப் பயணப் படுவதைச் சொல்கிறது. சாவு எடுக்கப்பட்டபின் சற்றே காலம் தள்ளிப் போய்ச் சேருவது யாருக்குமே சங்கடத்தையும், உளைச்சலையும் கூட்டும். பரிச்சயமான முகத்தை இனி ஒரு போதும் பார்க்க முடியாத வலி அது. அப்படியான நேரத்தில் துணையை இழந்து நிற்பவரைப் பார்க்கவும் நெருடும். இத்தனை உணர்வுகளைத் தூண்டும் கதை.

வாழ்க்கைக் கணக்கில் தோற்கும் கணக்கு வாத்தியார் (சூத்திரங்கள்), சாதி விட்டு சாதி திருமண அழைப்பிதழைக் காலத்தின் விதியாய்ச் செரித்துக் கொள்ளும் குடும்பப் பெரியவர் ( "அவரவர் மனசு போல.."), எல்லாம் இருந்தும், குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடச் சொல்லும் அன்புக் கணவனால், வீட்டில் எதுவுமே இல்லாதபடி ஆக்கும் எந்திரகதியான ஐ டி வாழ்க்கையில் தவிக்கும் மனைவி (அவனும் அவளும்), கல்விக் கடனுக்குத் திண்டாடும் பொறுப்புள்ள தந்தையின் நிச்சயமற்ற அலைச்சல்கள் (இன்றும் நேற்றே), இனம் புரியாத முரட்டுத் தனத்தில் வாழ்க்கையைக் கடத்தும் இளைஞனிடமும் துளிர்க்கும் ஒரு நேயம் (முட்பூ)....என வெவ்வேறு தளங்களில் வாழ்க்கையின் வித விதமான காட்சிகளை நாறும்பூ தமது இளகிய மொழியின் கயிற்றில் அவற்றின் வண்ணம் போகாத வண்ணம் அலசி உலர்த்திப் போட்டிருக்கிறார்.

வீட்டுச் சாமான் களவு போனதைத் தாம் மன்னித்து மறந்தாலும், வேறொரு களவில் அகப்படும் கள்வன் காட்டிக் கொடுத்துவிட, அதற்கான சாட்சிக்கு காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்திற்கும் நடையாய் நடக்கும் நடுத்தர மனிதர்களின் கதை ("யாருக்குத் தண்டனை") நமது சட்டம், நீதி நடைமுறைகளின் முரண் தன்மை குறித்து நல்ல நகைச்சுவை குரலில் பேசுகிறது. முதியவர்களின் மரணம் வீட்டில் இருப்போரையும் விடுதலை செய்யும் விதமாய் நிகழ வேண்டும் என்று பேசும் (இலை உதிர்வதைப் போல்) கதை, ஒரு பெண் தனது பிரியத்திற்குரிய தாயை நினைவு கூறும் மதிப்பான சொற்களில் படைக்கப்படுகிறது.

தந்தையின் கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்படும் வாழ்க்கை சென்ற தலைமுறைகளின் இளசுகள், பெரிசுகள் யாவருக்கும் ஓரளவு பொதுவானது. பலாச்சுளை போல் முள்ளாலான கடினமான மேற்புறத்திற்குள் பொதிந்திருக்கும் அப்பாவின் வாஞ்சையை வெவ்வேறு விதமாய்க் கொணரும் "அப்பாவின் கடிதம்", "கையெழுத்து" கதைகள், ஒளிவு மறைவற்ற எதிரெதிர் கருத்தாக்கங்களுக்கிடையே பாறைக்கிடையே கசியும் சிலீரென்ற தூய்மையான நீரைத் தொடும் உணர்ச்சியைத் தருகின்றன. "ஹைக்கூ கவிதை" பெரிய மனுஷியாக வலம் வரும் சிறுமியிடம் குழந்தையாக மாறத் துடிக்கும் மனிதரின் மெல்லுணர்வின் தடம். இந்தக் கதைகளில் நாறும்பூவின் சொந்தத் தடயம் அதிகம் இருப்பதாகப் படுகிறது.

தலைப்புக் கதை, நன்கு இழைத்துச் செய்யப்பட்டிருக்கும் எழிலான மரச்சிற்பம். நண்பன் மறைவதோடு நட்பு மறைவதில்லை. நினைவுகள் கூட அகலுவதில்லை. ஆனால் அவன் இருந்தபோது போய்ப் பழகிய குடும்பத்தோடான உறவின் இழைகள் நைந்துவிடுகின்றன. நகர வாழ்க்கையின் தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணையில் இதற்கெல்லாம் நிகழ்ச்சி நிரலும் போடப்படுவதில்லை. தனக்கு அற்புத இலக்கியப் பக்கங்களை வாசிக்கப் பழக்கிக் கொடுத்தவனது நினைவை அங்கிருக்கும் ஒரு புத்தகத்தோடு எடுத்துக் கொண்டு நகர முயலும்போது, அதோடு போய்விடுவதில்லை, குடும்பத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள் என்று நண்பனின் மனைவி ஒரு கேவலால் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தும் "ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்" கதை வாசிப்பவரைத் தொடர் சிந்தனையிலும், நினைவுகளிலும் ஆழ்த்தும்.

நெல்லை வட்டார வழக்கின் சுவையான உரையாடல் மணக்க, பெரும்பாலும் சொற்சித்திரங்களாக நகரும் விவரிப்புகளில் மனித உணர்வுகளை மீட்டெடுக்கும் வேட்கை பரவிக் கிடக்கிறது. இடித்துவிட்டுப் போன பழைய வீடாய் நமது பண்பாக்கங்களை உலகமயம் உரு சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதன் கூறுகள் பழைய பர்மா தேக்கு மரக் கதவுகளாக, சன்னல்களாக இன்னும் மதிப்போடு கேட்பார்க்கு வாய்க்கும் வண்ணம் அறிவிக்கப்படுகிறது. அதன் ஒரு மெல்லிய பதிவாக விரிகின்றன இந்தத் தொகுப்பின் சிறுகதைகள்.

வம்சி புக்ஸ் நிறுவனத்திற்கும், சிறப்பான அட்டை ஓவிய வடிவமைப்பு செய்திருக்கும் ராஜ்குமார் ஸ்தபதிக்கும் பாராட்டுதல்கள். தோழமை நேயம் மலர முன்னுரை வழங்கியிருக்கும் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்து, வாசகருக்கு ஒரு வரவேற்புரை.

ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்
சிறுகதை தொகுப்பு
நாறும்பூநாதன்
வம்சி புக்ஸ்
19 டி எம் சாரோன், திருவண்ணாமலை
112 பக்கங்கள். விலை ரூ.70/-

Saturday, March 24, 2012

Book released


( Literary critic Thi. Ka. Si. releasing the book and film director Sugha receiving the first copy )


Writer Naarumpoonathan's ‘Jameelaavai yenakku arimugappaduththiyavan' book release function was held here on Saturday. Veteran literary critic Thi. Ka. Si. released the book and film director Sugha received the first copy. Writers Vannadasan, Udhayasankar, Zakhir Raja and Selvaraj spoke. Veteran writer Thoppil Mohamed Meeran, artist Pon. Vallinayagam and others participated. Performance by singers ‘Karisal Kuyil' and Thiruvudaiyaan, known for his song ‘Aaththaa un selai…', set an apt prelude to the book release function.


Thanks : The Hindu , February 7, 2012

Thursday, March 22, 2012

முகப்பு » ரசனை

நாறும்பூமாலை

‘என்னோட ரெண்டாவது புஸ்தக வெளியீட்டு விளாவுக்கு நீங்க அவசியம் வரணும்’.

இரண்டு மாதங்களுக்குமுன்பே சொல்லிவிட்டார், எழுத்தாளர் நாறும்பூநாதன். நாறும்பூநாதன் என்ற பெயரில் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் என்னும் செய்தியே எனக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் தெரிய வந்தது.சொன்னவர் நாஞ்சில் நாடன் சித்தப்பா. திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரான நாறும்பூநாதனின் பெயரை வைத்துக் கொண்டு ஒரு மனிதர் நடமாடுகிறார் என்ற செய்தியும், அதிலும் அவர் எழுதுகிறவர் என்கிற கூடுதல் தகவலும் என்னை ஆச்சரியப்படுத்தின. இத்தனைக்கும் அவர் திருநெல்வேலியிலேயே வேறு இருக்கிறார்.

நாறும்பூநாதனை நான் கேள்விப்பட்டிருந்த சில மாதங்களிலேயே என்னைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றுவிட்டு சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவர் வந்து சந்தித்த போது, ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் அவர் என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தையும் படித்து முடித்திருந்தார். முதன்முதலில் சந்தித்தபோது எங்கள் இருவரையுமே இணைத்தது ‘கூச்சம்’. தன் ‘பளபளக்கும்’ தலை குனிந்து அவரும், கண்ணை மறைக்கும் சிகை ஒதுக்கி நானும் அவ்வப்போது ஒருவர் முகம் மற்றவர் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டோம்.

சென்னைக்கு நான் திரும்பிய பிறகு இயல்பாக ஒருசில மின்னஞ்சல்களிலும், தொலைபேசி அழைப்புகளிலும் பேசிக் கொண்டோம்.அதன்பின் நான் திருநெல்வேலிக்குச் செல்லும் போதெல்லாம் நாறும்பூநாதனைச் சந்திக்காமல் வருவதில்லை.எங்கள் சந்திப்பில் தவறாது இடம்பெறக்கூடிய மற்றொருவர், ஜானகிராம் ஹோட்டலின் பங்குதாரரோ என்று ஆரம்பத்தில் நான் சந்தேகித்த ‘கவிஞர்’ க்ருஷி. க்ருஷி ஸார்வாளும், திருநெல்வேலியின் ஜானகிராம் ஹோட்டலும் சாகித்ய அகாடமி விருதும், சர்ச்சையும் போல பிரித்துவிடவே முடியாத மாதிரி அவ்வளவு நெருக்கம். இரண்டு மாதங்களுக்குமுன்ஒருமாலைவேளையில் ஜானகிராம் ஹோட்டலின் Roof gardenஇல் வைத்துத்தான் தோழர் நாறும்பூநாதன் தனது இரண்டாம் புத்தக வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார். ‘தம்பி, நீங்க வரலேன்னா இந்த விளா நடத்தியே ப்ரயோஜனமில்ல பாத்துக்குங்க’. சரித்திர நாடகங்களில் நடிக்கும் ஹெரான் ராமசாமியின் குரலை ஞாபகப்படுக்கிற ஒலியில் க்ருஷி ஸார்வாள் கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னார்.

narumbu-invi-final-2

திருநெல்வேலிக்கு வர இருப்பதை வழக்கம்போல குஞ்சுவுக்கும், பின் மீனாட்சிக்கும் சொல்லியிருந்தேன்.நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸில் போய் இறங்கியவுடனேயே மீனாட்சி ஃபோனில் அழைத்தான்.

‘வந்துட்டேளா சித்தப்பா?நான் எப்பொ எங்கெ வரணும்?’

‘சாயங்காலம் ஜானகிராம் ஓட்டலுக்குப் போகணும். வந்துரு.’

‘விஞ்சைக்குப் போயிருவோமெ!நாளாச்சுல்லா.அண்ணாச்சியும் ஒங்கள பாத்தா சந்தோசப்படுவா’.

‘ஏ மூதி!திங்கிறதுலயெ இரி.ஜானகிராம் ஓட்டல்ல நம்ம நாறும்பூ ஸாரோட பொஸ்தகம் வெளியிடுற விளால’.

‘பொஸ்தவமா?சரியாப் போச்சு. எனக்கும் எலக்கியத்துக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்?நீங்க போயிட்டு வாங்க’.

‘எல எனக்கு மட்டும் என்ன சம்பந்தம் இருக்கு? மதிச்சு கூப்பிடுதாங்க. வராம இருந்திராத’.

சாயங்காலம் மேலரதவீதி வழியாக குஞ்சு, மீனாட்சியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ’சோனா’ மாமா கடையை அடுத்த சுவரைக் காண்பித்து மீனாட்சி ‘சித்தப்பா, அங்கெ பாருங்க’ என்றான். ‘எழுத்தாளர் நாறும்பூநாதனின் புத்தக வெளியீட்டு விழா’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த்து . பெரிய எழுத்தில் ‘சுகா’ என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் சங்கடமாக இருந்த்து. ‘சே என்னல இது? பெரிய பெரிய ஆட்கள் பேரயெல்லாம் சிறுசா போட்டு நம்ம பேர அத்தா தண்டிக்கு போட்டிருக்கங்க?’ என்றேன். ’என்ன சித்தப்பா இப்பிடி சடச்சுக்கிடுதிய! மூங்கில் மூச்சு என்னா ரீச்சுங்கிய! அத படிச்சுட்டு நம்ம ஊர்ல எத்தன பேரு ஒங்கள பாக்கணுன்னு துடியா துடிக்காங்க, தெரியுமா?’ என்றான், ‘மூங்கில் மூச்சு’ தொடரின் ஒரு அத்தியாயத்தைக் கூட இன்றுவரை படித்திராத மீனாட்சி.

ஏற்கனவே கொஞ்சம் தாமதமாக போகலாம் என்று குஞ்சு சொல்லியிருந்தான். ‘எல நீதான் சீஃப் கெஸ்ட்டு. நீ மொதல்லயெ போயி பறக்க பாத்துட்டு உக்காந்திருக்கக் கூடாது.கொஞ்சம் லேட்டா போனாத்தான் ஒரு பரபரப்பு இருக்கும்’. அவன் எதிர்பார்க்கிற பரபரப்பில் நானே பயந்து விடுவேன் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தும், ஏனோ அதற்கு ஆசைப்பட்டான். ’சும்மா கெடல, கோட்டிக்காரப்பயலெ’ என்று சொல்லிவிட்டு, சரியான நேரத்துக்கே டவுணிலிருந்து கிளம்பிவிட்டேன். ஆனாலும் அன்றைக்குப் பார்த்து ‘மக்கள் தளபதி’ ஜி.கே.வாசன், ‘அரசியல் துருணோச்சாரியார்’ ப.சிதம்பரம், ‘இளம் பெரியார்’ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இளைய தலைவர்’ கார்த்தி சிதம்பரம் போன்றோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டதுக்காக நகர் முழுவதும் பேனர்களும், வரவேற்புத் தோரணங்களும், வாகனங்களுமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக டவுணிலிருந்து ஜங்ஷன் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. வழக்கமாக பதினைந்து நிமிடங்களில் சென்று விடலாம்.

ஜானகிராம் ஹோட்டலின் மாடிப்படிகளில் அவசர அவசரமாக ஏறினோம். விழா நடைபெறும் வாசலில் நாறும்பூநாதனும், க்ருஷி ஸார்வாளும் நின்று கொண்டிருந்தனர்.‘தம்பி, இன்னும் ஒங்க காலு சரியாகல போல தெரியுதெ!’ க்ருஷி ஸார்வாளின் தொண்டை வழியாக ஹெரான் ராமசாமி என்னிடம் அக்கறையாகக் கேட்டார்.‘எல்லாரும் வந்தாச்சு.உள்ள வாங்க’.கைபிடித்து அழைத்துச் சென்றார் நாறும்பூநாதன்.உள்ளே தி.க.சி தாத்தா, தோப்பில் முகம்மது மீரான் அண்ணாச்சி, நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி போன்றோர் அமர்ந்திருந்தனர்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த ’வானம்பாடி’ சங்கர் சித்தப்பாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மேடையில் ‘திருவுடையான்’ தபலா வாசித்துக் கொண்டே அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தகக் கண்காட்சியின்போது திருவுடையானின் கச்சேரியைக் கேட்டு ரசித்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது. தாளவாத்தியம் வாசித்துக் கொண்டே பாடுவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. முயன்று பார்த்தால்தான் தெரியும். பலமுறை முயன்று கேவலப்பட்டிருக்கிறேன்.(அதேபோலத்தான் ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் தீபாராதனையும் காட்டுவது. முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்).திருவுடையானுக்கு முன்பே ‘கரிசல் குயில்’ கிருஷ்ணசாமி பாடிவிட்டதாகச் சொன்னார்கள். அவர் குரலைக் கேட்க முடியாமல் போனதில் வருந்தினேன். திருவுடையானைப் பற்றி ஒருமுறை இளையராஜா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ’ஸார், திருவுடையான்னு ஒரு பாடகர். கம்யூனிஸ்ட் கட்சி மேடைகள்ல . . .’ நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘ஆங், தெரியும். ‘விருமாண்டி’ பட்த்துல ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ பாட்டு பாட வச்சிருந்தேனே’ என்றார்.

என்னை உள்ளே அனுப்பிவிட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்த குஞ்சு பதற்றமான முகத்துடன் உள்ளே வந்து என்னருகில் அமர்ந்து கொண்டான்.

‘ஏம்ல ஒருமாரி இருக்கெ?’

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் கிசுகிசுத்தான்.‘வாசல்ல படியேறி வார ஒவ்வொருத்தர்க்கிட்டெயும் க்ருஷி ஸார்வாள், இந்தா நிக்காரு பாத்தேளா!இவாள்தான் ‘மூங்கில் மூச்சு’ல வார குஞ்சு’ன்னு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டா.விட்டா என் நெத்தில திருநாறு பூசி கைல கவர் குடுத்துருவாங்களோன்னு பயமாயிட்டு. அதான் நைஸா உள்ள வந்துட்டென்.’

release

தி.க.சி தாத்தா, ‘தேநீர்’ நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி, எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, எழுத்தாளர் உதயசங்கர் போன்றோருடன் மேடையில் உட்கார்ந்திருக்கும் போது மனதுக்குள் தயக்கமாகவே இருந்தது. அசல் எழுத்தாளர்களான இவர்களுடன் சரிசமமாக என்னையும் உட்கார வைத்திருக்கிறார்களே என்கிற சங்கோஜம் விழா முடியும்வரை என் மனதைவிட்டு அகலவே இல்லை. இந்த விழாவில் தோழர் பவா செல்லத்துரையும், அவரது துணைவியார் கே.வி.சைலஜாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அவர்கள் இருவருமே எனக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழி உறவுக்காரர்கள். நேரில் சந்திக்கக் காத்திருந்தேன். விழாவன்று காலையில்தான் அவர்கள் வரவில்லை என்னும் செய்தியை நாறும்பூநாதன் சொன்னார். குறிப்பாக தோழர் பவா செல்லத்துரையைச் சந்திக்க அதிகம் விரும்பினேன். காரணம், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும் போது என்னைவிட அவர் நிறம் என்று தோன்றுகிறது. அருகருகில் அமர்ந்து டெஸ்ட் செய்து பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதில் வருத்தம்தான்.

speech

ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ எழுதிய நாறும்பூநாதனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்’ என்று நான் பேசிய முதல் வரி மட்டும்தான் என் காதில் விழுந்தது. என் பேச்சுக்கு நடுவே நான்கைந்து இடங்களில் கைதட்டலெல்லாம் கூட கேட்டது. என்ன பேசினேன் என்றுதான் தெரியவில்லை.தோழர் நாறும்பூ வீடியோ ஏற்பாடு செய்திருந்தாரா என்று கவனிக்கவில்லை. ஒருவேளை எடுத்திருந்தால் அதைப் பார்த்து நான் பேசியதைத் தெரிந்து கொள்ள ஆவல்.ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் விதமாக மிகச் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தி.க.சி தாத்தாவிலிருந்து அனைவருமே பேசினார்கள்.அநேகமாக எல்லோருமே எழுதி கையோடு கொண்டு வந்திருந்த குறிப்புகளுடன் பேசினார்கள். அதுவும் கீரனூர் ஜாகீர் ராஜா ஒரு முழுநீள கட்டுரை எழுதி வந்து குரல் நடுங்க வாசித்து முடித்து, என்னருகில் அமர்ந்து ஒட்டுமொத்த மேடையையும் லேசாகக் குலுக்கினார்.‘நாறும்பூரெண்டாம் புஸ்தகம் எளுதியிருக்கதெ எனக்கு இன்னைக்குதானெ தெரியும்’ என்கிற விதமாக தோப்பில் அண்ணாச்சி படு இயல்பாகப் பேசினார்.வண்ணதாசன் அண்ணாச்சி தன் பேச்சில் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்துகளை சிலாகித்துச் சொன்னார்.சமீபத்தில்தான் உதயசங்கர் எழுதிய ‘முன்னொரு காலத்திலே’ புத்தகத்தைப் படித்திருந்தேன் என்பதால் வண்ணதாசன் அண்ணாச்சியின் பாராட்டு சரியாகவே இருந்தது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துச் செய்தியை தோழர் பாஸ்கரன் மேடையில் வாசித்தார்.அதில் சற்றும் எதிர்பாராவிதமாக என்னை பாராட்டி கூச்சத்தில் நெளிய வைத்தன சில வரிகள்.அதை மிஞ்சும் விதமாக ஐயா டி.செல்வராஜ் அவர் பங்குக்கு என்னை கலவரப்படுத்தினார்.‘ஒங்க எளுத்து எனக்கு ரொம்பப் புடிக்கும்.நான் எளுதுன ‘தோல்’ நாவல படிச்சு பாத்து ஒங்க அபிப்ராயத்த எளுதுங்க’.

விழா முடியும்வரை குஞ்சு ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததை கவனித்தேன்.‘ஏம்ல வெளக்கெண்ணெ குடிச்சா மாரியே இருக்கெ?’ என்று கேட்டதற்கு, ‘போலெ போ. எந்த நேரம் க்ருஷி ஸார்வாள் மேடையேறி ‘அடுத்து ‘மூங்கில் மூச்சு’ புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்’னு சொல்ல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்.

தோழர் நாறும்பூநாதனை நான் போய் பாராட்டாவிட்டாலும் அவர் பாரட்டுக்குரியவர்தான். தொழிற்சங்க வேலைகளுக்கு இடையே அவ்வப்போது எழுதிவருகிற அவர், இனிவரும் காலங்களில் நிதானமாக எழுதுகிற பட்சத்தில் இன்னும் வலுவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பது என் அபிப்ராயம். இந்த விழாவில் நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஓர் உதவியை நாறும்பூநாதன் செய்தார். சொல்வனம் பிரசுரம் வெளியிட்ட எனது ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிற ‘திருநவேலி’யின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மற்றும் கோட்டோவியங்கள் தந்த படைப்பாளிகளை சொல்வனம் சார்பாக கௌரவப்படுத்தும் வாய்ப்பை தனது விழாமேடையிலேயே அமைத்துத் தந்தார்.

valli

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வள்ளிநாயகத்தின் ஓவியம் ஒன்று]

1081

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இசக்கி எடுத்த ஒளிப்படம் ஒன்று]

காலம் சென்ற புகைப்படக் கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டியையும், ஓவியர் பொன் வள்ளிநாயகத்தையும் எழுத்தாளர் நாறும்பூநாதனின் ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ மேடை கௌரவப்படுத்தியது.


[சுகாவுடன் ஓவியர் பொன் வள்ளிநாயகம்]

[சுகாவுடன் அருண்குட்டி]

ஓவியர் வள்ளிநாயகம் எப்போதும் என்னுடன் தொடர்பிலேயே இருக்கிற என் தம்பி.ஆனால் இசக்கி அண்ணாச்சியையோ, அவரது குடும்பத்தினரையோ நான் அறிந்தவன் அல்லன். ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அதிகம் சிலாகித்த இசக்கி அண்ணாச்சியின் புகைப்படங்கள் ‘தாயார் சன்னதி’ புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.இசக்கி அண்ணாச்சியைச் சந்தித்ததில்லை. ஆனால் சென்னைக்கு நான் ரயில் ஏறும்போதுரயில்வே ஸ்டேஷனில் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நின்றார். இசக்கி அண்ணாச்சியின் கைகள்தான் அவை.