Monday, October 10, 2016

"யாதோன் கி பாரத் " படம் பார்த்ததை நான் சொல்லிக் கொண்டு இருக்கும் போது தான், நடராஜன் அங்கு வந்தான்.
" எந்த தியேட்டர்ல படம் பார்த்த..?" என்றான் என்னிடம்.
" நம்மூர் ராமசாமி தியேட்டர்ல தான்..ஏன் ?" என்றேன்.
" போலே போ..இதை எல்லாம் இங்க பார்க்கக் கூடாது..எங்க ஊரு தங்கம் தியேட்டர்ல பார்க்கணும்..அங்க பார்த்தாதான் பாத்தமாதிரி இருக்கும்.."
பீற்றிக் கொள்வான் அவங்க ஊர் தங்கம் தியேட்டர் பற்றி.
ஆசியாவிலேயே பெரிய கொட்டகையாம்..2500 பேரு உட்கார்ந்து பார்ப்பாங்களாம்...எங்கே இருந்து பார்த்தாலும், படத்தை நல்லா பார்க்க முடியுமாம்..முன்னால பெரிய மைதானம் மாதிரி இடம் கிடக்குமாம். பசங்க விளையாடலாமாம். கதை விட்டுக் கொண்டே இருப்பான் அவன்.
1981 இல் திருப்பத்தூரில் வேலை கிடைத்து சென்றபிறகு, மதுரை செல்லும் போதெல்லாம் அங்கே படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் தணியாமல் இருக்கும்.
1982 என்று நினைக்கிறேன். மதுரைக்கு நண்பர்களுடன் பாக்கியராஜ் நடித்த " தூறல் நின்னு போச்சு" படம் பார்க்க தங்கம் தியேட்டர் போனோம். நீண்ட நாள் கனவு நனவு ஆகப் போகுது என்ற ஆசையுடன். டிக்கெட் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன்.
அதன்பிறகு, தொண்ணூறுகளின் மத்தியில், அந்தப் பக்கம் சென்றபோது, தியேட்டர் மூடிக் கிடந்தது. பூட்டிய கதவுகளின் ஊடாக, அந்த தியேட்டரைப் பார்ப்பேன். நடராஜன் சொன்னதை எல்லாம் கற்பனையில் நினைத்துப் பார்ப்பேன். யாரிடம் கேட்டாலும், இன்னும் கொஞ்ச நாளில் திறந்து விடுவார்கள் என்று சொல்வார்கள். அப்போது எல்லாம் நம்பிக்கை இருந்தது. என்றேனும் ஒருநாள், ஒரு படம் இங்கே பார்த்துரணும் என்று.
எழுத்தாளர் சங்க அலுவலகம் அந்தத் தெருவில் தான் இருக்கிறது. அங்கு செல்லும் போதும் மூடிய கதவுகளின் வழியே பார்ப்பேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு , தியேட்டர் கை மாறிய போது, படம் பார்க்கும் ஆசையும் விழுந்த கட்டிடங்களைப் போலவே நொறுங்கிப் போனது.
இப்போது தியேட்டர் வளாகத்தில், நெல்லை ராயல் தியேட்டர் போலவே, வேறு ஒரு நிறுவனம் வந்து உட்காரப் போகிறது..
தங்கம் தியேட்டர் - என் வாழ்வில் கனவாகவே போய் விட்டது.
" என் சோகக் கதையைக் கேளு..தாய்க் குலமே.." என்ற பாடல் அந்த தியேட்டர் வாசலில் கேட்டது மட்டும் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

No comments: