Sunday, September 13, 2020

நெல்லையில் லெனின் சிலை ---------------------------------திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அவ்வை முளரி நுண்கலைக்கூடம் கடந்த நான்கு மாத காலம் மிகுந்த பரபரப்பாக இருந்தது. தோழர் லெனின் சிலை உருவான இடம். தினமும் நாலைந்து தோழர்களாவது இங்கே வந்து சிலை உருவாவதை நேரில் பார்த்து வியந்தவண்ணம் சென்றார்கள். கைத்தறி துணியில் பனியனும், கரண்டைக்காலுக்கு மேல் நிற்கும் நாலு முழ வேட்டியுமாய் கிராமத்து விவசாயியை போலிருக்கும் இந்த மனிதர், தேசிய , சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி என்று அறியும்போது பலருக்கும் வியப்பு ஏற்படும். ஜப்பானில் 1996 இல் பனிச்சிற்பத்தை உருவாக்கி விருது பெற்றவர். கொழும்பில் 1997 இல் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் இவரது கலைப்படைப்பிற்கு பரிசு கிடைத்தது. சென்னை ஓவியக்கல்லூரியின் முன்னாள் முதல்வர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓவியர் சந்துரு அவர்களிடம், லெனினோடு இருந்த அனுபவத்தை கேட்டபோது... " ஆமாம்..இந்த நான்கு மாதங்கள் தோழர் எங்களோடு இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற சிலைகள் செய்வதற்கும், இந்த சிலை செய்ததற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. சாதாரண நேரத்தில் ஒரு சிலையை இயல்பாக செய்வது வேறு. வடக்கே ஒரு மாநிலத்தில், நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி சில காரணங்களால் தோல்வியுறும்போது, ஆட்சியை கைப்பற்றியவர்கள் சித்தாந்தத்தை தகர்ப்பதாக நினைத்துக்கொண்டு, லெனின் சிலையை தகர்த்தபோது, பலரையும் போல நானும் அதிர்ந்து தான் போனேன். அடுத்தடுத்து இது போன்ற செய்திகள் வரும்போது, சிலையை உடைத்தால் ஏன் அதற்கு ஒப்பாரி வைக்கணும் ..நீ அங்கெ உடைத்தால் நாங்கள் இங்கே எழுப்புவோம்டா ன்னு சொல்றது தானே சரி.. (சிரிக்கிறார் )... அதைத்தான் தோழர் பாஸ்கரன் செய்தார். ஒரு அதிகாலைப்பொழுதில் அவர் இங்கே வந்து, தோழர் லெனின் சிலையை எட்டடி உயரத்தில் செய்ய வேண்டும்..எங்கள் மாவட்டக்குழு அலுவலகத்தில் நிறுவ இருக்கிறோம்..என்றார். ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது. ஏனெனில், லெனினை ஒரு வெளிநாட்டு சித்தாந்தத்தின் குறியீடாக எவருமே நினைக்க இயலாது. அவர் எல்லா தேசத்திற்கும், உழைக்கும் மக்களின் உந்து சக்தியாய் திகழ்ந்த தலைவர். மண்ணிற்கேற்ற மார்க்சியம் என்பதை உணர்ந்து ரஷ்ய மண்ணிற்கேற்றபடி செயல்படுத்தியவர். அவரது சிலையை உருவாக்குவது பெருமையாக இருந்தது. சிலை எட்டடியில் இருந்து பத்தடியாய் உயர்ந்து, பிறகு பெலோனியாவில் இருந்த பதினோரு அடியை விட கூடுதலாய் இருக்க வேண்டும் என நினைத்து பன்னிரண்டு அடியாய் செய்யப்பட்டது. இந்த நாலைந்து மாதங்களில் இரவு பகலாய் உழைத்தவர்கள் எனது அருமை மாணவர்கள் பரணி,ராமச்சந்திரன் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர். சிலை உருவாக்கத்தின்போது தோழர் வாசுகி வந்து பார்த்தாங்க..பின்னர் தோழர் நல்லக்கண்ணு வந்து பார்த்தாங்க...நல்லா வந்திருக்கு என்று எல்லோரும் சொன்னது திருப்தி..தினமும் பல்வேறு தோழர்கள் இங்கே வந்தவண்ணம் இருந்தாங்க..அது எங்கள் குழுவிற்கு உற்சாகம் அளித்தது. சோவியத்தின் பிர்ச் மரங்களின் மத்தியில் வாழ்ந்த லெனின், இங்கே எங்களது கலைக்கூடத்தில் வேப்ப மரங்களின் குளுமையை ரசித்தபடி எங்களோடு வாழ்ந்தார் என்றுதான் சொல்வேன்.. நாலைந்து மாதங்கள் எங்களோடு இருந்த மகத்தான ஒரு தலைவர் ,என்னோட வார்த்தையில் சொல்லனும்னா , எங்க வீட்டில் இருந்த பெரிய மனுஷன் , இப்போ இல்லாதது, ஒரு வெற்றிடம் போல கூட இருக்குது..(சிரிக்கிறார் ) அவரோடு சிலை உருவாக்கத்தில், பெரும்பங்காற்றிய ஓவியர் பரணி , நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காத்தமுத்து அவர்களின் மகன் வயிற்று பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அப்பாவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவரே. பரணியிடம் பேசியபோது... " சந்துரு சார், என்னிடம் இந்த பெரும்பொறுப்பை ஒப்படைத்தபோது சந்தோசமாய் இருந்தது. லெனின் எனக்கு பூட்டன் தாத்தா மாதிரி. நிறைய படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். சிலை உருவாகும்போது, பல தோழர்கள் வந்து பார்த்தார்கள். ஒருநாள், இரண்டு பேர் வந்து கேள்விகளாய் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நானும், சிலையில் கவனம் செலுத்தியபடி பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். இந்த சிலை என்ன மெட்டல்..என்ன வெயிட் வரும்..இதுல வேற என்னல்லாம் சேர்ப்பீங்க..என்று கேட்டுக்கொண்டே இருந்தாங்க..அப்போதான் திரும்பி அவங்க முகத்தை பார்த்தேன்.. எதுக்கு இதெல்லாம் கேக்கீங்க..என்றேன். மேலே இருக்கவங்க கேட்டா சொல்லணும்ல..என்றார்கள். அவங்களை இங்கே வர சொல்லுங்க..எப்படி செய்யணும்னு சொல்லி தரேன் என்று சொன்னேன்.. அவங்க முகத்தை பார்த்தவுடனேயே கண்டுபிடித்து விட்டேன். இவங்க க்யூ பிரான்ச் போலீஸ் ஆக இருக்கும் என்று. நாங்க சிபிஐ ன்னு சொல்லிட்டு போனாங்க.. அதன்பிறகு கூட இருந்த நண்பர்கள் சொன்னாங்க..ஒரு மாசமா இவங்க வாசல் பக்கம் நின்னு நோட்டம் பார்த்துட்டு இருந்தாங்க என்று. இந்த மனுஷனை கண்டால் , அதிகார வர்க்கத்திற்கு இன்னமும் நடுக்கம் இருக்கு போல ..ஒருவேளை உசிரோடு எழுந்து வந்து விடுவார்னு நெனைச்சாங்களோ என்னவோ...என்று சிரிக்கிறார் பரணி. ----------------------------எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் ----------------

No comments: