Tuesday, June 18, 2024

நாங்குநேரி மாணவன் சின்னதுரை

வாழ்த்துகள் (நாங்குநேரி) சின்னத்துரை --------------------------------------------- ஆறுமாத காலம் பள்ளிக்கே போகாமல், ஆஸ்பத்திரி, பேன்டேஜ், ஊசி , தையல் என்றே காலம் ஓடிப்போன நிலையில், நடந்தவற்றையே மன அழுத்தத்துடன் நினைத்துக்கொண்டிராமல், தன்னம்பிக்கையுடன் படித்து, வேறொரு புதிய சூழலில், புதிய பள்ளியில் சேர்ந்து படித்து, 469 மதிப்பெண்களைப் பெற்ற சின்னத்துரையை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறேன். சின்னத்துரைக்கு ஏற்பட்ட வெட்டுக்காயங்களுக்கு நல்லமுறையில் சிகிச்சையளித்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் குணப்படுத்தியதில் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை டீன், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பெரும்பங்குண்டு. இந்த நேரத்தில் அவர்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி சின்னத்துரை ! படி..மேலும் படி..மேலும் மேலும் படி! உனக்கான அறிவாயுதம் அதுவே !

Monday, June 17, 2024

மாஞ்சோலை எஸ்டேட்

மாஞ்சோலை எஸ்டேட் ஒரு திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமத்தையே வரைபடத்தில் இருந்து நீக்கி விடுவார்கள். அதாவது அந்த ஊரையே அழித்து விடுவார்கள். 96 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் நெல்லை மாவட்ட உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம் இன்று நிலைகுலைந்து போயிருக்கிறது. மாஞ்சோலை, காக்காச்சி, குதிரைவெட்டி,நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்களில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன ஒரு காலத்தில். தற்போது வெறும் தேயிலை மட்டுமே பயிர் செய்யப்பட்டு வந்த சூழலில், குத்தகை காலம் முடிவடைய இருப்பதைக் காரணமாகச் சொல்லி, தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வை அளித்து வெளியேற்றி வருகிறது எஸ்டேட் நிர்வாகம். இந்தத் தொழிலாளர்களின் தொப்புள்கொடி உறவு என்பது இந்த மாஞ்சோலை தான். வேறு உறவுகள் இல்லை. குடியிருக்க மனைகள் ஏதுமில்லை. சம்பாத்தியம் என எதுவுமில்லை. திடீரென வெளியே போகச்சொன்னால் எங்கே போவார்கள்? இங்குள்ள மக்கள் சாதி, மதம் பார்க்காமல் பழகுபவர்கள். எல்லாக் கோவிலுக்கும் போவார்கள். எல்லாச் சாமிகளையும் கும்பிடுவார்கள். கடந்த மாதம் வனப்பேச்சியம்மன் கோவில் கொடையின்போது, " இதுதான் கடைசித்திருவிழா..வெளியூர், வெளிமாநிலங்களில் வசிக்கும் உறவுகள் எல்லோரும் அவசியம் கலந்து கொள்ளுங்கள்" என அறிவிப்பு செய்தபோதே மனம் கலங்கியது. நாம் பிறந்த ஊர் இனி இல்லை. நாம் படித்த பள்ளிக்கூடம் இனி இல்லை. நாம் விளையாண்ட தெருக்கள் இல்லை. நாம் குளித்த ஓடைகள் கூட இனி இல்லை. நாம் பணிபுரிந்த தொழிற்சாலை இல்லை. எல்லாம் மீண்டும் காடாக மாறி விடும் எல்லாவற்றிற்கும் மேலாக , அந்தப் " பதினேழு பேரின்" நினைவுகளுமே அழிந்து போகும். வளர்ச்சி பெற்ற மனித சமூகம் இதை அனுமதிக்கலாமா? தமிழ்நாடு அரசு இந்த எஸ்டேட்டை எடுத்து நடத்த முன்வர வேண்டும். அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தொடர்ந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஞ்சோலை போயிருந்தபோது, அங்குள்ள ஒரு பெண் தொழிலாளி பேசும்போது " கையில் கொடுக்கும் இந்த ஒன்றரை லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டு எந்தத் திக்கில் போவது ? எங்கே வாழ்வது? " என்று கண்ணீர் ததும்பக் கூறினார். மாஞ்சோலை மண்மூடிப்போவதை நாம் அனுமதிக்கப்போகிறோமா?