Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Sunday, July 8, 2012

இது வாழ்க்கையோடு இணைந்த கல்வி...ஆ. சிவகாமசுந்தரி First Published : 07 Jul 2012 12:57:15 AM IST


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானபோது 500-க்கு 497 மதிப்பெண்கள் எடுத்த மாணவரைப் பார்த்துத் தமிழகமே வியந்தது. தமிழில் கூடவா 100 மதிப்பெண்கள் என்றெல்லாம் ஆங்காங்கே குரல்கள் எழும்பின. ஓர் ஆசிரியை என்ற வகையில் நான் உள்ளபடியே சந்தோஷமும், பெருமிதமும் அடைகிறேன். சமச்சீர் கல்வி என்ன பாடுபடுத்தப்போகிறதோ என்று பயந்த மாணவர்கள், பெற்றோர்கள், இப்போது அதன் மகத்தான வெற்றியைக் கண்டு அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள். வாழ்க்கையோடு ஒன்றிய கல்வித்திட்டமாய் அமைந்து போனதுதான் அதன் ரகசியம் என்பேன்.

உதாரணத்திற்கு, கடந்த காலங்களில் சிறுநீரகத்தின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் என்று அறிவியலில் கேள்வி கேட்பார்கள். தற்போதைய புதிய கல்வித் திட்டத்தில் கேட்கப்படும் வினாத்தாளிலேயே சிறுநீரகத்தின் படத்தை வரைந்திருப்பார்கள். படம் பார்த்து, விடைத்தாளில் சிறுநீரகத்தின் படத்தை வரைந்து ஏதேனும் 2 பாகங்களைக் குறிப்பிடவும் என்று கூறப்படுகிறது. இது மாணவர்களுக்கு எளிதாக உள்ளது. ஒரு சிறுநீரக உறுப்பின் பாகங்கள் இன்னென்ன என்று அவன் அறிந்துகொள்ள இதுவே சிறந்த உத்தி எனலாம். சிறுநீரகம் எவ்வாறு இருக்கும் என்பதை அவன் மனப்பாடமாக அறிந்திருக்கவோ அல்லது நன்றாக ஓவியம் வரையத் தெரிந்த வல்லுநராகவோ இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை மருத்துவப் படிப்பில் விருப்பம் உள்ளவராக இருந்தால், அவன் கல்லூரியில் அது குறித்து விரிவாய்ப் படித்துக்கொள்ளலாம்.


அதேபோல, "உனது தோழி சுகன்யாவிற்கு சளி பிடித்துள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவாய்?' என்று ஒரு கேள்வி வருகிறது. இது மாணவ மாணவியர் இயல்பாய் பதில் சொல்ல வழி சொல்கிறது. அவள் தும்முவதைப் பார்த்து, அவள் குரலில் ஏற்படும் மாற்றம், கண்களில் சிவப்பு நிறம், சமயங்களில் காய்ச்சல் என காரணங்களை அவர்களால் இயல்பாய் எழுத முடிகிறது. இதுபோலவே கொசு கடித்தால் என்ன நோய்கள் வரலாம்? உடல் பருமனைக் குறைக்க என்ன செய்யலாம்? போன்ற கேள்விகள் உயிரியல் பாட சம்பந்தமான கேள்விகளாகக் கேட்கப்படும்போது, மாணவர்கள் சாதாரணமாய் டெங்கு, மலேரியா என்றும், நடைப்பயிற்சி என்றும் இயல்பாய்ப் பதில் சொல்கிறார்கள். ஆர்வமாய் விடை எழுதுகிறார்கள். 15 வயது அனுபவங்களின் வெளிப்பாடாக, ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் சட் சட்டென்று எளிதாக வெளிப்படுத்த முடிகிறது.

தமிழ்ப் பாடத்தைப் பொருத்தவரையில் வகுப்பறைத் திறன் வளர்த்தல், வாழ்க்கைத் திறன் அறிதல், தயக்கமின்றித் தமிழ் பேசுவோம் எனப் பல சுவையான பகுதிகள் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் பின்னூட்டமாக அமைந்துள்ளன. உதாரணத்துக்கு... ""டாடி வர்ர சண்டே எனக்கு பர்த்டே. பட், நீங்க இன்னும் எனக்கு பர்த்டே டிரஸ் எடுக்கவில்லையே, வொய் டாடி? என்னோட பிரெண்ட்ûஸயெல்லாம் வீட்டுக்கு வரச்சொல்லி கால் பண்ணியிருக்கிறேன்'' ""சண்டே வர்றதுக்கு இன்னும் ஸிக்ஸ் டேஸ் இருக்குதே, டோண்ட் வொர்ரி. டுமாரோ ஈவினிங் ஷாப்பிங் போகலாம். இப்ப உனக்கு ஹேப்பி தானே?'' தந்தைக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைப் படித்தீர்களா? இப்படிப் பேசினால் தமிழுக்கும் பெருமையில்லை. ஆங்கிலத்திற்கும் சிறப்பில்லை. தயக்கமின்றித் தமிழிலேயே பேசுவோம். மேற்காணும் உரையாடலில் பயன்படுத்தியுள்ள ஆங்கிலச் சொற்களை நீக்கி, அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பேசிப் பழகுக.

இதுபோன்ற பகுதிகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் பேசும் சொற்றொடர்களில் எவ்வளவு ஆங்கிலம் கலந்து பேசுகிறோம் என்பதும் புரிபடும். ஒன்று முழுவதுமாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் அல்லது தமிழில் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, தமிழ்நாட்டிலேதானே இருக்கிறோம். ஏன் தமிழிலேயே பேசக்கூடாது என்ற தெளிவு பிறக்கவும் வழி செய்யும்.

துணைப்பாட நூலில் ஒரு சிறுகதை. "மெல்ல மெல்ல மற' என்ற இக்கதையில் தினமும் சிகரெட் புகைக்கும் ஒருவன், சிகரெட்டால் இறந்து போகும் தனது நண்பனின் மரணத்தைக் கண்கூடாகக் கண்ட பின்பு, அந்தப் போதையிலிருந்து விடுபட நினைத்து மனைவியிடம் கூறுகிறான். ""இனிமேல் இந்தப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா விட முயற்சி செய்கிறேன். எனது கவனத்தைப் புத்தகம் படிப்பதில், குழந்தைகளுடன் விளையாடுவதில், தோட்ட வேலை பார்ப்பதில் திருப்புகிறேன்''. கதை இயல்பாய் முடிகிறது. தன் வீட்டிலும் அப்பா புகைபிடித்துக் கொண்டிருப்பதால் இப்படி மனம் மாற வாய்ப்பு உள்ளதே என்று ஒரு பத்தாம் வகுப்பு மாணவி யோசிக்க இடம் கொடுக்கும் சிறுகதை. சாதாரண மக்கள் பேசும் பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

என்னதான் கல்லூரியில் உயர்படிப்பு படித்தாலும், ரயில்வே முன்பதிவு இருக்கை படிவத்தை நிரப்பவோ, வங்கியில் சென்று பணம் செலுத்தும் பாரத்தை நிரப்பவோ பலருக்கும் முடியாத காரியமாய் அல்லது திணற வைக்கும் விஷயமாகவே உள்ளது. இங்கே பத்தாம் வகுப்பு மாணவன் அதிலே தேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதற்காக, அஞ்சலக மணியார்டர் படிவம், வங்கிப் பணம் செலுத்தும் படிவம், ரயில்வே முன்பதிவுப் படிவம் எனப் பலவகை படிவங்களை நிரப்பக் கற்றுத் தரப்படுகிறது. வினாத்தாள்களோடு இப் படிவங்களும் அளிக்கப்பட்டு, அவை விடைத்தாள்களுடன் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எதிர்பார்ப்பிற்கு மாறாக, மாணவ, மாணவியர் இதைக் கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்கள் என்பதே உண்மை.

காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் வரலாறுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. முதன் முறையாக அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய அருமையான வரலாறு பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. படித்த பலரும் அறிந்திராத இந்த சமூக சீர்திருத்தவாதி "ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழைத் தொடர்ந்து நடத்தி வந்தவர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர். மாணவ, மாணவியர் பள்ளிப்படிப்பு முடிந்ததும், என்ன உயர்கல்வி கற்கலாம், எத்தகைய வேலைவாய்ப்புகள் பெறலாம் என்பது குறித்த ஒரு பாடமும் உள்ளது. மதிப்பெண் சார்ந்த கல்வி முறைகளைத் தாண்டி தனது தகுதிக்கேற்ற படிப்பு எது? தனக்கு விருப்பமான கல்வி எது என்பதை அவர்களாகவே உணர்ந்து அவர்களே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வகையில் முடிவு எடுக்க வழிவகை செய்கிறது. நூலகம் குறித்த பாடத்தின் முடிவில், செயல்திட்டம் ஒன்றைத் திட்டமிடுக என்று கூறி மாணவர்களோடு இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை உருவாக்க முயற்சி செய்க என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் இத்தகைய கையெழுத்து இதழ்கள் நடத்திய மாணவர்களில் பலர், தற்போது எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உருவாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாத செய்தி.

அந்த வகையில் சமூகத்தில் ஓர் இனிய பண்பாட்டு மாற்றத்தை இந்த சமச்சீர் கல்வி உருவாக்கும் என்பதே எனது கருத்து. ஓர் ஆசிரியை என்ற முறையில் மீண்டும் நான் சந்தோஷமும், பெருமிதமும் அடைகின்றேன்.
(என்னுடைய துணைவியார் தினமணியில் எழுதிய கட்டுரை இது ...)

Wednesday, April 27, 2011

ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்

மெய்ப்பொருள் நாயனார் தெருவுக்குள் நுழையும்போதே மனம் கனத்தது. எவ்வளவு நாளாயிற்று வந்து? வீடுகளின் முகத்தோற்றங்கள் ரொம்பவே மாறியிருந்தன.இரும்புகடைக்காரரின் பெரிய காம்பௌண்டு சுவர் இடிக்கப்பட்டு அங்கே சின்னச்சின்னதாய் நாலைந்து புதுவீடுகள்... பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை சண்முகம் அண்ணாச்சி எங்கே போனாரோ? கடையையும் காணோம்..அங்கேதான் கணேசன் புத்தகமும் சிகரெட்டுமாய் கிடப்பான். எனக்கு நினைவில் தெரிந்து சொல்வதானால் கணேசன் சிகரெட்டுடன் தான் முதலில் அறிமுகமானான்.கோல்ட் பில்ட்டர் சிகரெட்டை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவன் நினைவு தான் வரும்.

கணேசன் வீடே எனக்கு அடையாளம் தெரியவில்லை.அந்த தெருவில் அவன் வீடு மட்டும் வித்தியாசமாக இருக்கும்.மற்ற வீடுகள் நெருக்கமாக முன் தள்ளி இருக்கையில் அவன் வீடு மட்டும் காம்பௌண்டில் இருந்து சற்று உள்ளடங்கி இருக்கும்.காம்பௌண்டு கதவில் இருந்து வீடு சுமார் இருபது அடி தூரம் இடைவெளி விட்டு கட்டப்பட்டு இருந்தது. "வீட்டின் முன்புறம் திறந்தவெளி இருப்பது தாண்டா அழகு" என்று அடிக்கடி சொல்வான். காம்பௌண்டை ஒட்டி முன்புறம் ஒரேஒரு உயரமான தென்னை மரம்.வீட்டின் முற்றத்தில் நிறைய பூச்செடிகள் விதவிதமாய் பூத்திருக்கும்.வீட்டின் வலது மூலையில் உள்ள வேப்பமர நிழலில் அவன் சைக்கிள் நிற்கும். பின்னால் அவன் மொபெட் வாங்கியபோதிலும் சைக்கிளை அவன் ஒரு போதும் விற்றதில்லை.ஆபீஸ் போவதற்குதான் மொபெட். மீதிநேரம் சைக்கிள் தான்.கன்னிவினாயகர் கோவில் முன் பக்கம் உள்ள தந்தி போஸ்டில் சைக்கிளில் சாய்ந்தபடி நிற்கும் கணேசன் நினைவில் வந்து போனான்.

கணேசன் வீட்டு காம்பௌண்டுக்குள் ஒரு செல்போன் கடை புதுசாய் உருவாகி இருந்தது. கடையில் நாலைந்து மாணவர்கள் ரீ சார்ஜ் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.யாரையும் அடையாளம் காணமுடியவில்லை.அவன் வீட்டிற்கு எதிரே இருந்த காலி மனையில் பெருசாய் ஒரு வீடு எழும்பி நின்றது.கணேசன் வீட்டு வாசலில் சின்னதாய் இருந்த நுழைவாயிலின் கேட்டை திறந்து உள்ளே சென்றேன்.செல்போன் கடையின் சுவர் நீளமாய் உட்புறம் சென்றதால் வீட்டு முகப்பே பெரிதும் மறைக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

வலது ஓரத்து மூலையில் ஒட்டடை தூசிகளோடு நின்றது கணேசனின் சைக்கிள்.
"யாரு?"

உள்ளே இருந்து முதலில் வந்தது சின்னவன் காசி. நன்கு வளர்ந்து இருந்தான்.
"காசி ... எப்படிடே இருக்கே?"

அவன் கையை பிடித்து கொண்டேன்.முதலில் தயங்கி, பின் சுதாரித்து கொண்டவனாய் "மாமா ..மணி மாமா .."என்று சொல்லிக்கொண்டு உட்புறமாய் திரும்பி "மணி மாமம்மா " என்றான்.

இருபத்தஞ்சு வருஷங்களுக்கும் மேலாக வந்து போன வீடு என்றாலும் வராண்டா சேரில் உட்காரும் போது புதுசாய் உட்கார்வது போல இருந்தது. உள்ளே இருந்து வந்தாள் பூரணி.

"வாங்கண்ணே..இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?"

சிரித்தபடியே கேட்டாள். முன்பைவிட சற்றே பெருத்து இருந்தாள்.சமையல் கட்டில் இருந்து வந்ததால் முகமெல்லாம் வியர்வை. சேலை தலைப்பால் முகத்தை துடைத்து கொண்டாள்.

காசியை பக்கத்தில் இழுத்தேன். "என்ன படிக்கே? நாலாப்பா?"

"நாலப்பா ...எல்கேஜி யான்னு கேக்ககூடாது ? ஆறு படிக்கான்.." என்றவள்
"ஏல..மாமவ உள்ளே கூட்டியா..தார்சா லேயே உட்கார்ந்துடீக..உள்ளே வாங்க .."
பூரணி உட்புறம் திரும்பினாள்.

ஹாலில் ஷோபாவில் அமர்ந்தேன்.அறைக்குள்ளும் நிறைய மாற்றங்கள். கணேசனும் பூரணியும் இருந்த பெரிய கருப்பு வெள்ளை புகைப்படம் டிவி க்கு மேல்புறம் தொங்கிக்கொண்டு இருந்தது .திருமணத்தின்போது மாரிஸ் எடுத்தது. இடது பக்கம் மேல்புறத்தில் கணேசனின் பெரிய வண்ணபுகைப்படம் ..புகைப்படத்தில் சந்தனமாலை தொங்கிக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்கள் ஓடி விட்டன.

"பெரியவன எங்க ?" பூரணியிடம் கேட்டேன்.

"மூர்த்தியா அவன் டுஷன் போயிருக்கான் ..இந்த வருஷம் பிளஸ் டூல்ல.." என்றவள் "அக்கா எப்படி இருக்காங்க ? கூட்டிட்டு வர வேண்டியதுதான..? திலக் படிப்ப முடிச்சுட்டானா? " ஆவலுடன் கேட்டாள் பூரணி.

குரலில் இப்போது தெளிவு தெரிந்தது. முன்பெல்லாம் பேசுவதுக்கே ரொம்ப கூச்சபடுவாள்.விபத்தில் கணேசன் இறந்த அன்று அவள் உடைந்து போய் முட்டி முட்டி அழுத காட்சி கண்ணில் நிழலாடியது.

"பி.எட் முடிச்சுட்டீங்களா ? பென்ஷன்லாம் ஒழுங்கா வருதா?" வார்த்தைகள் திக்கி திணறி மோதித்தான் வெளிவருகின்றன எனக்கு.

"பி.எட் முடிச்சு பதிஞ்சும் வச்சாச்சு. எப்ப வருதுன்னு பார்ப்போம்..டி.டி பி வொர்க் பார்த்துக்கிட்டு இருக்கேன். அண்ணன் ஆபீஸ்ல இருந்து கொஞ்சம் ஜாப் வொர்க் கிடைச்சுட்டு இருக்கு.பென்ஷன் பணம் மட்டும் போததுல்ல..கொஞ்சம் இரிங்க அண்ணாச்சி ..அடுப்ப தணிசுட்டு வரேன் " உள்ளே போனாள்.

காசியின் கைகளை கையில் எடுத்து கொண்டேன். லேசான சூட்டுடன் மென்மையாய் இருந்தது. கூச்சத்துடன் கைகளை இழுத்து கொண்டான். கணேசனை உறிச்சி வச்சு பிறந்தவன்.

"அண்ணன் டுஷன் விட்டு எப்ப வருவான்? " என்றேன்.

"சித்தி மார்க்கெட்டுக்கு போயிட்டு வரும்போது அவன கூட்டிட்டு வருவா" என்றான்.

"காப்பிய குடிங்க முதல்ல .."நீட்டினாள் பூரணி.

"ரேவதி இப்ப அடுத்த வீட்டுல தான இருக்கு.அவ தான் அவன கவனிச்சுகுவா. வாரத்துக்கு ரெண்டு நாள் டுசனுக்கு கொண்டு போய் விடறதும்கூட்டியாறதும் அவ தான்.சைக்கிள் ள்ள தனியா விட பயமா தான இருக்கு "

கணேசன் சாலையில் சைக்கிளில் கால் ஊன்றி நின்றபடி செல்பேசியில் பேசிக்கொண்டு இருந்தபோது தான் அந்த லாரிகாரன் பின்புறமாய் வந்து இடித்து தூக்கி எறிந்து...

"அடுத்த வாரம் புது வீடு க்ரஹப்ரவேசம்..திருநவேலி ல தான்..பிள்ளைகளை கூட்டிட்டு கட்டாயம் வரணும்.." என்றபடி கைப்பையில் இருந்து எடுத்து அழைபிதழை பூரணியிடம் நீட்டினேன்.

"பூரணி கணேசன் " என்பதை எழுத்து கூட்டி வாசித்தது போல இருந்தது. "அடுத்த புதனா ? சந்தோஷம். எவ்வளவு நாளா வீடு கட்டணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க ..நம்ம வீடு மாதிரி முன்னால இடம் விட்டு கட்டணும்னு சொன்னேகல்ல..அப்படிதான் கட்டி இருக்கீகளா" சிரித்தாள் பூரணி.

நான் செல்போன் கடையை பார்த்தேன்.அவள் பெருமூச்சு எறிந்தாள்.

"என்ன செய்ய ? அம்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்து அவனே கடையை கட்டிகிட்டான். வாடகை ரெண்டாயிரம் வருது. சென்டரான இடம்லா. சரின்னுட்டேன். செடி கொடில்லாம் அவுகளோட போச்சு.." என்றவள்
"பிள்ளைகளையும் ரேவதியையும் அனுப்பி வைக்கிறேன். நான் இன்னொரு நாள் வரேன் .." என்றவளை மறித்து "இல்லை இல்லை நீயும் கண்டிப்பா வரணும் " என்று அழுத்தமாய் கூறினேன்.

"மூத்தவனையும் பார்க்கலாம்னு நெனச்சேன். நேரமாயிரும். அப்ப நான் கெளம்பறேன் " எழுந்தேன்.

ஷோபாவின் பக்கவாட்டில் இருந்த ஷெல்பில் கணேசன் அடுக்கி இருந்த புத்தகங்கள்..தூசி படிந்து கிடந்தன.

மேல்புற வரிசையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். ஜமீலா நாவல்.சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐஸ் மதாவ் எழுதிய அழகான காதல் கதை.முத்தஆனந்தபுரம் மடத்தில் உள்ள பெரிய புளியமரத்தின் கீழ் அமர்ந்து எண்பதுகளில் கணேசன் மணிக்கணக்கில் சிலாகித்து பேசிய நாவல். ஜமீலாவையும் ஐஸ்மதேவையும் எனக்கு அவன் தான் அறிமுகம் செய்தவன். மனம் பிரளயம் கொண்டதை போல உணர்ந்தேன்.

"இத நான் எடுத்துகிடடுமா? " நாவலை கையில் எடுத்தேன்.

"எடுத்துக்குங்கனேன்.."பூரணியின் குரல் கம்மியது.

வெளியே வந்தேன். காதுகளில் பூரணியின் கேவல் சத்தம் விழுந்தது. "முப்பது வருஷமா பழகி இருக்கீங்க. அவரு போய்ட்டா எல்லாமே போச்சா ?கடைசில என்கூட பொறந்தவங்க மட்டும்தான் எனக்கு உறவா? அப்பப்ப வந்து பார்த்துக்குங்க உங்க பிரெண்டு பொண்டாட்டி பிள்ளைங்க இருக்காங்களா இல்லையானு . .."என்பது போல இருந்தது அந்த விசும்பலின் உணர்வுகள்.

அவளை திரும்பி பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.