Showing posts with label எழுத்தாளர். Show all posts
Showing posts with label எழுத்தாளர். Show all posts

Sunday, November 2, 2014

அவர் தான் தொ.ப.



தெற்கு பஜாரில் உள்ள ரத்னா ஜவுளி கடையில் அவசரத்திற்கு என்று ஒரு பனியன் வாங்கிகொண்டு திரும்பும்போது எதிர் கடையில் தொ.ப.உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டேன்.ரொம்ப தளர்ந்திருந்தார்.பார்த்து ஏழெட்டு மாதங்கள் இருக்கும்.அவரை கடந்து போக முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அவரிடம் பேச புது புது விசயங்கள் நிறையவே இருக்கும்.அவரிடம் உள்ள விஷேச பண்பு என்பதே அது தான் .அரை மணி நேரத்தில் அது வரை கேட்டிராத அறுபது விசயங்களை சொல்லி விட்டு போய்  விடுவார். நான் ஹெல்மெட் போட்டிருந்ததால் உடனடியாக அவரால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.கவசத்தை கழட்டியதும் என்னை பார்த்து உற்சாகமாக கை அசைத்து வரவேற்றார்..
"ச்சே..இவ்வளவு நாளா சந்திக்காம இருந்துட்டமே .."என்று மனசுக்குள் தோன்றியது.ஈழ பிரச்னையில் இருந்து கூடங்குளம் வரை எத்தனையோ மனஸ்தாபங்கள்..கருத்துக்களை வெளிப்படையாய் பேச ஏற்பட்ட தயக்கம் தான் இந்த இடைவெளிக்கு காரணம் ...

தஞ்சை தமிழ் பல்கலைகழகம் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பதவி காலம் கடந்த மாதம் முடிவடைந்தது என்பதை கூறியவர், கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நடந்த முக்ய சம்பவங்களை நினைவுகூர்ந்தார்...இந்த நேரத்தில் கவிஞரும் நடிகருமான திரு.அருணா சிவாஜி அவர்கள் அந்த பக்கமாக வந்தவர் எங்கள் பேச்சில் இணைந்துகொண்டார்.வெளியூருக்கு சென்று பேச மனசு விருப்பபட்டாலும் உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது என்று வருத்தப்பட்டார்.அவரது குருநாதர் சி.சு.மணி நினைவு சொற்பொழிவு கூட்டம் ஒன்று வரும் ஞாயிறு மாலை ஆறு மணிக்கு நடக்கிறது வாருங்கள் என்று அழகான ஒரு அழைப்பிதழ் கொடுத்தார்.ரொம்ப பேர் வேண்டாம். ஒரு பத்து பதினைந்து பேர் போதும் என்றார். பாளையம்கோட்டை பற்றிய ஒரு நூல் எழுதி கொண்டு இருக்கிறேன்..முனைவர் நவநீதன் உள்ளிட்ட சில நண்பர்கள் நான் சொல்ல சொல்ல எழுதிக்கொண்டு வருகிறார்கள் என்று போகிறபோக்கில் ஒரு முக்கிய செய்தியை சொன்னார்..நானும் வேண்டுமானால் வந்து தங்களுக்கு உதவுகிறேன் என்று சொன்னேன்.பேச்சு எங்கெங்கோ சென்றது..பை பாஸ் ஆபரேஷன், மாத்திரை,மருந்து என்று எங்கள் சொந்த பிரச்னைக்கு வந்து சேர்ந்தோம்.கால் வலி தீராத வலியாக இருக்கிறது என்று வருத்தப்பட்டார். அம்னீசியா நோய் போல சில சமயங்களில் எதிரே இருப்பவர் பேர் மறந்து போய்  விடுகிறது என்று சொன்னவுடன் எதிரே இருந்த சிவாஜி "அய்யா ..நான் யார் என்று தெரியுதா ..?:என்று பதட்டத்துடன் கேட்டார்.
"நீங்க அருணா சிவாஜி தான .." என்று தொ.ப.அவர்கள் சிரித்ததும் தான் அவருக்கு கொஞ்சம் திருப்தி வந்து சேரில் சாய்ந்து உட்கார்ந்தார்.
தொ.ப.என்றாலே அவரது ஞாபக சக்தி தான் நினைவுக்கு வரும்..தான் படித்த அதனை புத்தகங்களையும் எழுதிய ஆசிரியர் முதற்கொண்டு நினைவாய் சொல்வார் அவர்..

பேச்சு குடும்ப விசயத்துக்கு திரும்பியது.பையன் இப்ப என்ன வருஷம் படிக்கிறார் என்றார்.அவன் வேலைக்கு போய்  ஒரு வருஷம் ஆகிறது என்று சிரித்தேன்.
அட ..நாம சந்தித்து அவ்வளவு நாள் ஆகி விட்டதா என்று அவரும் சிரித்தார்.கோயம்புத்தூர் ல metallurgical engineering  தான படிச்சான் என்றார்.நல்லவேளை அம்னீசியா வேலை செய்யவில்லை என்று நினைத்துகொண்டேன்.அவன் கோவை P .S .G .T e c h  கல்லூரியில் இந்த பிரிவு எடுத்து இருக்கிறான் என்றவுடன் உலோகவியல் முக்யமான படிப்பு என்று பாராட்டியது இப்போதும் நினைவில் ஓடியது.

அவர் நெல்லை வந்தால் பார்த்து பேசணுமே ...என்றார்.
நான் உடனே பதறிபோய் "என்னய்யா நீங்க..அவன் வந்தா நானே அழைத்து வருகிறேன் உங்கள் வீட்டுக்கு.."என்றேன்.
"ஆதிச்சநல்லூர் மக்கள் பயன்படுத்திய உலோக துண்டுகள்,  இடையங்குளம் மக்கள் உருவாக்கிய இரும்புத்துண்டுகள் எல்லாம் என்கிட்டே இருக்கு..இதை எப்படி அந்த காலத்து மக்கள் உருக்கியிருப்பர்கள் என்று அவரிடம் கேட்டு தெரிஞ்சுக்கணும்..இது சம்பந்தமான வேற சந்தேகங்களும் இருக்கு..அவர்கிட்ட கேக்கணும் ..என்றார்..
வழக்கம்போல எங்களுக்கு தேனீர் வாங்கி கொடுத்தார்..நாங்கள் குடித்தோம்.பின் வழக்கம்போல அவர் சிகரட்டை பற்ற வைத்து கொண்டார்..அருணா சிவாஜி பதறினார்..
ஆபரேஷன் எல்லாம் பண்ணி இருக்கீங்க..சிகரெட் பிடிக்கறது உயிருக்கு ஆபத்தே என்றார்.
சிகரெட் குடிக்காட்டி அவருக்கு இப்ப உடனே ஆபத்து என்றேன்.தொ.ப.சிரித்தார்.
தமிழக அறிவுஜீவிகள் வியந்து பாராட்டும் தொ.ப.என்ற பேராசிரியர்.தொ.பரமசிவன் அவர்கள் எவ்வளவு படித்து இருந்தபோதிலும் தன் முன்னால் வளர்ந்த சிறுவன் ஒருவனிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது என்று கருதினால், அவரது பண்பு என்னை வியக்க வைத்தது...சந்தேகங்களை எவரிடமும் கேட்டு தீர்த்து கொள்ளலாம் எனும் அவரது வேட்கை அவர் மீதான மதிப்பை மேலும் கூட்டியது..
எனது வண்டியை கிளப்புமுன் அவரை திரும்பி பார்த்தேன்..
சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து கொண்டு இருந்தார்.

"எங்கள்      அன்பிற்குரிய தொ.ப..."

Friday, December 7, 2012

பெண்கள் "பேப்பர்' படிக்கிறார்களா... By ஆ. சிவகாமசுந்தரி First Published : 24 November 2012 01:33 AM IST

First Published : 24 November 2012 01:33 AM IST
நமது நாட்டுப் பெண்கள் அன்றாடம் செய்தித்தாள்களைப் படிக்கிறார்களா என்று ஒரு ஆய்வு செய்தால் மனதிற்கு மிகவும் சங்கடமான பதில்தான் கிடைக்கும். அப்படியே படித்தாலும் என்ன மாதிரி செய்திகளை, எப்படிப் படிக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால் அது பல ருசிகரமான தகவல்களைத் தரக்கூடும்.
என்னோடு பணிபுரிபவர்கள், பக்கத்து வீட்டுப் பெண்கள், நெருங்கிய தோழிகள், உறவுக்காரப் பெண்கள் என்று பழகிய பெண்கள் கூறிய வகையில் பார்த்தால், செய்தித்தாள் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. சிலர், "தலைப்பு'ச் செய்திகளை மட்டுமே வாசிக்கின்றனர். இன்னும் சிலர் சினிமாச் செய்திகள் படிப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் விடுமுறை நாள்களில் மட்டும் படிப்பதுண்டு. இன்னும் சிலர் மத்திய, மாநில அரசுகளின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை மட்டும் தவறாது படிக்கின்றனர்!
அலுவலகப் பெண்கள், தாம் சார்ந்த துறை சம்பந்தப்பட்ட செய்திகள் ஏதும் இருந்து கணவர் ஞாபகப்படுத்தினால் அந்த நேரம் படிக்கின்றனர். மழைக்காலங்களில் தொடர்மழை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் தமது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளாரா என்று ஆசிரியைகள் படபடப்புடன் பிரித்துப் பார்கின்றனர்.
சிலர் ஜோதிடப் பலன்களைப் பார்க்க ஆர்வம் செலுத்துவது உண்டு. பொதுவாய் ஜோதிடப் பலன்களில் பெண்களுக்கு என்று ஒரு வரி மட்டுமே பலன் போட்டிருப்பார்கள்; மீதியெல்லாம் ஆண்களுக்கானவை போலும்!
பெரும்பாலும் பெண்கள் அவர்களுடைய குடும்பச் சூழல், வீட்டு வேலை, வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால் அதற்கும் சேர்த்து தயாராக வேண்டிய கடமை காரணங்களால் சாவகாசமாக செய்தித்தாள் படிக்க முடியாமல் போகிறது.
நமது நாட்டில் அரசியலே ""ஆண்களுக்கு மட்டும்'' என்பது போன்ற போக்குதான் பொதுவாக நிலவுகிறது. ஒரு சில பெண் முதல்வர்கள், சில பெண் எம்.பிக்கள், சில எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.
நேரடியான அரசியலுக்கு வருவது ஒரு புறம் இருக்கட்டும். நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கும் பார்வையாவது பெண்களுக்கு வரவேண்டுமே!
அண்ணா ஹசாரே, அரவிந்த கேஜரிவால், 2ஜி ஸ்பெக்ட்ரம், வதேரா, கூடங்குளம்  அணுஉலை உதயகுமார் என்று அன்றாடம் அடிபடும் பெயர்களை முழுமையாகப் படிக்க முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு இளம்பெண் அவளது திருமணம் நடந்ததையொட்டி அரசு அளித்த உதவித்தொகை அடங்கிய கடித உறையை வைத்திருந்தாள். அதில் "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம்' என்று அச்சிட்டிருந்தது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரை தமிழ்நாட்டில் எத்தனை பெண்களுக்குத் தெரியும்? ஏதோ ஒரு திராவிடக் கட்சியின் பெண் தலைவராக இருக்கும் என்றே பலர் நினைக்கக்கூடும்.
இதுபோல, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, கேப்டன் லட்சுமி ஷெகல், தில்லையாடி வள்ளியம்மை என எத்தனையோ வீரப் பெண்களின் வரலாறு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தினமும் செய்தித்தாள்களை வாசிக்கும்பட்சத்தில் இவர்களைப் பற்றி அவ்வப்போது வரும் செய்திகளைத் தொடர்ச்சியாக அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
 பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கும் அதே நேரத்தில், நாட்டின் அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் போக்கு பெண்கள் மத்தியில் உருவாக வேண்டும். அது இல்லாமல் இருப்பதால்தான் ஆண்கள் தொகுதியை பெண்களுக்கான தொகுதியாக மாற்றும்போது, கணவன்மார்கள் லாலு பிரசாத் பாணியில், தங்களது மனைவிமார்களைப் போட்டியிட வைத்து, வெற்றிக்குப்பின் தங்களது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்கின்றனர்.
 கூடங்குளத்தில் அணுஉலை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் தினமும் ஊடகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் ஏராளமான பெண்கள் தங்களது வாழ்வாதாரம் குறித்த அச்சத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். பிற பகுதிகளில் உள்ள பெண்கள் இது குறித்து யோசிக்கிறார்களா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் இது பற்றிய செய்திகளையாவது படிக்கிறார்களா என்றும் தெரியவில்லை.
அணுப்பிளவு குறித்து ஆராய்ச்சி செய்து, அணுப்பிளவின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்திய முதல் விஞ்ஞானி மேடம் கியூரி என்ற பெண்மணி. பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த ஆண் விஞ்ஞானிகளுக்குப் பக்கபலமாக இருந்து குறிப்புகள் எடுத்துக் கொடுத்ததும் அவர்தம் மனைவிமார்களாக இருந்த பெண் விஞ்ஞானிகளே என்பதும் வரலாற்று உண்மைகளே.
அரசியல், விஞ்ஞானம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருவது வரவேற்கத்தக்க விஷயமே எனினும் அவர்கள் பெண்கள் என்பதாலேயே எல்லாவற்றையும் வரவேற்றுவிட முடியாது. சமூகம் சார்ந்த மதிப்பீடுகளுக்கான அளவுகோல் அவர்களுக்கும் பொருந்தும். அந்த அளவுகோலில் வெற்றிபெற்ற பெண்களே சரித்திரத்தில் இடம்பிடிப்பர். இந்த உண்மையை அறிந்து கொள்ள தொடர்ச்சியான வாசிப்பு வேண்டும். ஆம், பெண்கள் தொடர்ச்சியாக செய்தித்தாளை வாசித்தால் மட்டுமே இது சாத்தியம்.

கருத்துகள்(3)

பெண்களுக்கு நமது நாட்டு அரசியல் போக்கு பற்றிய விழிப்புனர்வவது கண்டிப்பாக வேண்டும்..,அதற்க்கு வுடகங்கள் மட்டுமே துணை புரியும் என்பதே உண்மை..,
பெண்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லாமல் இர்ருப்பதால்தான் அவர்களின் கணவர்கள் அவர்களுக்கு பதிலாக பெரும்பான்மையான பெண்கள் பிரச்சினைகளுக்கு நம் நாட்டில் சரியான தீர்வு காணபடாமல் இருக்கின்றது
பெண்கள் பேப்பர் படிக்கிறார்களா....... சிந்திக்க வைக்கும் தலைப்பு. எல்லா வீடுகளிலும் பேப்பர் வாங்கபடுவதில்லை, என்பதே அதிர்ச்சியான விஷயம். டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவர். அவரை கல்லூரியில் சேர்த்தால் ஆண்கள் கவனம் சிதறும் என்று சொன்னதும். பிரிட்டிஷ் அதிகாரி கவனம் சிதறுபவர்கள் படிப்பை நிறுத்தி கொள்ளட்டும், அந்த ஒரு பெண் டாக்டர் ஆனால் போதும் என உறுதியாக நின்றதால் அவர் மருத்துவர் ஆனார். சமிபத்தில் இறந்த கேப்டன் லட்சுமி ஷெகல் வீரமிக்க வரலாறு பெண்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். இன்று மாறிவிட்ட சூழ்நிலையில் பெண்களுக்கு சமூக அக்கறை வேண்டுமானால் பத்திரிக்கைகளை படிக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டுரை எழுதிய சகோதரியை பாராட்டுகிறேன். பெண்களும் ஆன்மிகம் மற்றும் ஜோதிட செய்திகளை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் படிக்க வேண்டும்.
(Press Ctrl+g or click this 
 to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க

*
1000 ஏதாவதொன்று
reCAPTCHA சேலஞ்ச் படம்

புதிய சேலஞ்சைப் பெறுக
ஆடியோ சேலஞ்சைப் பெறுகபார்வை சேலஞ்சைப் பெறுக
உதவி
வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Saturday, April 30, 2011

சுகாவை எனக்கு பிடிக்கும்

ஆனந்த விகடனில் சுகா மூங்கில் மூச்சு எனும் தொடரை எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், திருநவேலி காரர்களுக்கு ஏக சந்தோஷம்.

"அது யாருடே ! நம்ம ஊரைப்பத்தி அப்படியே எழுதுதான்...அருமையா எழுதுதாண்டே ! ஒனக்கு தெரியாமலா இருக்கும்? "

எழுத்தாளர் சங்கத்தில் நீண்ட காலமாக நான் செயல்பட்டு கொண்டு இருப்பதால் எழுத்தாளர் சுகாவை நான் கண்டிப்பா அறிந்து இருப்பேன் என்ற நினைப்பில் பல திருநெவேலி வாசிகள் என்னிடம் உரிமையாய் விசாரிப்பார்கள். உண்மையில் இந்த ஆண்டு ஜனவரி 30 வரை நான் சுகாவை அறிந்திருக்கவில்லை. எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட போது சுகாவின் அப்பா சுகா எழுதிய "தாயார் சன்னதி " என்ற நூலை எனக்கு படிக்க கொடுத்தார்.அன்று இரவே அந்த நூலை வாசித்து முடித்து விட்டேன்.

மனுஷன் என்னமாய் எழுதியிருக்கான். நான் கரிசல்காட்டு மண்ணான கோவில்பட்டியில் பிறந்து வளந்தவன் தான்.எனினும் கடந்த 25 வருசங்களாக தாமிரபரணி தண்ணியை குடித்து வளர்ந்து விட்டதால் அந்த மண்ணின் வாசம் எனக்கு ரொம்பவே பிடித்துபோய் விட்டது.நெல்லை மண்ணின் ஈரமான மனிதர்களை, பிரியமான ஆச்சிகளை, அவர்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை இவ்வளவு நுட்பமாக பதிவு செய்துருக்கிறாரே என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. கல்யாணி ஆச்சியை பற்றி அவர் கூறுவதை கேளுங்கள்.


....யாரையுமே நெருக்கமாக பழகுபவர் போலவே தான் ஆச்சியால் சொல்ல முடியும்.ஒருமுறை சொன்னாள்.

"சாவடிபிள்ளை அண்ணாச்சி வீட்டுக்குத்தான் அவாள் வந்துருந்தா. ஆனா நான் அவாள அங்க வச்சு பாக்கல. நம்ம மார்க்கெட்ல வச்சுதான் பாத்தேன்.பக்கத்துல போய் கும்பிட்டேன். பச்சபுள்ள மாதிரி சிரிச்சுக்கிட்டே அவாளும் பதிலுக்கு கும்பிட்டா"

தமிழகத்தின் மற்ற பகுதியில் அவாள் என்றால் பிராமணர்களை குறிக்கும் சொல்.ஆனால் திருநேவேலியில் பிரியமானவர்களை மரியாதையுடன் விளிக்கும் சொல்.கல்யாணி ஆச்சி "அவாள்" என்று சொன்னது மகாத்மா காந்தியை.

திருநெல்வேலி சிவசக்தி ரெடிமேடு கடையில் துணி கிழிக்கும் சாமிகொண்டாடி அருணாசலம் பிள்ளை, திருமண துப்பு சொல்லும் பிரியமான வீரையன் தாத்தா, நடிகை விஜலலிதாவின் பரம விசிறி பிரம்மநாயகம் தாத்தா , விஞ்சைவிலாஸ் கைலாசம் பிள்ளை , எப்போதும் பவுடர் பூசியிருக்கும் கிரிஸ்டி டீச்சர், பொருட்காட்சியில் "ராட்டுல" சுத்தி அவஸ்தை பட்ட சுந்தரம்பிள்ளை பெரியப்பா , இளம்பிராய காதலி சந்திரா ...என எத்தனை விதவிதமான மனிதர்களை நமக்கு அறிமுகபடுத்துகிறார்..!

படிக்க படிக்க அப்படியொரு இன்பம் மனசுக்குள் ஊற்றாய் பெருகியது.
உண்மையில் இப்படியொரு பிரியத்துடன் திருநெல்வேலியில் மட்டும்தான் இத்தகைய மனுசர்கள் இருப்பார்களா? மதுரையிலோ கோவையிலோ ஈரோட்டிலோ அல்லது ராமநாதபுரத்திலோ உள்ள மனுஷர்களின் வாழ்க்கையிலும் இது போன்ற ஈரமான பக்கங்கள் இருக்கும்தானே ? இருக்கும். கண்டிப்பாக இருக்கும்.நான் படிக்காமல் கூட இருந்திருக்கலாம்.

வண்ணதாசனின் அருமையான முன்னுரை மனசை ரொம்பவே இளக வைக்கிறது. ஓவியர் பொன்.வள்ளிநாயகத்தின் அற்புதமான கோட்டோவியங்கள் புத்தகத்துக்கு மேலும் பொலிவூட்டுகிறது.

படித்து முடித்ததும் நாற்பது ஆண்டுகள் டவுன் அம்மன் சன்னதி தெருவில் குடியிருந்த உணர்வு ஏற்பட்டது. இவரது பல கதாபாத்திரங்கள் நான் சந்தித்தவர்கள்.அறிந்தவர்கள்.சுகாவை தவிர.

சொல்வனம் வெளியீடான தாயார் சன்னதி டிசம்பர் 2010 இல் வெளியானது.
மறுநாள் காலையில் அவரது அப்பாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

"என்கிட்ட பேசினது எல்லாம் சரிதான்.அவனுக்கு ஒரு கடுதாசி எழுதி போட்டுரு.குறிச்சிக்கோ அவன் முகவரியை .."என்றபடி அவரது முகவரியை தந்தார்.

நெல்லைக்கண்ணன் அண்ணாச்சி ! மன்னிச்சுக்குங்க ..இன்னமும் உங்க பையனுக்கு நான் கடுதாசி எழுதல..எதை எழுத..எதை விட..என்று மனசு அடிச்சுக்குது..எப்படியும் எழுதிவிடுவேன் "