Sunday, September 13, 2020

கழுகுமலை - தென்னகத்து எல்லோரா அந்த உயர்ந்த குன்றின் தென்மேற்கு சரிவில் உள்ள அரைமலை .. வெட்டுவான்கோவில் கைப்பிடிச்சுவற்றைப் பிடித்தபடி மூன்று சிறுவர்கள். " ஒன்..டூ..த்ரீ..." என்று சொல்லி விட்டு, இடுப்பில் இருந்த டவுசரை அவுத்து கையில் பிடித்துக்கொண்டு அம்மணக்குண்டியோடு மேலிருந்து கீழே வேகமாய் பாறையில் தாவி தாவி குதித்தபடி ஓடி சென்று ஆம்பூரணியில் "பொத்தென்று " குதித்தார்கள். கடைசியாய் ஓடிய சிறுவன் நான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், தொல்லியல் துறை வருவதற்கு எல்லாம் முன்பு நடந்த நிகழ்வு இது. சங்க காலத்தில் தொடித்தலை விழுத்தண்டினார் என்ற புலவர் பாடிய ஒரு பாடல் உண்டு. இளமைப்பருவத்தில், மகளிரோடு குளத்தங்கரையில் நீராடும்போது, கை கோர்த்துக்கொண்டும், தழுவிக்கொண்டும், ஒளிவு மறைவு இன்றி, கள்ளம் கபடம் இல்லாமல் விளையாடி மகிழ்ந்த நாட்கள்..பெண்களின் நன்மதிப்பை பெறுவதற்காக,படித்துறையில் ஓங்கி வளர்ந்துள்ள மருதமரத்தில் ஏறி, கரையில் குளித்துக்கொண்டிருக்கும் பெண்கள் மருளும்படி தொப்பென குதித்து ஆழத்திற்கு சென்று மண்ணை கையில் எடுத்து வந்து காட்டிய நாட்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றனவே..இப்போதோ தடி ஊன்றிக்கொண்டு, உடல் நடுங்க , தொடர்ந்து பேச முடியாமல் ஒருசில வார்த்தைகளே வருகின்றன..அந்த நாட்களும் திரும்பி வருமோ என்று அந்தப்புலவர் பாடும் புறநானூற்றுப் பாடல் (243 ) யாண்டு உண்டு கொல்? என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. இளமைக்கால நாட்களை எண்ணி வருந்தாத மனிதர்களும் உண்டோ ? நான் பிறந்த ஊர் கழுகுமலை. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் இருபது கிமீ தொலைவில் இருக்கும் சிற்றூர். அங்குள்ள வெட்டுவான்கோவில் மற்றும் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்பு சிற்பங்கள் புகழ் பெற்றவை. கழுகுமலை ஊரின் சிறப்பினை, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, அருணகிரிநாதரின் திருப்புகழ், பிஷப் கால்டுவெல் எழுதிய " திருநெல்வேலி வரலாறு " குருகுகதாசப்பிள்ளையின் திருநெல்வேலிசீமை சரித்திரம் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ள இயலும். இதுபோக தளவாய்புர செப்பேட்டிலும் பல்வேறு செய்திகள் உள்ளன. கழுகுமலை ஊரின் ஆதிப்பெயர் நெச்சுரம். இப்போது வறண்ட பகுதியாக இருந்தபோதும், பல ஆண்டுகளுக்கு முன்பு நெல் வயல்கள் சூழ்ந்த மலைப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். சமண மதம் தழைத்தோங்கியிருந்த காலத்தில், சமண துறவிகள் தங்குவதற்கு மலைக்குன்றுகளை தான் தேர்ந்தெடுத்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்,பெண் சமணத்துறவிகள் கழுகுமலை வந்து சமண சித்தாந்தங்களை படித்து சென்றுள்ளனர். அவ்வகையில் சமணம் போதித்த பல்கலைக்கழகம் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த கலாசாலையை குழுவாணைநல்லூர் என்று சொல்கிறார்கள். இது ஒரு உறைவிடப்பள்ளியாகும். பள்ளி என்ற சொல்லே சமணர்களிடம் இருந்து வந்ததே. பகலில் மலையுச்சியில் இருந்து கீழே இறங்கி வரும் சமணத்துறவிகள் வீடுகளில் உணவை தானமாக பெற்றுக்கொண்டு, குழந்தைகளை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அவர்கள் படுக்கும் பள்ளியறையில் (சமணப்படுகை ) அவர்களை அமர வைத்து பாடம் போதித்ததால், அது பள்ளிக்கூடம் ஆயிற்று என்று பேரா.தொ.ப. சொல்வார். அவ்வாறு இங்கு தங்கி பயிலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும். இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் இலவசமாக உணவு உண்ண பயிர் நிலங்களை தானமாக இருவர் வழங்கி உள்ளனர். மேலும், இரு கிணறுகளையும் தங்களின் சொந்த செலவில் அவர்கள் வெட்டி தந்துள்ளனர் என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன. குணசகாரப்படாரர் தலைமையில் இந்த கலாசாலை இயங்கி வந்துள்ளது. யாப்பெருங்கலக்காரிகை நூலாசிரியர் இங்கு வந்து சமண சித்தாந்தம் பயின்றிருக்கிறார். இங்கு வந்து படித்த மாணாக்கர்கள், படித்து முடித்து விட்டு செல்லும்போது, சமண தீர்த்தங்கரர்களின் சிலையை வடித்து விட்டு, கீழே சிலை வடித்த சிற்பியின் பெயர், மாணவர் பெயர்,ஊர் ஆகியவற்றையும் பொறித்துவிட்டு சென்றுள்ளனர். அவை பெரும்பாலும் வட்டெழுத்துக்கள். ஒன்றிரண்டு மட்டுமே தமிழ்க்கல்வெட்டுக்கள். இப்படியாக 102 சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளும், கல்வெட்டுக்களும் இங்கே காணப்படுகின்றன. மகாவீரர்,ஆதிநாதர்,நேமிநாதர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும், பத்மாவதி, அம்பிகா போன்ற இயக்கன்,இயக்கிகளின் சிற்பங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இந்த சமண தலத்தில் உள்ள தீர்த்தங்கரர்களின் சிலை வழிபாட்டிற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் செ.மா.கணபதி ஐயா தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். கழுகுமலை குன்றின் தென்மேற்கு சரிவில் உள்ள வெட்டுவான்கோவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா கைலாசநாதர் கோவிலைப்போன்றே திராவிட கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது.. கைலாசநாதர் கோவில் ஒரே கல்லில் எழுப்பப்பட்டது போலவே, வெட்டுவான்கோவிலும் ஒரே கல்லில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதை குடைவரைக்கோவில் என்று சொல்வார்கள். வெட்டுவான்கோவில் முற்றுப்பெறாத கோவில். இது பற்றி பல தொன்மக்கதைகள் இங்குண்டு. கழுகுமலையில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பிக்கு நீண்ட நாள் கழித்து ஒரு ஆண் மகன் பிறந்தான். சிற்பியும் அவனது மனைவியும் அவனை ரொம்ப செல்லமாக வளர்த்து வந்தனர். அவன் வளர்ந்தபின்னரும் வேலை எதுவும் செய்யாமல் சும்மா சுற்றி வந்த போது, சிற்பி அவனை கண்டித்ததால் அவன் கோபித்துக்கொண்டு ஊரை விட்டு சென்று விட்டானாம். மகனை இழந்த சிற்பி மனம் வெதும்பிபோய் சிலகாலம் கழித்து கழுகுமலை குன்றின் வடதுபுறத்தில் சிற்பங்களை செதுக்க தொடங்கினாராம். அதே சமயம் மலையின் உயரம் குறைந்த தாழ்வான பகுதியில், வேறு யாரோ ஒருவர் உளியால் செதுக்கிக்கொண்டிருக்கிறார். தந்தை சிற்பி உளியால் செதுக்கும் அதே நேரத்தில், அதன் எதிரொலி போல , கீழே உள்ள சிற்பியும் உளியை உபயோகித்ததால், இன்னொரு சிற்பி வேலை பார்ப்பது பெரியவருக்கு தெரியவில்லை. ஒருநாள், வெற்றிலை போடுவதற்காக, தந்தை சிற்பி உளியை கீழே வைத்த போது, கீழே உளிச்சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. கீழே என்ன உளிச்சத்தம் என்று உற்றுக்கவனித்தார் தந்தை. (தொடரும் )

No comments: