Sunday, September 13, 2020

பெருமைமிகு நெல்லைச்சீமை -3 ---------------------------------------------------- பாரிஸ் நகரத்தில் இருந்து கிளம்பிய அந்த மனிதரின் பெயர் லூயிஸ் லாபிக்யூ. இவரும் முனைவர் ஜாக்கோர் வந்ததுபோலவே, சென்னை வந்து அதன்பின்னர் திருநெல்வேலி வந்து சேர்ந்தார். ஆதிச்சநல்லூர் பறம்பில் வந்து புதைபொருள் ஆராய்ச்சி செய்து பார்த்தபோது, இவருக்கும் ஏராளமான பழம்பொருட்கள் கிடைத்தன. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதி தமிழர்கள் பயன்படுத்திய உலோகப்பொருட்கள் பலவற்றையும் கண்டு வியப்படைந்தார் லூயிஸ். இவை மனிதகுல வரலாற்றின் அறிய பொக்கிஷங்கள் என்பதை உணர்ந்து , கண்டுபிடித்த பழம்பொருட்களை அட்டைப்பெட்டியில் வைத்து மூடி சீல் வைத்து பத்திரமாய் பாரிஸ் நகருக்கு கொண்டு சென்றார். உலகின் ஆதிக்குடி மக்கள் பயன்படுத்திய உலோகங்களை, இரும்பு பொருட்களை பாரிஸ் நகரத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார் லூயிஸ். ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் வரக்கூடிய அந்த அருங்காட்சியகத்தில், ஆதிச்சநல்லூர் தமிழர்களின் வரலாறும் இடம்பெற்றது. இப்படி ஜெர்மன் நாட்டில் இருந்து ஒரு ஜாக்கோரும், பிரெஞ்சு நாட்டில் இருந்து ஒரு லூயிசும், நெல்லைச்சீமைக்கு வருகை தந்து, இங்குள்ள பழமையான பொருட்களை எப்படி எடுத்து செல்ல முடிந்தது ? தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை எப்படி இவர்கள் அறிந்தார்கள் ? அதிலும் துல்லியமாக, ஆதிச்சநல்லூர் என்ற குக்கிராமத்தில் ஐயாயிரம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் பரந்துபட்ட ஞானம் கொண்டிருந்தார்கள் என்பதை எதன்மூலம் தெரிந்து கொண்டார்கள் ? போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை. ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிறிஸ்தவம் பரப்ப வந்த மிஷனரிகளில் முக்கியமானவரான பிஷப் கால்டுவெல் அவர்கள் ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற பகுதிகளில் கிடைத்த செப்புக் காசுகள், ஓடுகள், முதுமக்கள் தாழிகள் போன்றவற்றை ஆய்வு செய்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்கள் மிகசிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஆங்கில இதழ்களில் சில கட்டுரைகள் எழுதியுள்ளதாக தெரிகிறது. அதைப்படித்து விட்டுத்தான் ஜாக்கோர்,லூயிஸ் போன்றவர்கள் தமிழ்மண்ணை நோக்கி வந்திருக்கக்கூடும் என்று அனுமானிக்கலாம். இந்தியாவில் வாணிகம் செய்ய வந்த வெள்ளைக்காரர்கள், இங்கிருந்த சிற்றரசர்களை துவக்கத்தில் வளைத்துப்போட்டு, இடங்களை வாங்கி, வரிவசூல் உரிமையை பெற்று தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர் என்பதை நாம் அறிவோம். கிழக்கிந்திய கம்பெனியின் நோக்கம் வியாபார லாபம் என்றபோதிலும், இந்தியாவின் முழுமையான வரலாற்றை அறிந்து கொள்ள முயன்றனர். ஒரு தேசத்தின் மக்களை பற்றிய முழுமையான வரலாற்றை அறிய வேண்டுமானால், அவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். இந்தியர்கள் தங்களின் வரலாற்றை முறையாக பதிவு செய்யவில்லை என்று ஆதங்கப்படுவோர் உண்டு. உண்மை என்னவெனில், வரலாற்றை ஆவணப்படுத்தவே செய்தார்கள். " அவை வம்சாவளிகளாகவும், புராணங்களாகவும் சமய மட பதிவேடுகளாகவுமே இருக்கின்றன " என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர். கி.பி.1000 ஆண்டுகளுக்குப்பிறகு உள்ள வரலாற்றிற்கு சான்றுகள் இருக்கின்றன. அதற்கு முந்தைய காலம் மங்கலாகவே உள்ளது என்கிறார்கள். எனவே, வெள்ளைக்காரர்கள் இந்திய வரலாற்றை எழுத முடிவு செய்தார்கள். 1861 இல் கிழக்கிந்திய கம்பெனி, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையை தொடங்கியது. அதன் தலைவர் அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர். இவர் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று பழம்பொருட்களை சேகரித்து வந்தார். மரபு வழிப்பட்ட செய்திகளையும் சேகரித்தார். இப்படி ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கும்போது தான், 1876 இல் ஜெர்மனியின் ஜாக்கோர் வந்து புதைபொருள் ஆய்வு செய்து ஆதிச்சநல்லூர் பழம்பொருட்களை எடுத்து சென்றிருக்கிறார். அவர் வந்து கால் நூற்றாண்டு காலம் கடந்தபிறகு லூயிஸ் லாபிக்யூ என்ற பிரெஞ்சு தேசத்துக்காரர் வந்து அவர் பங்கிற்கு சில பொருட்களை எடுத்து சென்றிருக்கிறார். வடபகுதி மாகாணங்களுக்கு மட்டுமே சென்று வந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் அவர்களுக்கு, தென்னாட்டில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற இந்த புதைபொருள் ஆய்வு ஏன் கண்ணில் படவில்லை ? இத்தனைக்கும் 1876 இல் நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்டூவர்ட் அவர்கள், ஜாக்கோர் வந்து சென்ற இரவே கிழக்கிந்திய கம்பெனி மேலதிகாரிகளுக்கு நீண்டதொரு கடிதம் எழுதுகிறார். நெல்லை மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் என்ற கிராமத்தில், ஜெர்மனியை சேர்ந்த ஜாக்கோர் என்பவர் வந்து ஆய்வு செய்த விபரம், அங்கு தோண்டப்பட்ட குழிகள், கிடைத்த பொருட்கள் என ஒரு பட்டியல் போட்டு எழுதி இருக்கிறார். இது எப்படி அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்களுக்கு தட்டுப்படாமல் போனது என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. இப்போது போலவே, வெள்ளைக்காரர்கள் காலத்திலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையே அது. 1904 இல், பிரெஞ்சு தேசத்து லூயிஸ் லாபிக்யூ வந்து சென்றபின்னர்தான், தேசத்தை ஆண்ட வெள்ளைக்காரர்களுக்கு சற்று சொரணை வந்ததோ என்னவோ, 1904 இறுதியில், அலெக்சாண்டர் ரியா என்ற ஆய்வாளரை ஆதிச்சநல்லூர் பறம்பிற்கு அனுப்பியது. இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அதிகாரபூர்வ அதிகாரியான அலெக்சாண்டர் ரியா, ஆதிச்சநல்லூர் வந்து ஆய்வுகள் மேற்கொண்டார். ஏற்கனவே, இங்கு ஆய்வு செய்யப்பட்ட விபரங்களை அறிந்து கொண்டு, பறம்பில் குழிகளை தோண்டி ஆய்வுகள் செய்தபோது, இவருக்கும் பல்வேறு பழம்பொருட்கள் கிடைத்தன. இரும்பினாலான குறுவாள்கள்,கைக்கோடாரிகள், பெரிய அளவிலான தலையோடுகளும்,எலும்புகளும் கிடைத்தன. இரண்டு சிறுமட்பாண்டங்கள் ஒரு பெரிய மட்பாண்டத்தில் வைக்கப்பட்டிருந்தன. சிறு பாண்டங்களில் உலர்ந்த கூலப்பொருட்கள் மக்கிய நிலையில் இருந்தன. இறந்து போனவர்கள், மறு உலகிற்கு போகும்போது அவர்கள் பயன்படுத்திக்கொள்ள உணவும், இரும்பு கருவிகளும், அவர்கள் விரும்பிய பிற பொருட்களும் இருந்தன. இறந்த மனிதர்கள் மட்டுமின்றி, இறக்கும் நிலையில் இருந்த நூறு வயதிற்கும் மேற்பட்டவர்களையும் இந்த முதுமக்கள் தாழியில் வைத்து புதைத்திருந்தனர். எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதைகுழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளவை என்று சொன்னார். அலெக்சாண்டர் ரியா கண்டுபிடித்த பொருட்கள் யாவும் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இப்போதும் தனி அறையில் இருக்கின்றன. 1913 ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் ரியா அவர்கள் பணி ஓய்வு பெறும்போது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த பொருட்களின் பட்டியலை வெளியிட்டு பெருமை சேர்த்தார். இவர் மட்டும் அதை வெளியிடவில்லை என்றால், ஆதிச்சநல்லூர் நாகரீகத்தை உலகம் அறிந்திருக்காது. சுதந்திர இந்தியாவில், 2004 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை சார்பில் தியாக.சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு குழுவினர் மீண்டும் ஆதிச்சநல்லூரில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களும் பல்வேறு பழம்பொருட்களை, முதுமக்கள் தாழிகளை கண்டெடுத்தனர். இவற்றில் சில, நெல்லை அருங்காட்சியகத்தில் உள்ளன. எனினும், 15 ஆண்டுகள் கடந்தும், ஆய்வு முடிவுகள் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. ஆதிச்சநல்லூர் அருகே உள்ள செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு முடிவுகளை ஏன் வெளியிடாமல் வைத்துள்ளனர் என்பதே அவரது கேள்வி. சத்தியமூர்த்தி குழுவினர் சமர்ப்பித்த ஆய்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று உயர்நீதி மன்றம் சொன்ன பிறகு, இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஆய்வு முடிவுகள் வெளியாகிறதோ இல்லையோ, தமிழக அரசின் தொல்லியல் துறை, இந்த ஆண்டில் ஆதிச்சநல்லூரில் தொடர்ந்து ஆய்வு நடத்த முடிவு செய்து, தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன . ஆதிச்சநல்லூர் மட்டுமின்றி, அருகில் உள்ள சிவகளையிலும் ஆய்வுகள் நடைபெற்று வருவது திருப்தி அளிக்கிறது. வரலாற்றுப் பாடங்களில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள் பற்றி படித்திருப்போம். அவை எல்லாம் 1920 குப்பிறகு ஆய்வு செய்யப்பட்டவை. ஆனால், 1876 இல், இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு என்ற பெருமையை ஆதிச்சநல்லூர் பெற்றுள்ளது தமிழர்களுக்கு பெருமை தானே ?

No comments: